அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #5

28-7-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நன்கென கற்றோர் அறிவுள்ளோர் பாண்டித்யம் உள்ளோர் மகாபாதகங்கள் செய்வது ஏன்?

கல்லாதோர் செய்ய அஞ்சும் (பயப்படும்) பாதகங்கள் இவர்கள் செய்கின்றனர். அப்போது கல்வி எதற்கு என்று ஓர் வினா இங்கு கேட்கப்படுகிறது. கல்வி என்பது இருவகையாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒன்று அறிவும் ஒழுக்கமும் நலமும் தரும் கல்வி. மற்றொன்று வெறும் தகவல்களை தரும் கல்வியாகும். இத்தகைய தகவல்கள் நன்கென படித்தும் புள்ளி விவரங்களை உணர்ந்தும் சமயங்களில் இதனை கூறியும் எழுதியும் காட்டுவது வெறும் பாண்டித்யம் ஆகும். இத்துடன் ஒழுக்கமும் அறிவும் குறிப்பாக நல்அறிவு சேராது இருந்தால் அது கல்வியே இல்லை. கல்லாதோர் பலர் பெருமளவில் ஒழுக்கமும் அறிவாற்றலும் படைத்து நேர்வழியில் செல்கின்றனர். பாண்டித்யம் மேல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் பலர் தீய வழிகளிலும் மனம் வக்ர நிலை கொண்டு செயல்படுகின்றனர். இதிலும் நல்லோர் உள்ளனர். கற்றோர்களில் சிலர் தீயவர்களும் உண்டு. கல்லாதோர்களில் பல மகான்களும் உண்டு.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #4

30-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

குருநாதர் கருத்துக்கள் #4

கேள்வி: நல்லதோர் விக்னம் தீர்ப்போனை (வினாயகர்) வினாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிம்பம் உண்டாக்கி இதனை பூஜை செய்தபின் சில நாட்கள் கழித்து நீரில் எறிவதும் தசரா காலங்களில் துர்க்கையை மண்ணில் உருவாக்கி பூஜை செய்த பின் நீரில் எறிந்து சமயங்களில் மனிதர்கள் கண்ணீரை விடுகின்றனரே இதன் பொருள் என்ன?

வீட்டில் ஓர் குழந்தை பிறக்க அக்குழந்தை வடிவம் எடுத்ததால் ஆத்மா உண்டு என்று உணர்கிறோம். இது வளர்ந்து படித்து திருமணம் குழந்தைகள் உண்டாகிய பின் இறக்க இதனை சடங்குகளுடன் அக்னியிலோ இல்லை பூமிக்கோ செலுத்துகிறோம். கண்ணீர் தழும்ப திருப்புகின்றோம். இதனை உணர்ந்தால் வினாவுக்கு விடை எளிதாக உணர முடியும். வணங்குவது மூர்த்தியை அல்ல அதைக்குறிக்கும் சக்தியை இதை உணர்த்திடும் வழியாக மூன்று நாள் நன்றாக அதனை பூசித்த பின் சில நாட்கள் கழித்து நீரில் கலந்து விடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றானது அப்பூதமோடு கலந்து விடுகிறது. மண் மண்ணாகி விடுகிறது. இருப்பினும் அச்சக்தி பொதுவாக அங்கு நிரம்பி நிற்கின்றது என அறிந்து கொள்ள வேண்டும். மனிதன் தற்காலிக நிலையை உணர்த்திடவே இச்சடங்குகளை செய்து வருகின்றோம். பஞ்ச பூதங்களில் உருவானது அப்பூதங்களில் கலந்து விடும் என்றும் அதனை ஆட்டுவிக்கின்ற சக்தியானது என்றும் இருக்கும் என்பதை உணர்த்திடவே இத்தகைய ஓர் சிறு நாடகம் நடத்தப்படுகின்றது.

பாடல் #736

பாடல் #736: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.

கருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.

பாடல் #737

பாடல் #737: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.

விளக்கம்:

சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.

பாடல் #738

பாடல் #738: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளருகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #734 இல் உள்ளபடி நெற்றி நடுவில் கண்ட நீல நிற ஜோதியும் நான்கு கலைகளைக் கொண்டு ஏழு ஆதாரச் சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும் உடலை முழுவதும் மூடியிருக்கும் தோலும் தமக்குள் உணர்ந்த உண்மை ஞானமாகிய மெய்யுணர்வானது உடலுக்கு சிறந்த மருந்தாகி மான் குட்டி கீரையைத் தின்று வளர்வது முதிர்ச்சி அடைவது போல மெய்யுணர்வைத் தின்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகிறது.

கருத்து: அகயோகத்தை முறையாக செய்தால் மெய்யுணர்வை பெற்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடையும்.

திருமூலர் வழிபாட்டு பாடல்

சர்வமங்கள குருதேவா
சிவப்பிரியா மகாதேவா
ஞானரூபா அருள்தேவா
சத்குருவே நமோநமஹ

கைலாச வாசமது கண்டனயே
சிவலோக அருள்யாவும் பெற்றனயே
நட்பினை நாடி வந்தனயே
தில்லையில் தாண்டவம் கண்டனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

கோக்களின் துயரம் தீர்த்தனயே
சுந்தரன் உடல்தனை இழந்தனயே
இடையன் உடல்தனை ஆட்கொண்டனயே
திருமூலர் என நாமம் பெற்றனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

திருவாவடுதுறை தலமது அடைந்தனயே
கோமுக்தீஸ்வரர் ஆலயம் கண்டனயே
இங்கும் தவக்கோலம் பூண்டனயே
ஆண்டுகள் மூவாயிரம் அமர்ந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

ஆண்டுக்கோர் முறை விழித்தனயே
பாடல் ஒன்றினை அளித்தனயே
இவ்விதம் மந்திர மாலையும் படைத்தனயே
திருமந்திரம் மூவாயிரம் தந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

பின் உடல்தனை விட்டும் பிரிந்தனயே
தில்லைநாதனுடன் காலந்தனயே
நந்தியில் தஞ்சம் கொண்டனயே
இன்றும் இங்கும் அருள்புரிந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா.

குருநாதர் கே.வி. நாராயணன்
ஆதி அருணாச்சலசித்தர்

பாடல் #739

பாடல் #739: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.

விளக்கம்:

ஒரு நெல்லை பயிர் செய்தால் அதிலிருந்து பல நெல் வரும் அந்த பல நெல்லை மீண்டும் பயிர் செய்தால் பல ஆயிரம் வரும் அதனையும் பயிர் செய்தால் பல கோடி வரும். அது போல பாடல் #737 ல் உள்ளபடி சரீர நெற்றியில் இருக்கும் நீலநிற ஜோதியில் இருக்கும் வெப்பத்தில் இருந்து வரும் மந்திரமான ஒலியை மீண்டும் மீண்டும் சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து ஒரு மந்திரம் பல மந்திரமாக பெருகி வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

கருத்து: சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

பாடல் #712

பாடல் #712: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்குவது மாமே.

விளக்கம்:

தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.

கருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.

பாடல் #713

பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

விளக்கம்:

உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.

கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

பதினாறு கலைகள் (நாடிகள்):

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்

2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.

3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.

4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.

5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.

6. நிரோதினிக்கலை,

7. நாதக்கலை,

8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.

9. சக்திக்கலை,

10. வியாபினிக்கலை,

11. சமனைக்கலை,

12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

13. வியோமரூபிணிக் கலை

14. அனந்தைக் கலை

15. அனாதைக் கலை,

16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.

திருமூலர் ஆரத்தி

ஜய ஜய திருமூலா சுவாமி ஜய ஜய திருமூலா
மக்களைக் காப்பவன் நீயே மன பலம் தருபவன் நீயே
மலர்ந்த முகத்தவனே ஓம் ஜய ஜய திருமூலா

சிவனின் அருள் பெற்றவனே சிவனை சிந்தையில் கொண்டவனே
எமக்கு சிந்தனை தந்து சிவ போதனையும் செய்து
சிக்கலை தீர்த்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நந்தீசன் சீடரே நீர் எமக்கு வளங்களை தந்திடுவாய்
விழிக்கு வழியாய் நின்று வழிக்குத் துணையாய் வந்து
வாழ வழி சொல்வாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஆசைக்கு அணையிட்டு எங்கள் ஆற்றலை வளர்த்திடுவாய்
அழியாப் புகழை சேர்த்து அருகிலிருந்து காத்து
அருள் மழை பொழிந்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நிலைபெற்ற நிலைபெறவே நினை தினந்தோறும் வணங்கிடுவோம்
நில்லாமல் உனைப்பாட கலையுணர்வும் மேலோங்கிட
நீயே துணை புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா

பக்தியுடன் உனைப்பாடும் பக்தன் குறைகளைத் தீர்த்திடுவாய்
பக்தி மார்க்கமும் சொல்வாய் பாவ மன்னிப்பும் அளிப்பாய்
பாரில் மாந்தரைக் காப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

பொறுமையின் பொன்மனமே திருமூலா பொய் விதி மாற்றிடுவாய்
பராசக்தி அருள் பெற்றவனே பரிவுடன் எங்களைக் காப்பாய்
காத்து ரட்சிப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஒன்றே குலமென்றும் உலகில் ஒருவனே தேவன் என்றும்
செப்பிய மாமணியே எங்கள் சத்குருவானவன் நீயே
ஞான வடிவுடயாய் ஓம் ஜய ஜய திருமூலா

அகத்தியன் நண்பனும் நீயே எங்கள் பக்தியை ஏற்றிடுவாய்
குறைகளை எல்லாம் களைவாய் நிறைகளை எல்லாம் ஏற்பாய்
வாழ்த்தி அருள் புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா.