பாடல் #1624

பாடல் #1624: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தம ருள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
யிடும்பையு மில்லை யிராப்பக லில்லைக்
கடும்பசி யில்லைக் கற்றுவிட் டோர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒடுஙகி நிலைபெறற வுததம ருளளம
நடுஙகுவ திலலை நமனுமங கிலலை
யிடுமபையு மிலலை யிராபபக லிலலைக
கடுமபசி யிலலைக கறறுவிட டொரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரா பகல் இல்லை
கடும் பசி இல்லை கற்று விட்டோர்க்கே.

பதப்பொருள்:

ஒடுங்கி (ஆசைகளும் புலன்களும் ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி) நிலை (இறைவனை பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையை) பெற்ற (பெற்ற) உத்தமர் (உத்தமர்களான தவசிகளின்) உள்ளம் (உள்ளமானது)
நடுங்குவது (எதற்காகவும் அச்சப் படுவதும்) இல்லை (இல்லை) நமனும் (இறப்பு என்பதும்) அங்கு (அவருக்கு) இல்லை (இல்லை)
இடும்பையும் (துன்பம் என்பதும்) இல்லை (அவருக்கு இல்லை) இரா (இரவு) பகல் (பகல் எனும் கால வேறுபாடுகளும்) இல்லை (அவருக்கு இல்லை)
கடும் (கடுமையான) பசி (பசி தாகம் ஆகிய) இல்லை (உணர்வுகளும் இல்லை) கற்று (உலக அறிவை கற்று) விட்டோர்க்கே (அதை விட்டு விட்டு உண்மை அறிவை பற்றி இருக்கின்ற தவசிகளின் நிலையாகும்).

விளக்கம்:

ஆசைகளும் புலன்களும் ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி இறைவனை பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையை பெற்ற உத்தமர்களான தவசிகளின் உள்ளமானது எதற்காகவும் அச்சப் படுவது இல்லை. இறப்பு என்பது அவருக்கு இல்லை. துன்பம் என்பது அவருக்கு இல்லை. இரவு பகல் எனும் கால வேறுபாடுகள் அவருக்கு இல்லை. கடுமையான பசி தாகம் ஆகிய உணர்வுகள் அவருக்கு இல்லை. இவை எல்லாம் உலக அறிவை கற்று அதை விட்டு விட்டு உண்மை அறிவை பற்றி இருக்கின்ற தவசிகளின் நிலையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.