பாடல் #1828

பாடல் #1828: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருள
வண்ணலது கண்டருள் புரியா நிற்கு
மெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனை
நண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணியஞ செயவாரககுப பூவுள நீருள
வணணலது கணடருள புரியா நிறகு
மெணணிலி பாவிக ளெமமிறை யீசனை
நணணியறி யாமல நழுவுகின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண்ணியம் செய்வார்க்கு பூ உள நீர் உள
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.

பதப்பொருள்:

புண்ணியம் (இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை) செய்வார்க்கு (செய்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனை வழிபடுவதற்கு தேவையான) பூ (பூவும்) உள (கிடைக்கும்) நீர் (நீரும்) உள (கிடைக்கும்)
அண்ணல் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனை) அது (அனைத்து உயிர்களிலும்) கண்டு (கண்டு அறிந்து) அருள் (அந்த உயிர்களின் மேல் கருணை) புரியா (செய்யாமல்) நிற்கும் (நிற்கின்ற)
எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத அளவிற்கு பெரும்பாலான) பாவிகள் (பாவிகள்) எம் (எமது) இறை (இறைவனாகிய) ஈசனை (சிவபெருமானை)
நண்ணி (நெருங்கிச் சென்று) அறியாமல் (அறிந்து கொள்ளாமல்) நழுவுகின்றாரே (அறியாமையால் விலகிச் சென்றே அழிகின்றார்கள்).

விளக்கம்:

இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை செய்கின்றவர்களுக்கு இறைவனை வழிபடும் போது அதற்கு தேவையான பூவும் நீரும் இறையருளால் எப்போதும் கிடைக்கும். ஆனால் எண்ணிக்கையில்லாத அளவு பெரும்பாலான மனிதர்கள் அனைத்து உயிர்களிலும் இறைவனை கண்டு அறிந்து கொண்டு அந்த உயிர்களின் மேல் கருணை செய்து அதன் மூலம் இறைவனை நெருங்கிச் சென்று அவனை முழுவதும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அறியாமையால் இறைவனை விட்டு விலகிச் சென்ற பாவிகளாகவே வாழ்ந்து அழிகின்றார்கள்.

பாடல் #1827

பாடல் #1827: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினு ளீசனிலை பெறு காரண
மஞ்சமு தாமுப சாரமெட் டெட்டோடு
மஞ்சலி யோடுங் கலந்தற்சித் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மஞசன மாலை நிலாவிய வானவர
நெஞசினு ளீசனிலை பெறு காரண
மஞசமு தாமுப சாரமெட டெடடொடு
மஞசலி யொடுங கலநதறசித தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம்
அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டோடும்
அஞ்சலியோடும் கலந்து அற்சித்தார்களே.

பதப்பொருள்:

மஞ்சன (அடியவர்களால் அபிஷேகமும்) மாலை (மலர் மாலைகள் சூட்டி அலங்காரமும் செய்து வழிபடப் படுகின்ற) நிலாவிய (ஒளியாக வலம் வருகின்ற / இறைவனின் பிரதிநிதியாக வைத்து வழிபடப் படுகின்ற) வானவர் (வானுலகத்து தேவர்களின்)
நெஞ்சின் (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) ஈசன் (இறைவன்) நிலை (எப்போதும் வீற்றிருந்து) பெறு (அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு) காரணம் (காரணம் என்னவென்றால்)
அஞ்சு (பஞ்ச) அமுது (அமிர்தமாக) ஆம் (இருக்கின்ற உணவுக் கூழை படைத்து) உபசாரம் (இறைவனை போற்றி வணங்குகின்ற) எட்டு (எட்டும்) எட்டோடும் (எட்டும் கூட்டி வருகின்ற மொத்தம் 16 விதமான உபசாரங்களை செய்து)
அஞ்சலியோடும் (இரண்டு கரங்களையும் ஒன்றாக கூப்பி வேண்டி) கலந்து (மனதை இறைவன் மேல் வைத்து) அற்சித்தார்களே (உண்மையான அன்போடு அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்).

விளக்கம்:

அடியவர்களால் அபிஷேகமும் மலர்கள் சூட்டி அலங்காரமும் செய்து இறைவனின் பிரதிநிதிகளாக வழிபடப் படுகின்ற வானுலகத்து தேவர்களின் நெஞ்சத்திற்குள் இறைவன் வீற்றிருந்து அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு காரணம் என்னவென்றால் அடியவர்கள் உண்மையான அன்போடு பஞ்சாமிர்தம் முதலாகிய 16 விதமான உபசாரங்களை செய்து அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்.

16 வகையான உபசாரங்கள்:

  1. ஆவாகனம் – மந்திரத்தால் இறை சக்தியை ஒரு மூர்த்திக்கு மாற்றுதல்
  2. தாபனம் – மூர்த்தியை பிரதிஷ்டை செய்தல்
  3. சந்நிதானம் – மூர்த்தி இருக்கின்ற மூலஸ்தானத்தை சுத்தப் படுத்துதல்
  4. சந்நிரோதனம் – இறைவனது சாந்நியத்தை (சக்தி வெளிப்பாடு) மூர்த்தியில் நிறுத்துதல்
  5. அவகுண்டவம் – மூர்த்தியை சுற்றி மூன்று கவசங்களை மந்திரத்தால் உருவாக்குதல்
  6. தேனுமுத்திரை – மனதை ஒருநிலைப் படுத்தி முத்திரை காட்டுதல்
  7. பாத்தியம் – மூல மந்திரத்தை உச்சரித்து மூர்த்தியின் திருவடியில் தீர்த்தம் சமர்ப்பித்தல்
  8. ஆசமனீயம் – புனிதப் படுத்தும் நீரை மந்திரத்தால் உட்கொள்ளுதல்
  9. அருக்கியம் – தூய்மையான நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்தல்
  10. புஷ்பதானம் – மலர்கள் சாற்றுதல்
  11. தூபம் – சாம்பிராணி காட்டுதல்
  12. தீபம் – தீப ஆராதனை செய்தல்
  13. நைவேத்தியம் – இறைவனை நினைத்து சமைத்த சாத்வீகமான உணவு படைத்தல்
  14. பாணீயம் – தூய்மையான நீர் படைத்தல்
  15. செபசமர்ப்பணம் – மந்திரங்களை ஜெபித்து சமர்ப்பித்தல்
  16. ஆராத்திரிகை – போற்றி பாடி மணியடித்து ஆராதித்தல்

பாடல் #1826

பாடல் #1826: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

நினைவது வாய்மை மொழிவது மல்லாற்
கனைகழ லீசனைக் காண வரிதாங்
கனைகழ லீசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைவது வாயமை மொழிவது மலலாற
கனைகழ லீசனைக காண வரிதாங
கனைகழ லீசனைக காணகுற வலலார
புனைமலர நீரகொணடு பொறற வலலாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்கு உற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே.

பதப்பொருள்:

நினைவதும் (நல்லதையே நினைப்பதும்) வாய்மை (உண்மையையே) மொழிவதும் (பேசுவதும்) அல்லால் (செய்யாமல் வேறு எந்த விதமான செயல்களாலும்)
கனை (இசைக்கின்ற அழகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண (தரிசிப்பது) அரிதாம் (அரியதான காரியம் ஆகும்)
கனை (இசைக்கின்ற அழிகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண்கு (அவ்வாறு செய்து தமக்குள் தரிசிக்கும்) உற (அருள் பெற்று) வல்லார் (தரிசிக்கக் கூடியவர்கள்)
புனை (நறுமணம் கொண்ட அழகிய) மலர் (மலர்களையும்) நீர் (தூய்மையான நீரையும்) கொண்டு (கொண்டு) போற்ற (தாம் தரிசித்த இறைவனை போற்றி வணங்கி பூஜிக்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

நல்லதை மட்டுமே நினைப்பது, உண்மையை மட்டுமே பேசுவது ஆகிய ஒழுக்கங்களை சரியாக கடை பிடிக்காமல் வேறு என்ன சாதகம் செய்தாலும் இசைக்கின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்க முடியாது. ஆகவே நன்மையை மட்டுமே நினைப்பதையும் உண்மையை மட்டுமே பேசுவதையும் ஒழுக்கமாகக் கொண்டு அதனோடு அனைத்து உயிர்களுக்குள்ளும் இசைகின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்கும் வல்லமை பெற்றவர்கள் தாம் தரிசித்த இறைவனை நேரிலேயே நறுமணம் கொண்ட அழகிய மலர்களாலும் தூய்மையான நீராலும் போற்றி வணங்கி வழிபடும் வல்லமை பெறுவார்கள்.

பாடல் #1825

பாடல் #1825: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பான்மொழி பாகன் பராபரன் றானாகு
மானசதா சிவன் றன்னை யாவாகித்து
மேன்முக மீசான மாகவே கைக்கொண்டு
சீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பானமொழி பாகன பராபரன றானாகு
மானசதா சிவன றனனை யாவாகிதது
மெனமுக மீசான மாகவெ கைககொணடு
சீனமுகஞ செயயச சிவனவ னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பால் மொழி பாகன் பரா பரன் தான் ஆகும்
ஆன சதா சிவன் தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கை கொண்டு
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே.

பதப்பொருள்:

பால் (அடியவர்களின் தகுதிக்கு ஏற்றபடி) மொழி (அருள் பாலிக்கும் இறைவியை) பாகன் (தமக்கு ஒரு பாகமாகக் கொண்டவன்) பரா (அசையா சக்தியாகிய) பரன் (பரம்பொருள்) தான் (தாமே) ஆகும் (ஆகும்)
ஆன (அப்படி இறைவியும் இறைவனும் சேர்ந்து அருளுகின்ற) சதா (சதா) சிவன் (சிவமூர்த்தி) தன்னை (தம்மை) ஆவாகித்து (உண்மையான அன்போடு வேண்டி தமக்குள் / இலிங்கத்திற்குள் எழுந்தருளும் படி செய்து)
மேல் (தமது தலைக்கு / இலிங்கத்தின் மேல் நோக்கிய) முகம் (முகத்தை) ஈசானம் (அனைத்திற்கும் தலையாகிய சதாசிவ மூர்த்தியின் ஈசான முகம்) ஆகவே (ஆகவே) கை (கைப் பற்றிக்) கொண்டு (கொண்டு)
சீல் (சாதகத்தின் ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்து) முகம் (திருமுகத்தை) செய்ய (தமக்குள் / இலிங்கத்தில் வடித்து வழிபடுகின்ற அடியவர்கள்) சிவன் (சிவமாகவே) அவன் (தாமும்) ஆகுமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்ற உண்மையான தேடுதலோடு முயற்சி செய்கின்ற அடியவர்களுக்கு அவரவர்களின் கர்ம நிலைகள் நீங்கி இறைவனை அடைகின்ற பக்குவம் பெறுவதற்கு ஏற்றவாறு அருள் புரிகின்ற இறைவியை தமது சரிபாதி பாகமாகக் கொண்டு அடியவர்களுக்கு அருளும் தொழிலை புரிகின்ற சதாசிவமூர்த்தியாகிய இறைவனை முதலில் அருவுருவமாக வழிபடுவதற்கு ஆகம விதிகளின் படி முறைப்படி இலிங்க வடிவத்தை செய்து, அதில் எழுந்தருளும் படி இறைவனை உண்மையான அன்போடு வேண்டி வரவழைத்து, அதன் பிறகு தாம் செய்கின்ற இலிங்க வழிபாட்டை முறைப்படி சரியாக கடைபிடித்து, அதன் பயனால் இலிங்கத்தில் எழுந்தருளிய இறைவனை தமக்குள்ளும் எழுந்தருளும் படி செய்து, அதையே தலையாகப் பற்றிக் கொண்ட அடியவர்கள் சிவமாகவே ஆகிவிடுவார்கள்.

பாடல் #1824

பாடல் #1824: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவிரு மலங் காலையு மாலையு
மூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுறு பாலனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடடவி யுணணும விரிசடை நநதிககுக
காடடவிரு மலங காலையு மாலையு
மூடடவி யாவன வுளளங குளிரவிககும
பாடடவி காடடுறு பாலனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேட்டு அவி உண்ணும் விரி சடை நந்திக்கு
காட்டு இரு மலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டு உறும் பாலனும் ஆமே.

பதப்பொருள்:

வேட்டு (அடியவர்கள் தாம் விரும்பித் தருகின்ற) அவி (யாகப் பொருட்களை) உண்ணும் (பிரசாதமாக ஏற்கின்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனுக்கு)
காட்டு (நாம் வளர்த்து சமர்ப்பிக்கின்ற யாக அக்னியானது) இரு (நமக்குள் இருக்கின்ற) மலம் (மலங்களாகிய ஆனவம், கன்மம், மாயை ஆகியவை நீங்க வேண்டி) காலையும் (காலையில் சூரியன் தோன்றும் போதும்) மாலையும் (மாலையில் சூரியன் மறையும் போதும் செய்யும் யாகமாக இருக்க வேண்டும்)
ஊட்டு (புகையை ஊட்டுகின்ற) அவி (யாகப் பொருட்களின்) ஆவன (நெருப்பானது) உள்ளம் (இறைவனின் உள்ளத்தை) குளிர்விக்கும் (குளிர்விக்கும்)
பாட்டு (மந்திரங்களை ஓதி) அவி (யாகத்தில் பொருட்களை இட்டு) காட்டு (அக்னியை வளர்த்து காட்டும் போது) உறும் (அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பது) பாலனும் (நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற) ஆமே (இறைவன் ஆகும்).

விளக்கம்:

அடியவர்கள் தாம் செய்கின்ற யாகத்தில் விருப்பத்தோடு அளிக்கின்ற யாகப் பொருட்களை பிரசாதமாக ஏற்கின்ற விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய இறைவனுக்கு நாம் வளர்த்து சமர்ப்பிக்கின்ற யாக அக்னியானது நமக்குள் இருக்கின்ற மலங்களாகிய ஆனவம், கன்மம், மாயை ஆகியவை நீங்க வேண்டி காலையில் சூரியன் தோன்றும் போதும் மாலையில் சூரியன் மறையும் போதும் நாம் செய்கின்ற யாகமாக இருக்க வேண்டும். புகையை ஊட்டுகின்ற யாகப் பொருட்களின் நெருப்பானது இறைவனின் உள்ளத்தை குளிர்விக்கும். மந்திரங்களை ஓதி யாகத்தில் பொருட்களை இட்டு அக்னியை வளர்த்து காட்டும் போது அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பது நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற இறைவன் ஆகும்.

பாடல் #1823

பாடல் #1823: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலையம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளித் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா விளக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளம பெருஙகொயி லூனுடம பாலையம
வளளற பிரானாரககு வாயகொ புரவாசல
தெளளித தெளிநதாரககுச சீவன சிவலிஙகங
களளப புலனைநதுங காளா விளககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலையம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளி தெளிந்தார்க்கு சீவன் சிவ லிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா விளக்கே.

பதப்பொருள்:

உள்ளம் (அடியவர்களின் உள்ளமானது) பெரும் (மிகப் பெரும்) கோ (இறைவன்) இல் (வீற்றிருக்கும் கருவறையாகும்) ஊன் (அவர்களது தசையும்) உடம்பு (எலும்புகளுமான உடலானது) ஆலையம் (இறைவனை பூஜிக்க வலம் வரும் ஆலயமாகும்)
வள்ளல் (இல்லை என்று வருபவர்களுக்கு தம்மால் இயன்றதை வழங்குகின்ற வள்ளல்) பிரானார்க்கு (தன்மை கொண்டு போற்றத் தகுந்த அடியவர்களுக்கு) வாய் (அவர்களின் வாயானது) கோபுர (இறைவனை தரிசிக்க வருகின்றவர்களை வரவேற்கும் ஆலயத்தின் கோபுர) வாசல் (வாசல் ஆகும்)
தெள்ளி (இறைவனை தமக்குள் ஆராய்ந்து) தெளிந்தார்க்கு (தெளிவாக அறிந்து கொண்டவர்களின்) சீவன் (ஆன்மாவனது) சிவ (இறைவனின்) லிங்கம் (அடையாளமான இலிங்கமாகும்)
கள்ள (தமது இயல்பிலேயே மாயையால் உண்மையை மறைக்கின்ற திருட்டுத் தனம் கொண்ட) புலன் (புலன்கள்) ஐந்தும் (கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும்) காளா (தமது இயல்பு நிலை மாறி இருட்டாகிய மாயையை நீக்குகின்ற) விளக்கே (வெளிச்சத்தை தரும் விளக்குகள் ஆகும்).

விளக்கம்:

அடியவர்களின் உள்ளமானது இறைவன் வீற்றிருக்கும் மிகப் பெரும் கோயிலாகும். அவர்களது தசையும் எலும்புகளுமான உடலானது இறைவனை பூஜிக்க வலம் வரும் ஆலயமாகும். இல்லை என்று வருபவர்களுக்கு தம்மால் இயன்றதை வழங்குகின்ற வள்ளல் தன்மை கொண்டு போற்றத் தகுந்த அடியவர்களுக்கு அவர்களின் வாயானது இறைவனை தரிசிக்க வருகின்றவர்களை வரவேற்கும் ஆலயத்தின் கோபுர நுழை வாசல் ஆகும். இறைவனை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களின் ஆன்மாவனது இறைவனின் அடையாளமான இலிங்கமாகும். அவர்களிடம் இருக்கின்ற தமது இயல்பிலேயே மாயையால் உண்மையை மறைக்கின்ற திருட்டுத் தனம் கொண்ட புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் தமது இயல்பு நிலை மாறி இருட்டாகிய மாயையை நீக்குகின்ற வெளிச்சத்தை தரும் விளக்குகள் ஆகும்.