பாசத்தில் இட்டது அருள் தந்த பாசத்தில் நேசத்தை விட்டது அருள் தந்த நேசத்தில் கூசு அற்ற முத்தி அருள் தந்த கூட்டத்தில் நேசம் அற்றும் தோன்றா நிலை அருள் ஆமே.
பதப்பொருள்:
பாசத்தில் (குடும்ப பாசத்தில்) இட்டது (இருக்கும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) பாசத்தில் (பாசத்தினால் ஆகும்) நேசத்தை (அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை) விட்டது (விடும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) நேசத்தில் (பேரன்பினால் ஆகும்) கூசு (அந்த பேரன்பில் நிலை குறைவு) அற்ற (இல்லாத) முத்தி (முக்தியானது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) கூட்டத்தில் (திருவருள் சேர்க்கையினால் ஆகும்) நேசம் (அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும்) அற்றும் (இல்லாத) தோன்றா (எண்ணங்கள் தோன்றாத) நிலை (நிலையே) அருள் (பேரருள்) ஆமே (ஆகும்).
விளக்கம்:
பாடல் #1801 இல் உள்ளபடி இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் குடும்ப பாசத்தில் இருக்கும் படி எம்மை வைத்து, அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை விடும் படி செய்து, உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் பேரன்பில் குறைவு இல்லாத முக்தி நிலையை கொடுத்து, அவனது திருவருளை எம்மோடு சேர்த்துக் கொடுத்தான். அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும் இல்லாத, எண்ணங்கள் தோன்றாத, அமைதியான நிலையே பேரருள் ஆகும்.
அருள் ஆல் அமுத பெரும் கடல் ஆட்டி அருள் ஆல் அடி புனைந்து ஆரமும் தந்து இட்டு அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.
பதப்பொருள்:
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அமுத (அமுதத்தால் நிறைந்த) பெரும் (மிகப் பெரிய) கடல் (கடலில்) ஆட்டி (எம்மை மூழ்க வைத்து நீராட்டி) அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அடி (அவனுடைய திருவடியை) புனைந்து (எமது தலைமேல் இருக்கும் படி செய்து) ஆரமும் (அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும்) தந்து (எமக்கு கொடுத்து) இட்டு (யாம் அணியம் படி செய்து) அருள் (அவனது திருவருள்) ஆன (ஆகிய) ஆனந்தத்து (பேரானந்தத்தினால்) ஆர் (நிறைந்து இருக்கும்) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (எமக்கு ஊட்டிக் கொடுத்து) அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) என் (எமது) நந்தி (குருநாதனாகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்து கொண்டானே).
விளக்கம்:
இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் அமுதத்தால் நிறைந்த மிகப் பெரிய கடலில் எம்மை மூழ்க வைத்து நீராட்டி, அவனது திருவடிகளை எமது தலை மேல் வைத்து, அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும் எம்மை அணிய வைத்து, பேரானந்தமாகிய அமிழ்தத்தை எமக்கு ஊட்டி, எமது குருநாதனாகிய இறைவனே எமக்குள் புகுந்து கொண்டான்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். திருமூலரின் 7 சீடர்களில் ஒருவரான காலாங்கிநாதர் இங்கு சித்தேசுவரசாமியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அலங்கார நுழைவு வாசலை கடந்ததும் விநாயகர் அருளுகிறார். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இக்கோயிலில் காளியம்மன் செல்வ விநாயகர் சன்னதிகளும் அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும் கஞ்சமலையின் மீது மேல்சித்தர் கன்னிமார் கோயிலும் உள்ளன. சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக் குளங்கள் உள்ளன. கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக் குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக் குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீர் குளத்தில் நிறைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்திக்கு ஏற்ப சித்தேசுவரசாமி இந்த மூலிகைகளை காற்றில் பரவ விட்டும் குளத்து நீரின் வழியாகவும் மேலும் பல வகைகளின் வழியாகவும் தனது குரு திருமூலர் காட்டிய வழியில் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறார். திருமூலரின் சீடராக இந்த கஞ்சமலை காலாங்கிநாதர் விளங்குகிறார். இதனை திருமூலர் தனது திருமந்திர பாடல்கள் வழியாக உணர்த்துகிறார்.
பாடல் #69: பாயிரம் – குருபாரம்பரியம்
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே.
காலாங்கி என்ற இவரது பெயருக்கு பல பெயர் காரணங்கள் சொல்லப்படுகிறது. கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார். மேலும் அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்று பொருள். திருமூலரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றார்.
முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. கைலாயத்தில் இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகள் இந்த மலையில் இருப்பதை அறிந்து கொண்ட 18 சித்தர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான திருமூலர் அதனைக் காண இந்த மலைக்கு வந்தார். இங்கு உள்ள மூலிகைகள் வயது மூப்பும் மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக் கூடிய மூலிகைகள் ஆகும். இவர் தனது முதன்மை சீடரான கஞ்சமலை காலாங்கிநாதரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திருமூலரும் காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் சில காலம் தங்கியிருந்தார்கள். இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகளை தனது சீடரான காலாங்கி நாதருக்கு காட்டி அதனைப் பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார். தனது குருவான திருமூலர் சொல்லிக் கொடுத்தபடி அதனைப் பயன் படுத்திய காலாங்கிநாதர் என்றும் அழியாத இளமைத் தோற்றத்தை பெற்றார். காலாங்கிநாதருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தபின் அங்கிருந்து கிளம்ப திருமூலர் முடிவு செய்தார். அவருடன் காலாங்கி நாதரும் கிளம்ப தயாரானார். அப்போது திருமூலர் காலாங்கிநாதரிடம் நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.
குருவின் உத்தரவின் படி காலாங்கிநாதர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். வயதான தோற்றத்தில் இருந்த தான் இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி பொதுமக்களை அழைத்து வந்து காலாங்கிநாதரை தேடும் போது அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் காலாங்கி நாதர் தவக் கோலத்தில் காட்சி அளித்தார். அங்கிருந்த மக்களின் நோய்களை அங்கிருந்த மூலிகைகளை வைத்து சில வினாடிகளில் தீர்த்து வைத்தார். இதை கண்ட மக்கள் அவரை வணங்கி அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கி நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 ஆவது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.
சுமார் 8000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சமலை மிகுந்த மூலிகை வளம் கொண்டது. தங்கம் இரும்பு தாமிரம் ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.
சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது.
“திருமந்திரம் பாடல் #1823 – உள்ளம் பெரும் கோயில்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அருளில் பிறந்து இட்டு அருளில் வளர்ந்து இட்டு அருளில் இழிந்து இளைப்பு ஆற்றி மறைந்து இட்டு அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.
பதப்பொருள்:
அருளில் (இறைவன் தமது திருவருளாலே) பிறந்து (உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி) இட்டு (செய்து) அருளில் (இறையருளாலே) வளர்ந்து (அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி) இட்டு (செய்து) அருளில் (இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில்) இழிந்து (ஆசைகளை குறையும் படி செய்து) இளைப்பு (ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை) ஆற்றி (நீக்கி) மறைந்து (உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை) இட்டு (வெளிப்படும் படி செய்து) அருள் (இறையருளால்) ஆன (கிடைக்கின்ற) ஆனந்தத்து (பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து) ஆர் (தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (ஊட்டிக் கொடுத்து) அருள் (இறையருள்) ஆல் (ஆகவே) என் (எமது) நந்தி (குருநாதராகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்தார்).
விளக்கம்:
இறைவன் தமது திருவருளாலே உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி செய்து, இறையருளாலே அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி செய்து, இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில் ஆசைகளை குறையும் படி செய்து, ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை நீக்கி, உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை வெளிப்படும் படி செய்து, இறையருளால் கிடைக்கின்ற பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து, தெகிட்டாத அமிழ்தத்தை ஊட்டிக் கொடுத்து, இறையருள் ஆகவே எமது குருநாதராகிய இறைவன் எமக்குள் புகுந்தார்.
அறிவில் அணுக அறிவு அது நல்கி பொறி வழி ஆசை புகுத்தி புணர்த்தி அறிவு அது ஆக்கில் அருள் அது நல்கும் செறிவோடு நின்றார் சிவம் ஆயினாரே.
பதப்பொருள்:
அறிவில் (ஞானத்தின் மூலம்) அணுக (இறைவனை அடைவதற்கு) அறிவு (தேவையான அறிவை) அது (உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன்) நல்கி (கொடுத்து) பொறி (உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின்) வழி (வழியே) ஆசை (பல விதமான ஆசைகளை) புகுத்தி (உடலுக்குள் புகுத்தி) புணர்த்தி (அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து) அறிவு (ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான) அது (ஞானத்தை) ஆக்கில் (உயிர்கள் பெற்றுவிட்டால்) அருள் (அதன் பலனாக திருவருளை) அது (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே) நல்கும் (கொடுத்து) செறிவோடு (அந்த அருளில் உச்ச நிலையை அடைந்து) நின்றார் (நிற்கின்ற அடியவர்கள்) சிவம் (சிவமாகவே) ஆயினாரே (ஆகி விடுவார்கள்).
விளக்கம்:
ஞானத்தின் மூலம் இறைவனை அடைவதற்கு தேவையான அறிவை உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன் கொடுத்து, உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின் வழியே பல விதமான ஆசைகளை உடலுக்குள் புகுத்தி, அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து, ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான ஞானத்தை உயிர்கள் பெற்றுவிட்டால் அதன் பலனாக திருவருளை உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே கொடுப்பான். அப்படி இறைவன் கொடுத்த அருளில் உச்ச நிலையை அடைந்து நிற்கின்ற அடியவர்கள் சிவமாகவே ஆகி விடுவார்கள்.
அருள் எங்கும் ஆன அளவை அறியார் அருளை நுகரார் அமுதம் உகந்தோர் அருள் ஐங் கருமத்து அதி சூக்கம் உன்னார் அருள் எங்கும் கண் ஆனது ஆர் அறிவாரே.
பதப்பொருள்:
அருள் (இறையருளே) எங்கும் (அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும்) ஆன (வியாபித்து இருக்கின்ற) அளவை (அளவை) அறியார் (யாரும் அறிவதில்லை) அருளை (இறையருளை) நுகரார் (அனுபவிக்காதவர்கள்) அமுதம் (அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை) உகந்தோர் (மட்டும் அருந்த விரும்புகின்றார்கள்) அருள் (இறையருளே) ஐங் (ஐந்து விதமான) கருமத்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களின்) அதி (மிக) சூக்கம் (நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை) உன்னார் (நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள்) அருள் (இறையருளே) எங்கும் (அனைத்தையும்) கண் (பார்க்கின்ற கண்கள்) ஆனது (ஆகவும் இருப்பதை) ஆர் (யாரும்) அறிவாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
இறையருளே அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபித்து இருக்கின்ற அளவை யாரும் அறிவதில்லை. இறையருளை அனுபவிக்காதவர்கள் அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை மட்டும் அருந்த விரும்புகின்றார்கள். இறையருளே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களின் மிக நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள். இறையருளே அனைத்தையும் பார்க்கின்ற கண்களாகவும் இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள்.
நான் அறிந்து அன்றே இருக்கின்ற ஈசனை வான் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறியானை பின்னை யார் அறிவாரே.
பதப்பொருள்:
நான் (எமக்குள்ளே யான் ஆராய்ந்து) அறிந்து (அறிந்து கொண்டவனாகிய) அன்றே (உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே) இருக்கின்ற (அதற்குள் மறைந்து நிற்கின்ற) ஈசனை (இறைவனை) வான் (வானுலகத்து தேவர்களும்) அறிந்தார் (இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும்) அறியாது (அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல்) மயங்கினர் (நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள்) ஊன் (நான் என்கின்ற உடம்பு எது என்று) அறிந்து (அறிந்து கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே) உயிர்க்கின்ற (உயிராக) ஒண் (ஒன்றி இருக்கின்ற) சுடர் (ஒளி வடிவான இறைவனை) தான் (தமக்குள்ளே ஆராய்ந்து) அறியானை (தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன்) பின்னை (உயிர் போன பின்பு) யார் (எப்படி) அறிவாரே (அறிந்து கொள்ளப் போகின்றான்?).
விளக்கம்:
எமக்குள்ளே யான் ஆராய்ந்து அறிந்து கொண்ட இறைவனே உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே அதற்குள் மறைந்து நிற்கின்றான். வானுலகத்து தேவர்களும் அந்த இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும் அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல் நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள். நான் என்கின்ற உடம்பு எது என்று அறிந்து கொண்டு அதற்கு உள்ளே உயிராக ஒன்றி இருக்கின்ற ஒளி வடிவான இறைவனை தமக்குள்ளே ஆராய்ந்து தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன், உயிர் போன பின்பு எப்படி அறிந்து கொள்ளப் போகின்றான்?