பாடல் #1058

பாடல் #1058: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.

விளக்கம்:

பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தை தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளை கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பி தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்த சக்தியே என்று நம்பி எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.

கருத்து:

திரிபுரை சக்தியானது இராஜராஜேஸ்வரி எனும் பெயருடன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அருளி ஞானத்தை வளர்ப்பவளாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். கொம்பை போன்றவள் என்பது ஞானம் என்கிற கொடியைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாக இருப்பதைக் குறிக்கின்றது. முழுமையான அழகுடன் விளங்கும் கொங்கைகள் என்பது தேவர்களுக்கும் அமிர்தமான பாலை தருபவளாக இருப்பதைக் குறிக்கின்றது. மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை சூடியுள்ளவள் என்பது வண்டு தேனைத் தேடி வாசனையுள்ள மலரை நோக்கிச் செல்வதைப் போல தேவர்கள் இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை தேடிப் பெறுவதற்கு இராஜராஜேஸ்வரியை நாடிச் செல்வதைக் குறிக்கின்றது. செம்பவளத் திருமேனியைக் கொண்ட சிறுமி என்பது உச்ச நிலை ஞானத்தின் ஆரம்பத்தைக் கொடுத்து அருளும் இராஜராஜேஸ்வரியின் திருவுருவத்தைக் குறிக்கின்றது.

பாடல் #1059

பாடல் #1059: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிர்களும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவர்களுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாக செயல்படும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அசையா சக்தியான சதாசிவமூர்த்தியும் அதனை செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். உலகத்திலுள்ள உயிர்கள் முதற்கொண்டு அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்துமே தமது ஆயுளில் பலவிதமாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதற்கான அறிவை கொடுக்கும் தலைவியாக ஸ்ரீவித்யா தேவி இருக்கின்றாள்.

பாடல் #1060

பாடல் #1060: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து அனைத்து உயிர்களுக்கும் அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்த சக்தியானவள் என்றும் மாறாதவளாக அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான ஞானத்தை அருளி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்துக்குள்ளே வைத்து நிலை நிறுத்தியதால் அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.

கருத்து: அனைத்து செயல்களையும் செய்யும் ஞானத்தை வழங்குகின்ற திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா தேவி எனும் பெயருடன் உயிர்களுக்குள்ளே என்றும் மாறாமல் நிலைபெற்று நின்று அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற அறிவைக் கொடுப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1061

பாடல் #1061: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றெ னகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே.

விளக்கம்:

பாடல் #1060 இல் உள்ளபடி எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு அனைத்து செயல்களோடு கலந்து எனது உள்ளத்தில் பதிந்து இருக்கின்றாள். ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றபடி எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி மனோன்மணி எனும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். சிவம் வேறு திரிபுரை சக்தி வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று எப்போதும் பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.

குறிப்பு: இறைவன் ஆடுகின்ற அனைத்து இடங்களும் (அடியவர்களின் உள்ளம் உட்பட) அம்பலம் என்று அறியப்படும். இறைவனோடு திரிபுரை சக்தி ஒன்றாகக் கலந்து நிற்பதை மனோன்மணி என்ற பெயரில் அறியலாம்.

பாடல் #1062

பாடல் #1062: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

விளக்கம்:

பாடல் #1061 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் ஒன்றாக அடைந்திருக்கும் மனோன்மணி சக்தியானவள் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு முடிவில்லாமல் அனைத்து செயல்களையும் செய்து கொண்டே இருக்கின்றாள். அப்படி அவள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மிகப்பெரும் தலைவனாகிய இறைவனோடு சேர்ந்து எப்போதும் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் மனோன்மணியானவள் தான் செய்கின்ற அனைத்து செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். இவளை தனது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் உயிர்கள் இருக்கின்றார்கள்.

பாடல் #1063

பாடல் #1063: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

உணர்ந்துட னேநிற்கு முள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.

விளக்கம்:

பாடல் #1062 இல் உள்ளபடி திரிபுரையாக இருக்கும் மனோன்மணி சக்தியை தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும் போது இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான். அந்த இறைவனோடு நறுமணம் கமழும் மலர்களை தன் கூந்தலில் அணிந்து இருக்கும் இறைவியும் ஒன்றாகக் கலந்திருந்து வெளிப்படுவாள். அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு அவள் நற்கதியை அருளுவாள்.

பாடல் #1064

பாடல் #1064: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அளியொத்த பெண்பிள்ளை யானந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

விளக்கம்:

பாடல் #1063 இல் உள்ளபடி நற்கதியை அருளுகின்ற திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் இருக்கின்றாள். புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல திரிபுரை சக்தி தனது அருள் பார்வையால் எமது உள்ளத்திற்குள் பார்த்து எம்மை தெளிய வைத்து எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியை காட்டி எம்மை மேன்மை அடைய வைத்து தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.

பாடல் #1065

பாடல் #1065: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

உண்டில்லை என்ற துருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே.

விளக்கம்:

திரிபுரை சக்திக்கு உருவம் உண்டு என்று சொல்பவர்களுக்கு உருவமாக இருக்கிறாள். உருவம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அருவமாக இருக்கிறாள். தன்னைத் தியானித்தவர்களுக்கு அவர்கள் தியானித்த உருவமாகவே அவள் காட்சி கொடுக்கின்றாள். உலகத்தின் இயக்கத்திற்கு காரணம் இறைவன் காரியம் இறைவி இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அருவுருவமாக தில்லை அம்பலத்தில் எங்கும் நிறைந்து ஆடுகின்றார்கள். இந்த அருவுருவமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் உய்ய வேண்டும் என்பதற்காக சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று மண்டலங்களிலும் நிறைந்து திரிபுரை சக்தியாக நிற்கின்றாள்.

கருத்து: உலக இயக்கத்திற்கு வெப்பம் குளிர்ச்சி இரண்டுமே வேண்டும் இதை சூரிய சந்திர மண்டலங்களாக இருந்து திரிபுரை சக்தி அருளுகின்றாள். பிரளயத்தில் அனைத்து உயிர்களும் இறைவனோடு திரும்பவும் சென்று கலந்து விடுவதற்கு அக்னி மண்டலமாக திரிபுரை சக்தி நிற்கின்றாள். பாடல் #612 இல் உள்ளபடி உடலில் (பிண்டத்தில்) இருக்கும் மூன்று மண்டலங்களே உலகத்திலும் (அண்டத்தில்) இருக்கின்றது. இவளே திரிபுரை என்று அறியப்படுகின்றாள்.

பாடல் #1066

பாடல் #1066: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்றா ளவன்ற னுடலு முயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக வென்னுட் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுட ரேடங்கை யாளே.

விளக்கம்:

பாடல் #1065 இல் உள்ளபடி மூன்று மண்டலங்களிலும் நிறைந்து நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் இறைவனோடு ஒன்றாக சேர்ந்து எமக்குள் உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் இருக்கின்றாள். அதுபோலவே அனைத்து உயிர்களிலும் இருக்கின்றாள். இவள் இறைவனை அடையும் சிவகதிக்கான வழியைக் கொடுக்கும் ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடனும் சிவகதியை சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: ஏடங்கை (ஏடு ஏந்திய கை) என்பது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளாகவும் இருப்பவள் என்று பொருள்.

பாடல் #1067

பாடல் #1067: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

ஏடங்கை நங்கை யிறைஎங்கண் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்
சூடுமென் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #1066 இல் உள்ளபடி சிவகதியைச் சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தியே எங்கள் இறைவியாகும். அவள் மூன்று கண்களை உடையவள். உருவமில்லாத அவளே படிகம் போன்ற ஊடுருவிப் பார்க்கும் திருமேனியை விரும்பி வெள்ளைத் தாமரையில் அமர்ந்து கொண்டு எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டிருக்கும் பிரம்மனின் தேவியான சரஸ்வதியாக இருக்கின்றாள். இவளது திருப்பாதங்களை தரிசித்து எமது தலைமேல் தாங்கி அவளின் தோத்திரங்களை எப்போதும் எமது வாய் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

கருத்து:

திரிபுரை சக்தியானவள் பிரம்மனின் தேவியான சரஸ்வதி எனும் பெயருடன் உயிர்கள் வாழும் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைக் (கல்வி) கொடுத்து அருளுவதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். முக்கண்ணி என்பது மூன்று காலங்களையும் பார்க்கின்ற இறைவியானவள் உயிர்களின் சென்ற பிறவிகளின் கர்மங்களைப் பார்த்து இந்த பிறவியை படைப்பதையும் இந்தப் பிறவியின் கர்மங்களைப் பார்த்து பின்பு வரும் பிறவிகளை தீர்மானித்து சிவகதியை அடைய வைப்பதையும் குறிக்கின்றது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் படிகம் போன்ற உருவம் என்பது தூய்மையான எண்ணங்களுடன் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கின்ற ஞானத்தின் உருவமாக இருப்பதைக் குறிக்கின்றது. திருமுறை பாடும் பார்ப்பனி என்பது உயிர்கள் சிவகதி அடைவதற்கு தமது கர்மங்களைத் தீர்க்க பல பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேதங்களை ஓதிக்கொண்டே படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவும் அவருக்கு சக்தியாக சரஸ்வதியும் இருப்பதைக் குறிக்கின்றது.