பாடல் #1055

பாடல் #1055: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தானெங் குளனங் குளதையன் மாதேவி
ஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்
வானெங் குளவங் குளமந்த மாருதங்
கோனெங்கு நின்ற குறிபல பாரே.

விளக்கம்:

இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள். உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள். உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள். அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்து: உலகத்திலுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா பொருள்களும் ஏதோவொரு வகையில் உருமாறுகிறது. இந்த குறிப்பே இறை சக்தி அங்கே இருக்கின்றது என்பதற்கு சான்றாகும்.

பாடல் #1056

பாடல் #1056: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

விளக்கம்:

பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அந்தந்த செயல்களுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்த தன்மையை உயிர்கள் உணராமல் இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாக தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்த பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

பாடல் #1057

பாடல் #1057: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

விளக்கம்:

பாடல் #1056 இல் உள்ளபடி இன்பத்தை அனுபவிக்கின்ற உயிர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுடன் சேர்ந்து பின்னிப் பிணைந்து இருக்கும் சடை முடியைப் போல நிற்கின்றாள் பராசக்தி. இந்தப் பராசக்தியை தினந்தோறும் தியானித்து சாதகம் செய்யும் அடியவர்களுக்கு அவர்கள் செய்த சாதகத்தின் பலனாக கொடி போல வளர்கின்ற ஞானத்தைக் கொடுத்து அந்த கொடியில் சரிபாதியாக நின்று அதைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1027

பாடல் #1027: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மாட்டிய குண்டத்தி னுள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே.

விளக்கம்:

நவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன் ஓதுகின்ற மந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து எழும்புகின்றது. அவ்வாறு எழும்புகின்ற அக்னி அடியும் முடியுமாக (நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியும்) இரண்டாக குண்டத்தினுள்ளே அலைகின்றது. அவ்வாறு அலைகின்ற அக்னி ஒரு கையாகவும் காற்று ஒரு கையாகவும் ஆகிய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகின்றது. அப்படி விரைந்து எரியும் அக்னியில் நல்ல ஒளியாய் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.

பாடல் #1028

பாடல் #1028: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நல்லொளி யாக நடந்த துலகெங்குங்
கல்லொளி யாகக் கலந்துள் ளிருந்திடுஞ்
சொல்லொளி யாகத் தொடர்ந்த வுயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

விளக்கம்:

பாடல் #1027 இல் உள்ளபடி நவகுண்டத்தில் நல்லொளியாய் இருக்கும் இறைவனே மாணிக்கக் கல்லில் கலந்திருக்கும் ஒளி போல உலகெங்கும் பரவி கலந்து இருக்கிறான். அந்த இறைவனே குருவாக தமக்குள்ளிருந்து அருளிக் கூறிய முறைப்படி யாகம் செய்யும் உயிர்களின் கண்களில் ஒளியாக கலந்து நிற்கின்றான்.

கருத்து: நவகுண்டத்தின் முறைப்படி யாகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவன் குருவாக இருந்து வழி காட்டுவான்.

பாடல் #1029

பாடல் #1029: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நின்றஇக் குண்ட நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்
கொண்டஇத் தத்துவ முள்ளே கலந்தெழ
விண்ணுளு மென்ன எடுக்கலு மாமே.

விளக்கம்:

இங்கு சொல்லப்படுகின்ற நவகுண்டம் அறுகோண வடிவுடையதாகும். இது உடலுக்குள்ளிருக்கும் ஆறு சக்கரங்களை குறிப்பதாகும். நவகுண்ட யோகத்தில் சக்கரங்களை வட்டமாக சுற்றி பிரணவமானது முப்பத்தாறு தத்துவங்களுடன் கலந்து எழுகின்றது. இந்த முப்பத்தாறு தத்துவங்களே அண்டத்திலும் உள்ளது என்பதை தமக்குள் கண்டு உணரலாம்.

குறிப்பு: அண்டத்திலுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் மானசீகமாக நவகுண்ட யாகம் செய்வதன் மூலம் நமது உடலுக்குள்ளும் கண்டு உணரலாம் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1030

பாடல் #1030: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்
கடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

விளக்கம்:

நவகுண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் வெளிச்சம் சத்தம் காற்று ஆகிய மூன்றும் கைகளாக எழுகின்றது. இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் கூர்மையான முகங்களாக இருக்கின்றது. ஆறு சக்கரங்கள் கண்களாக இருக்கின்றது. இதன் மூலம் உடலை குண்டமாக வைத்து நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை விடாமல் ஓதி உச்சரித்து மூலாதாரத்திலுள்ள குண்டலினியை ஆறு சக்கரங்களுக்கும் மேலெழுப்பிச் செல்லும் போது அந்த சக்கரங்களில் வீற்றிருக்கும் முடிவில்லாத இறை சக்தியை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1031

பாடல் #1031: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

விளக்கம்:

பாடல் #1030 இல் உள்ளபடி நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறை சக்தியானது அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கின்றது. அந்த சக்தியின் அளவை அளக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு எதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1032

பாடல் #1032: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

விளக்கம்:

பாடல் #1031 இல் உள்ளபடி தமக்குள் அறிந்து கொண்ட இறை சக்தியானது உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கின்றது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரத்திலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக் கொண்டு சென்று தலை உச்சியில் இருக்கும் எழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலந்துவிட்டால் சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #1033

பாடல் #1033: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

விளக்கம்:

பாடல் #1032 இல் உள்ளபடி தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்கள் தமக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன் இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள், மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடி முடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டு இருப்பார். நன்மையாகவே இருக்கும் இந்த இறைவனை தஞ்சம் என்று சரணடைவார்கள்.

விளக்கம்: