பாடல் #1425

பாடல் #1425: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

கண்டங்க ளொன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்க ளொன்பதுங் கண்டா யரும்பொருள்
கண்டங்க ளொன்பதுங் கண்டவக் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடஙக ளொனபதுங கணடவர கணடனர
கணடஙக ளொனபதுங கணடா யருமபொருள
கணடஙக ளொனபதுங கணடவக கணடமாங
கணடஙகள கணடொர கடுஞசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டங்கள் ஒன்பதும் கண்டு அவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டு ஆய் அரும் பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டு அவ கண்டம் ஆம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே.

பதப்பொருள்:

கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும் [1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞா 7. சகஸ்ரதளம் 8. துவாதசாந்த வெளி 9. பரவெளி]) கண்டு (கண்டு) அவர் (உணர்ந்து கொண்டவர்களே) கண்டனர் (உண்மையான சக்தி மயங்களை தரிசித்தவர்கள் ஆவார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும்) கண்டு (கண்டு உணர்ந்தவர்கள்) ஆய் (அந்த சக்தி மயங்களே) அரும் (கிடைப்பதற்கு மிகவும் அரிய) பொருள் (பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்து கொள்வார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும்) கண்டு (கண்டு உணர்ந்தவர்கள்) அவ (அந்த சக்தி மயங்களாக இருக்கும்) கண்டம் (இறை சக்தியே தாமாகவும்) ஆம் (ஆகி இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) கண்டோர் (ஒன்பதாகவும் இருக்கின்ற இறையை தரிசித்த சாதகர்களே) கடும் (கடுமையான) சுத்த (சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும்) சைவரே (அசுத்த சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

பாடல் #867 இல் உள்ளபடி தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞா 7. சகஸ்ரதளம் 8. துவாதசாந்த வெளி 9. பரவெளி எனும் சந்திர மண்டலம் ஆகிய ஒன்பது சக்தி மயங்களையும் பாடல் #1424 இல் உள்ள பயிற்சியின் படி சாதகம் செய்து கண்டு உணர்ந்து கொண்டவர்களே உண்மையான சக்தி மயங்களை தரிசித்தவர்கள் ஆவார்கள். இவற்றை கண்டு உணர்ந்து கொண்ட சாதகர்கள் அந்த சக்தி மயங்களே கிடைப்பதற்கு மிகவும் அரிய பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு சாதகத்தை தொடர்ந்து செய்து அந்த சக்தி மயங்களாக இருக்கின்ற இறை சக்தியே தாமாகவும் ஆகி இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்பது சக்தி மயங்களாக இருக்கின்ற இறையை தரிசித்த சாதகர்களே கடுமையான சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும் அசுத்த சைவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.