அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #46

28-3-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: முக்தி பெறுதல் வேண்டும் என்கின்ற எண்ணம் எவ்வகைகள் உண்டு?

மூன்று விதங்கள் உண்டு ஒன்று முதலில் முக்தி அடைதல் வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் நிலைக்கும். அதற்கான முயற்சி இருக்காது அது சாதாரண நிலை. இரண்டாவது முக்தி காணுதல் வேண்டும் என்றும் அதற்கான சிறு சிறு பயிற்சிகள் செய்வதும் இதுவும் ஓர் சாதாரண நிலையே. மூன்றாவது முக்தி அடைதல் வேண்டும் என்று அக்னி போல் எண்ணமும் செயல்பாடும் இது உறுதியாக முக்தி அளிக்கும். இதற்கும் மேலாக இதனை விளக்க இயலாது. ஏனெனில் முக்தி அடைவதும் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதும் அவரவர் முயற்சியால் வருவது. இத்தகைய நிலையில் எவ்வளவிற்கு தீவிரம் கொள்கின்றோமோ அவ்வளவிற்கு வெற்றியும் உண்டு என அறிவோம் உழைப்போம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #45

1-3-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: குருவை எவ்விதம் அணுகுதல் வேண்டும்?

விசுவாசம் என்கின்ற நிலையில் அணுகுதல் வேண்டும். விசுவாசம் என்பதற்கு மறுபெயர் நம்பிக்கை. நம்பிக்கையானது பிரதானமாக எல்லாவித உறவிலும் எல்லா நிலையிலும் காண்கிறோம். நாளை நாம் இருக்கப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றோம். நாளை நமக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செயல்படுகின்றோம். இவ்விமிருக்க நாம் நல்வழியில் சீடனாக அமைந்து நல்வழியில் நமக்கு குரு அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கையுடன் விசுவாசம் நிலைத்திட அனைத்தும் பெற்றிட இயலும். இரண்டாவதாக எண்ணம் போல் வாழ்க நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ அவ்விதமே வாழ்வோம் எண்ணம் சிறிது பழுது பட்டு போனாலும் அவ்விதமே நமது வாழ்க்கையும் அமையும் என்பதை மறக்காமல் வாழுதல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

2-2-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: வேள்விகள் என்பதெல்லாம் வெறும் செலவினம் தானே? அப்பொருள்கள் யாவும் நல்வழிக்கு உபயோகப் படுத்தலாமே?

வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் வீணாவதில்லை. ஆண்டவனுக்கு நாம் கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் அவருக்கு எதுவும் தேவையில்லை என்கின்ற போதிலும் நாம் நமது திருப்திக்கென சிறிது அளிக்கின்றோம். உதாரணமாக ஒன்று கூறினால் விடை எளிதாக புரியும். விவசாயி ஒருவன் தானியங்களை விதைக்கும் காலத்தில் அது ஏன் தூவுகின்றான் அது வெறும் செலவு தானே மக்கள் பட்டினியாக இருக்க இவ்விதைகள் உதவுமே என எண்ணினால் அது தவறாகும். விதைகள் விதைத்தால் தான் உணவு உண்டாகும் என்பதை உணருதல் வேண்டும். இவ்விதமே நாம் சிறிதாக வேள்வியில் அளிக்கும் பொருட்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய அருளால் பல நன்மைகள் உண்டாகிறது. பெறும் நன்மைகள் உண்டாகின்றது. உதாரணமாக நல்ல மழை விளைவாக தானியங்கள் அமைதியின் விளைவாக பொருளாதார முன்னேற்றங்கள் என்பதெல்லாம் கிடைக்கக்கூடும். வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் சிறிதே. கிடைக்கும் இறையருள் பெரிதே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

5-1-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறைவன் மட்டும் தான் சத்தியம் (உண்மை) என்றும் மற்ற அனைத்தும் அசத்யம் அநித்யம் (உண்மை இல்லாதது) என்கின்றதை பெரியோர்கள் கூறியுள்ளனர். அவ்விதமிருக்க வேதங்களும் அநித்யம் அசத்யம் என்றும் எடுத்தல் வேண்டுமா?

வேதங்கள் இறைவனின் கீழ்நோக்கும் முகமான ஐந்தாம் முகத்திலிருந்து வெளிவந்தாக கருதப்படுகின்றது. தெய்வத்தின் வாக்கு தெய்வம் போல் என்றும் நித்யமாகவே இருக்கும் என்கின்றதால் வேதங்களும் நித்யமானதே. அசத்யமாக இருப்பதை வைத்து சத்யத்தை உணருதல் இயலும். இதற்கு உதாரணமாக தூக்கத்தில் கனவில் ஓர் காட்சி காண அதில் புலி ஒன்று நம்மை விரட்டுவதாக கண்டு கொண்டால் அந்நேரத்தில் அக்காட்சியானது முழுமையாக உண்மையாகவே தோற்றம் அளிக்கும். நமக்கு பயம் தோன்றி சட்டென்று எழுந்து ஒடத் தோன்றும். முழித்தால் அது கனவு என உணருவோம். இருப்பினும் அக்காலத்தில் நடைபெற்றது நமக்கு உண்மையாகவே தோன்றியது அல்லவா? இவ்விதம் இங்கிருக்கும் பொய்யான உலகத்தில் காணும் தோற்றங்கள் அனைத்தும் சட்டென்று நாம் முழிக்கும் போது இவையாவும் உண்மையல்ல உண்மையென்பது ஆண்டவன் ஒன்றே என்கின்ற ஓர் நிலை உண்டாகும். இருக்கும் போது அதுவே உண்மையாக தோன்றும் மறைந்த பின் இவையாவும் இல்லை என்றும் நித்யமானது இறைவன் ஒன்றே என நாம் கூறுவோம். இந்நிலையில் வேதங்கள் இறைவனின் வாக்கு என்கின்றதால் அதிலிருந்து நாம் கற்க வேண்டியதை அனைத்தும் கற்று இறைவனை அடைந்தால் பின்பு அது ஒன்றே சத்தியமாகிறது இதற்கே நமது முயற்சிகள் வேண்டும்.

பாடல் #734

பாடல் #734: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #732 இல் உள்ளபடி மூச்சுக்காற்றை புருவ மத்தியில் நிறுத்திய பிறகு நடு நெற்றியில் தோன்றும் நீல நிறத்தில் ஜோதிமயமாக இருக்கும் சக்தியிலேயே சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு உலகத்தவர்கள் அனைவரும் பார்க்கும்படி நரை முடியும் தோல் சுருக்கங்களும் நீங்கி வயது குறைந்து இளைஞனைப் போல இருப்பார்கள் என்பது பரம்பொருளாகிய குருநாதரின் ஆணையாகும்.

கருத்து: தியானத்தில் எப்போதும் நீல நிற சக்தியோடு இணைந்திருப்பவர்களின் உடல் முதுமை மாறி எப்போதும் இளமையோடு இருக்கும்.

பாடல் #735

பாடல் #735: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கருத்தநற் கபாலியு மாமே.

விளக்கம்:

உயிர்கள் உணவை குறைப்பதினால் உடல் எடை குறைந்து சுருங்கினாலும் பாடல் #734 ல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதி அழியாது. உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அங்கேயே நிரந்தரமாக நிலைபெறும். உணவை குறைத்து உடலை சுருக்கி பாதுகாத்தால் இறைவனை அடையும் வழிகள் பல உள்ளன. இதனை செய்யும் சாதகன் கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நண்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

கருத்து: உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமக வைத்து சரணாகதியில் இருக்கும் சாதகனுக்கு மூச்சுக்காற்று நெற்றியில் நிலைபெற்று கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நன்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து:

கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

9-12-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மார்கழி மாதத்தில் நல்காரியங்கள் செய்யாதது ஏன்? அதனை ஏன் பீடை மாதம் என்று அழைக்கின்றனர்?

மார்கழி மாதமானது பீடை மாதம் அல்ல. அது பீடம் மாதம் என்று கூறுதல் வேண்டும். தெய்வங்கள் குறிப்பாக சக்தியை பீடத்தில் அமர்த்தி வழிபடும் காலம் மார்கழி மாதம் என்பதை உணர்தல் வேண்டும். மார்கழி மாதத்தில் தெய்வ காரியத்தை தவிர வேறு காரியம் செய்யக்கூடாது என பெரியோர்கள் கருதினர். அதற்காக நல்காரியங்கள் செய்யாதீர்கள் மற்ற காரியங்கள் யாதும் செய்யாதீர்கள் தெய்வ வழிபாட்டில் மட்டும் அமருங்கள் என்றால் மனிதன் கேட்க மாட்டான். இத்தகைய நிலையில் பீடம் என்பது சிறிதாக மாறி பீடை மாதமாக மாறி விட்டது. இது ஒன்றே இதற்கான விளக்கம் தெய்வ நல்காரியங்கள் தெய்வ காரியங்கள் செய்யும் காலம் என்பதால் மற்ற காரியங்கள் செய்யாதீர் என்பதே இதற்கு விளக்கமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகவே இக்காலம் மண்டல காலம் என அழைக்கப்பட்டும் ஐயப்பன் வழிபாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அக்காலத்தில் தெய்வ காரியங்கள் தெய்வ நல்காரியங்கள் எடுத்துச் செய்வீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

18-9-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: செல்வத்தை சேர்ப்பது தவறானதா?

சேர்ப்பது என்பது எப்பொழுதும் அளவிற்கு மீறியதையே குறிக்கின்றது. கலியுகத்தில் செல்வம் தேவையானது தான். இருப்பினும் நமது தேவைக்கு வேண்டுமானதை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக கையில் நிலைத்து விட்டால் புத்தி துர்புத்தியாக மாறுவது எளிதாகின்றது. அவ்விதம் அதிகம் நீயும் சம்பாதித்தால் நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். உழைக்க வேண்டாம் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாம் கூறவில்லை. தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு மற்றதை நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இக்காலத்தில் பொறுப்புகள் அதிகமாகின்றது குடும்ப செலவுகள் பெரிதாகின்றது மேலும் தூரம் சென்று பணிபுரிய வாகனங்கள் தேவைப்படுகின்றது. இருக்க ஓர் இடம் தேவைப்படுகின்றது. இவையாவும் பூர்த்தி செய்த பின்பு சிறிது குழந்தைகளுக்கு எடுத்து வைப்பது உண்டு இதுவும் நியாயமானதே. இதற்கும் மேலாக சொத்துக்கள் சேகரித்து வைத்து நகைகள் வைத்து எப்பொழுது திருடன் வருவான் என பயம் கண்டு வாழ வேண்டாம். தேவைக்கு வேண்டியதை வைத்துக் கொள்ள வேண்டும் நல் காரியங்கள் செய்வதற்கு பல உண்டு இல்லாதோர் பலர் இருக்க குறிப்பாக தவிக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நலன் கொடுங்கள். மேலும் அன்னதானங்கள் இவையாவும் நலம் தருபவை என்கின்ற போதிலும் நிரந்தரமாக ஒருவருக்கு உண்ண வசதி செய்தால் அது மிகவும் சிறப்பாகின்றது. கல்வி தானம் ஒருவருக்கு தேவையான கல்விகள் பூர்த்தி செய்ய உதவினால் அதுவும் சிறப்பானது. நம் குழுந்தைகள் இருக்க ஒரிரு குழந்தைகளை படிக்க வைப்போம் உணவு நன்றாக உண்ண வைப்போம் என்கின்ற மனப்பான்மை வளர்த்தால் உம்மை உறுதியாக தெய்வம் வாழ்த்தும் தன் அருகில் சேர்க்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

18-07-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

கேள்வி: நான் என்ற சொல்லினை குறித்தே. நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? என்பதே வினாவாகும்.

அதன் பொருளாவது எதார்த்த வாழ்க்கையில் நான் என்ற சொல் அது இல்லாமல் அறிமுகபடுத்தும் போது என் பெயர் இது. நான் இது என்று ஆரம்பிக்கிறோம். எதார்த்த வாழ்க்கையில் நான் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் இல்லாமல் வாழ முடியாது. அப்படியானால் எப்படி வாழ்வது என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.

நான் என்கின்ற வாக்குதனில் பிழை இல்லை. நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட நாம் சிறப்பென கண்டும் மற்றவர் இதில் எளியோர் என காண்பதும் தவறாகின்றது. இவ்விதமே அகங்காரம் பிறவியும் காண்கின்றது. மற்ற சீவன்கள் அனைத்திலும் இறை சக்தியை உணர்ந்தால் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை என்றும் எடுத்துரைத்தோமே. நான் பெரியோன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன். மற்றவர் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும் என்பதேயாகின்றது. வாக்கில் பிழை இல்லை. நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும் என்றும் இங்கு விளக்கிட்டோமே.