பாடல் #1836

பாடல் #1836: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் றானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யானடி சேர
வயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பயனறி வொனறுணடு பனமலர தூவிப
பயனறி வாரககரன றானெ பயிலும
நயனஙகள மூனறுடை யானடி செர
வயனஙக ளாலெனறும வநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்கள் ஆல் என்றும் வந்து நின்றானே.

பதப்பொருள்:

பயன் (பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய) அறிவு (அறிவு) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது அதை பெறுவதற்கு) பன் (பலவிதமான) மலர் (நறுமணம் மிக்க மலர்களைத்) தூவி (தூவி அருச்சனை செய்து)
பயன் (அதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை) அறிவார்க்கு (அறிந்து கொள்கின்றவர்களுக்கு) அரன் (இறைவன்) தானே (தாமாகவே) பயிலும் (படிப்படியாக அனுபவங்களைக் கொடுத்து அருள்வான்)
நயனங்கள் (திருக் கண்கள்) மூன்று (மூன்று) உடையான் (உடைய இறைவனின்) அடி (திருவடியை) சேர (முழுவதுமாக சரணடைய)
வயனங்கள் (அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையின்) ஆல் (மூலமே) என்றும் (எப்போதும்) வந்து (இறைவன் அடியவருக்குள் வந்து) நின்றானே (நிற்பான்).

விளக்கம்:

பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய அறிவு ஒன்று உண்டு. பல விதமான நறுமணம் மிக்க மலர்களை தூவி இறைவனுக்கு அருச்சனை செய்வதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை அறிந்து கொள்கின்ற அடியவர்களுக்கு இறைவன் தாமாகவே படிப்படியாக பல அனுபவங்களை கொடுத்து அருள்வான். மூன்று கண்களைக் கொண்ட இறைவனின் திருவடியே கதியென்று முழுவதுமாக சரணடைந்த அடியவர்களுக்கு அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையிலேயே இறைவன் வந்து நிற்பான்.

பாடல் #1835

பாடல் #1835: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

கழிப்படு தண்கடல் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மட்டறி வார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வாருச்சி மேவிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கழிபபடு தணகடல கெளவை யுடைதது
வழிபபடு வாரமலர மடடறி வாரகள
பழிபபடு வாரபலரும பழி வீழ
வெளிபபடு வாருசசி மெவிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கழி படு தண் கடல் கௌவை உடைத்து
வழி படுவார் மலர் மட்டு அறிவார்கள்
பழி படுவார் பலரும் பழி வீழ
வெளி படுவார் உச்சி மேவி நின்றானே.

பதப்பொருள்:

கழி (உப்புத்) படு (தன்மை கொண்ட) தண் (குளிர்ந்த நீருடைய) கடல் (கடலின்) கௌவை (ஓசை மிக்க அலைகளை) உடைத்து (அடக்கி வைத்து)
வழி (இறைவனை தொழுது வழி) படுவார் (படுகின்றவர்கள்) மலர் (தாம் பூஜை செய்கின்ற மலர்களின்) மட்டு (நறுமணத்தை) அறிவார்கள் (அறிவார்கள்)
பழி (எவர் எந்த பழி சுமத்தினாலும்) படுவார் (அதனால் பாதிக்கப் படாமல் இறைவனை மட்டுமே கதியென்று வாழுகின்ற) பலரும் (பல அடியவர்கள்) பழி (தங்கள் மீது மற்றவர்கள் விட்ட பழிகள்) வீழ (வெற்றுப் பேச்சுகளாக வீழ்ந்து போக)
வெளி (உள்ளுக்குள் இருந்து சிவம் வெளிப்) படுவார் (படுவதை அறிவார்கள்) உச்சி (அவர்களின் உள்ளிருந்து அண்ட சராசரங்கள் அனைத்தின் எல்லை வரை) மேவி (பரந்து விரிந்து) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

உப்புத் தன்மை கொண்ட குளிர்ந்த நீருள்ள கடலில் ஓசை மிக்க அலைகள் இல்லாதது போலவே ஐம்புலன்களால் வருகின்ற உணர்வுகளை அடக்கி வைத்து இறைவனை பூஜை செய்து வழிபடுகின்ற அடியவர்கள் தாம் பூஜை செய்கின்ற மலர்களின் நறுமணத்தை அறிவார்கள். அந்த நறுமணத்தின் பலனால் மனம் ஒடுங்கி இறைவன் மேல் மட்டும் எண்ணம் இலயித்து இருக்கும். அந்த நிலையில் எவர் எந்த பழி சுமத்தினாலும் அதனால் பாதிக்கப் படாமல் இறைவன் மட்டுமே கதியென்று வாழுகின்ற அடியவர்களின் மேல் சுமத்திய பழிகள் அனைத்தும் பொய்யாக விழுந்து போகும். அப்போது அந்த அடியவர்களுக்குள் இருந்து வெளிப்பட்ட சிவமானது அண்ட சராசரங்களின் எல்லை வரை பரந்து விரிந்து நிற்கும்.

பாடல் #1834

பாடல் #1834: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
வுள்ளக் கடல்புக்கு வோர்தம்மைப் பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதா
ரள்ளற் கடலு ளழுந்துகின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெளளக கடலுள விரிசடை நநதிககு
வுளளக கடலபுககு வொரதமமைப பூககொணடு
களளக கடலவிடடுக கைதொழ மாடடாதா
ரளளற கடலு ளழுநதுகின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வெள்ள கடல் உள் விரி சடை நந்திக்கு
உள்ள கடல் புக்குவோர் தம்மை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கை தொழ மாட்டாதார்
அள்ளல் கடல் உள் அழுந்துகின்றாரே.

பதப்பொருள்:

வெள்ள (பெரும் நீர் நிறைந்த) கடல் (கடலைப் போல இருக்கின்ற கங்கை நதியை) உள் (தன்னுள் அடக்கி இருக்கின்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனுக்கு)
உள்ள (தமது உள்ளமாகிய) கடல் (கடலில்) புக்குவோர் (தமது பேரன்பினால் இறைவனை தமக்குள் வைக்கும் வல்லமை கொண்ட உண்மை ஞானிகள்) தம்மை (தம்மை) பூ (பூவும் நீரும்) கொண்டு (கொண்டு அருச்சனை செய்து)
கள்ள (மாயையில் சுழலும் வாழ்க்கையாகிய) கடல் (கடலை) விட்டு (விட்டு விட்டு) கை (இரு கைகளையும் கூப்பி) தொழ (தொழுது வணங்க) மாட்டாதார் (மறுக்கின்ற மக்கள்)
அள்ளல் (கர்மங்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்ற) கடல் (கடலாகிய வாழ்க்கையின்) உள் (உள்ளேயே) அழுந்துகின்றாரே (மூழ்கி தமது பிறவியைத் தொலைத்து விடுகின்றனர்).

விளக்கம்:

கடல் வெள்ளம் போன்ற நீரைக் கொண்ட கங்கையை தமது விரிந்த சடைக்குள் அடக்கி ஒரு சிறு நதியாக தருகின்ற குருநாதராகிய இறைவனை தமது பேரன்பினால் உள்ளமாகிய கடலுக்குள் வைக்கும் வல்லமை கொண்ட உண்மை ஞானிகளை நாடிச் சென்று பூவையும் நீரையும் அர்ப்பணித்து மாயையில் சுழலுகின்ற வாழ்க்கையாகிய கடலை விட்டு விட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கித் தொழுவதற்கு மறுக்கின்ற மக்கள் மேலும் மேலும் கர்மங்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்ற வாழ்க்கைக் கடலுக்குள் மூழ்கி பல வித துன்பங்களை அனுபவித்து தமது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள்.

பாடல் #1833

பாடல் #1833: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உழைக்கொண்ட பூநீ ரொருங்குட னேந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்ற வானோர்
தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப்
பிழைப்பின்றி யெம்பெரு மானரு ளாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழைககொணட பூநீ ரொருஙகுட னெநதி
மழைககொணட மாமுகில மெறசெனற வானொர
தழைககொணட பாசந தயஙகிநின றெததப
பிழைபபினறி யெமபெரு மானரு ளாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்ற வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.

பதப்பொருள்:

உழை (உண்மையான அன்பு) கொண்ட (கொண்டு) பூ (பூவும்) நீர் (தூய்மையான நீரும்) ஒருங்கு (ஒன்றாக சேர்த்து) உடன் (தம்முடன்) ஏந்தி (கையில் ஏந்திக் கொண்டு)
மழை (மழை நீரை) கொண்ட (கொண்டு இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டங்களுக்கு) மேல் (மேலே) சென்ற (சென்று இருக்கின்ற) வானோர் (விண்ணுலகத் தேவர்களுக்கு பூஜை செய்து)
தழை (உலக பிறப்போடு இணைந்து) கொண்ட (கொண்ட) பாசம் (பாசத்தால்) தயங்கி (உலக வாழ்க்கையில் பலவித துன்பங்களில்) நின்று (நின்று) ஏத்த (அதை போக்கி அருள வேண்டும் என்று இறைவனை போற்றி வணங்க)
பிழைப்பு (குற்றம்) இன்றி (இல்லாமல்) எம் (எமது) பெருமான் (பெருமானாகிய இறைவனின்) அருள் (திருவருள்) ஆமே (கிடைக்கும்).

விளக்கம்:

உண்மையான அன்போடு அருச்சனை செய்வதற்கு நறுமணம் மிக்க மலர்களையும் அபிஷேகம் செய்வதற்கு தூய்மையான நீரையும் ஒன்றாக கைகளில் ஏந்தி வந்து, மழை நீரைக் கொண்ட மாபெரும் மேகக் கூட்டங்களுக்கு மேலே வசிக்கின்ற விண்ணுலகத் தேவர்களுக்கு பூஜை செய்து, இந்த உலகில் பிறவி எடுக்கும் போது அதனுடன் சேர்ந்து வந்த பந்த பாசங்களினால் அனுபவிக்கின்ற பலவித துன்பங்களில் இருந்து தம்மை விடுவித்து அருளும் படி இறைவனை போற்றி வணங்கும் அடியவர்களுக்கு இறைவனின் திருவருளானது எந்தவித குற்றமும் இல்லாமல் பரிபூரணமாக கிடைக்கும்.

பாடல் #1832

பாடல் #1832: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆனைந்து மாட்டி யமரர் குழாந்தொழத்
தானந்த மில்லாத் தலைவ னருளது
தேனுந்து மாமல ருள்ளே தெளிந்ததோர்
பாரைந்து குணமும் படைத்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆனைநது மாடடி யமரர குழாநதொழத
தானநத மிலலாத தலைவ னருளது
தெனுநது மாமல ருளளெ தெளிநததொர
பாரைநது குணமும படைததுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் குழாம் தொழ
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தது ஓர்
பார் ஐந்து குணமும் படைத்து நின்றானே.

பதப்பொருள்:

ஆன் (அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற) ஐந்தும் (மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவர்களுக்கும்) ஆட்டி (தீப ஆராதனை செய்து) அமரர் (அமரர்களின்) குழாம் (கூட்டம்) தொழ (தொழுது வணங்கும் போது)
தான் (தனக்கென்று) அந்தம் (எந்த ஒரு முடிவும்) இல்லா (இல்லாத) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) அது (அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுகின்றது)
தேன் (தெகிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை) உந்து (வெளியே அலைந்து தேடாமல் உண்மையான ஞானிகளால் தமக்குள்ளே தேடி அடைகின்ற) மா (மாபெரும்) மலர் (மலராகிய சகஸ்ரர தளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின்) உள்ளே (உள்ளே) தெளிந்தது (தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு பேரின்ப அமிழ்தமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது)
பார் (இந்த உலகத்தில் இருக்கின்ற) ஐந்து (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து விதமான பூதங்களின்) குணமும் (குணமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது) படைத்து (இப்படி அனைத்தையும் தமது திருவருளால் உருவாக்கி) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவர்களுக்கும் தீப ஆராதனை செய்து அமரர்களின் கூட்டம் தொழுது வணங்கும் போது அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுவது தனக்கென்று எந்த ஒரு முடிவும் இல்லாத தலைவனாகிய இறைவனின் திருவருளே ஆகும். தெகிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை வெளியே அலைந்து தேடாமல் உண்மை ஞானிகளால் தமக்குள்ளே தேடி அடைகின்ற மாபெரும் மலராகிய சகஸ்ரர தளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற ஒரு பேரின்ப அமிழ்தமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது. இந்த உலகத்தில் இருக்கின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து விதமான பூதங்களின் குணமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது. இப்படி தமது திருவருளாலே அனைத்தையும் உருவாக்கி நிற்கின்றான் இறைவன்.

பாடல் #1831

பாடல் #1831: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆரா தனையு மமரர் குழாங்களுந
தீராக் கடலு நிலத்து மதாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான் றிருநாமமே
யாரா வழியெங்க ளாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆரா தனையு மமரர குழாஙகளுந
தீராக கடலு நிலதது மதாயநிறகும
பெரா யிரமும பிரான றிருநாமமெ
யாரா வழியெஙக ளாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்தும் அது ஆய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திரு நாமமே
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே.

பதப்பொருள்:

ஆராதனையும் (அடியவர்கள் செய்கின்ற ஆராதனைகளாகவும்) அமரர் (வானுலகத்து அமரர்கள்) குழாங்களும் (கூட்டங்களாகவும்)
தீரா (எவ்வளவு எடுத்தாலும் தீராத அளவிற்கு நீரைக் கொண்ட) கடலும் (கடலாகவும்) நிலத்தும் (அந்த கடலால் சூழப்பட்ட நிலங்களாகவும்) அது (இவை அனைத்தும்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்ற)
பேர் (தனக்கென்று தனிப்பெயர் இல்லாவிட்டாலும் அடியவர்களால் அன்போடு அழைக்கப் படுகின்ற) ஆயிரமும் (ஆயிரம் பெயர்களைக் கொண்ட) பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) திரு (திரு) நாமமே (நாமமே)
ஆரா (இறப்பு இல்லாத நிலைக்குச் செல்லுகின்ற) வழி (வழியாக) எங்கள் (எங்களின்) ஆதி (ஆதிமூல) பிரானே (தலைவனாகிய இறைவனே இருக்கின்றான்).

விளக்கம்:

அடியவர்கள் செய்கின்ற ஆராதனைகளாகவும், வானுலகத்து அமரர்களின் கூட்டமாகவும், எவ்வளவு எடுத்தாலும் தீராத அளவிற்கு நீரைக் கொண்ட கடல்களாகவும், அந்த கடல்களால் சூழப்பட்ட நிலங்களாகவும், அந்த நிலத்தில் வாழுகின்ற அடியவர்களால் அன்போடு அழைக்கப் படுகின்ற ஆயிரம் பெயர்களாகிய திருநாமங்களாகவும், அதை முறைப்படி சொல்லுகின்ற அடியவர்களை இறப்பு இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்லுகின்ற வழியாகவும், ஆதி மூல தலைவனாகிய இறைவனே இருக்கின்றான்.

பாடல் #1830

பாடல் #1830: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

மறப்புறுத் திவ்வழி மண்ணில் நின்றாலுஞ்
சிறப்போடு பூநீர் திருந்த முன்னேந்தி
மறப்பின்றி யுன்னை வழிப்படும் வண்ண
மறப்பற வேண்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மறபபுறுத திவவழி மணணில நினறாலுஞ
சிறபபொடு பூநீர திருநத முனனெநதி
மறபபினறி யுனனை வழிபபடும வணண
மறபபற வெணடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மறப்பு உறுத்து இவ் வழி மண்ணில் நின்றாலும்
சிறப்போடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிப்படும் வண்ணம்
அறப்பு அற வேண்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

மறப்பு (மாயையினால் உன்னை மறக்கும்) உறுத்து (நிலையை அடைந்து) இவ் (இந்த) வழி (உலக வழிகளில் இன்பம் பெற வேண்டி) மண்ணில் (உலகத்தில்) நின்றாலும் (நின்று இருந்தாலும்)
சிறப்போடு (சிறப்பாக விளங்கும்) பூ (நறுமணமான மலர்களும்) நீர் (தூய்மையான நீரும்) திருந்த (உண்மையான அன்போடு யாம் மாற வேண்டும் என்று வேண்டி) முன் (உனக்கு முன்பு) ஏந்தி (கையில் ஏந்தி வந்து)
மறப்பு (இனி உன்னை மறந்து போகின்ற) இன்றி (நிலை இல்லாமல்) உன்னை (எப்போதும் உன்னை) வழிப்படும் (சீராக நினைத்து போற்றுவதற்கு) வண்ணம் (ஏற்ற படி)
அறப்பு (எந்த விதமான பாவமும்) அற (இல்லாமல்) வேண்டும் (உன் அருளைப் பெற வேண்டும் என்று யாம் வேண்டுகின்றோம்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவனே).

விளக்கம்:

அமரர்களின் தலைவனாகிய இறைவனே ஆசையினால் உன்னை பிரிந்து இந்த உலகத்தில் பிறந்து மாயையினால் உன்னை மறந்து உலக வழிகளில் கிடைக்கின்ற இன்பத்திலேயே நின்று கிடக்கின்றோம். உன் அருளால் இந்த நிலையிலிருந்து யாம் மாறி எந்த விதமான பாவமும் இல்லாமல் உன்னை சீராக நினைத்து போற்றுவதற்கு ஏற்றபடி அருளை பெற வேண்டும் என்று உண்மையான அன்போடு நறுமணமான மலர்களையும் தூய்மையான நீரையும் எமது கைகளில் ஏந்தி வந்து உனது முன் வேண்டுகின்றோம். எம்மீது கருணை கொண்டு அருள்வாயே.

பாடல் #1829

பாடல் #1829: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

அத்த னவதீர்த்த மாடும் பரிசுகே
ளொத்த மெஞ்ஞானத் துயர்ந்தவர் பாதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தி யாமென்று நம்மூலன் மொழிந்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதத னவதீரதத மாடும பரிசுகெ
ளொதத மெஞஞானத துயரநதவர பாதததைச
சுததம தாக விளககித தெளிககவெ
முததி யாமெனறு நமமூலன மொழிநததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அத்தன் நவ தீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய் ஞானத்து உயர்ந்தவர் பாதத்தை
சுத்தம் அது ஆக விளக்கி தெளிக்கவே
முத்தி யாம் என்று நம் மூலன் மொழிந்ததே.

பதப்பொருள்:

அத்தன் (அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய இறைவன்) நவ (நமது உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான) தீர்த்தம் (தீர்த்தங்களாகிய சக்கரங்களில்) ஆடும் (திருநடனம் புரிவதினால்) பரிசு (கிடைக்கின்ற பலனை) கேள் (கேளுங்கள்)
ஒத்த (இறைவனுக்கு இணையாகிய) மெய் (உண்மையான) ஞானத்து (ஞானத்தில்) உயர்ந்தவர் (உயர்ந்து விளங்கும் ஞானிகளின்) பாதத்தை (அருள் நிறைந்த திருவடிகளை)
சுத்தம் (சுத்தமான) அது (நீரினால்) ஆக (சுத்தமாக) விளக்கி (கழுவித் துடைத்து) தெளிக்கவே (கழுவிய நீரை தம் தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொண்டால்)
முத்தி (மும்மலங்களும் நீங்கப்பெற்று கிடைக்கின்ற முக்தி நிலையாக) யாம் (யாமே இருப்போம்) என்று (என்று) நம் (நமக்கெல்லாம்) மூலன் (ஆதிமூலமாகிய இறைவன்) மொழிந்ததே (சொல்லி அருளினான்).

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய இறைவன் நமது உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான தீர்த்தங்களாகிய சக்கரங்களில் திருநடனம் புரிவதனால் கிடைக்கின்ற பலனை பற்றி கூறுகின்றேன் கேளுங்கள். இறைவனுக்கு இணையாகிய உண்மையான ஞானத்தில் உயர்ந்து விளங்கும் ஞானிகளின் அருள் நிறைந்த திருவடிகளை சுத்தமான நீரினால் கழுவித் துடைத்து அந்த நீரை நமது தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொண்டால் அந்த அருளின் பயனால் நமக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான தீர்த்தங்களாகிய சக்கரங்களில் இறைவன் வந்து திருநடனம் புரிவான். அப்போது அதன் பயனால் மும்மலங்களும் நீங்கப்பெற்று கிடைக்கின்ற முக்தி நிலையாக இறைவனே இருப்பான் என்று நமக்கெல்லாம் ஆதிமூலமாகிய இறைவனே சொல்லி அருளினான்.

உட் கருத்து:

புண்ணிய நதிகளில் நீராடுவதை விட இறைவனை உணர்ந்த ஞானிகளின் பாதங்களை கழுவிய நீரை தெளித்துக் கொள்வது எளிதில் இறையருளைப் பெறுவதற்கு வழிவகுக்கும். அது எப்படி என்றால் இறைவனை உணர்ந்த ஞானிகளின் அருள் நிறைந்த பாதங்களை தூய்மையான நீரினால் சுத்தமாக கழுவித் துடைத்தால் அந்த பாதத்தில் இருக்கின்ற அருளின் மூலம் நமக்குள் இருக்கின்ற மாயையாகிய அழுக்குகள் நீங்கி உண்மை அறிவைப் பெற்று அதன் மூலம் முக்தியை அடையலாம்.

உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது சக்கரங்கள்:

மூலாதாரம் (அக்னி மண்டலம்)
சுவாதிஷ்டானம்
மணிப்பூரகம்
அநாகதம்
விசுக்தி
ஆக்ஞை
சகஸ்ரதளம்
சூரிய மண்டலம் (துவாத சாந்த வெளி)
சந்திர மண்டலம்

பாடல் #1828

பாடல் #1828: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருள
வண்ணலது கண்டருள் புரியா நிற்கு
மெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனை
நண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணியஞ செயவாரககுப பூவுள நீருள
வணணலது கணடருள புரியா நிறகு
மெணணிலி பாவிக ளெமமிறை யீசனை
நணணியறி யாமல நழுவுகின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண்ணியம் செய்வார்க்கு பூ உள நீர் உள
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.

பதப்பொருள்:

புண்ணியம் (இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை) செய்வார்க்கு (செய்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனை வழிபடுவதற்கு தேவையான) பூ (பூவும்) உள (கிடைக்கும்) நீர் (நீரும்) உள (கிடைக்கும்)
அண்ணல் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனை) அது (அனைத்து உயிர்களிலும்) கண்டு (கண்டு அறிந்து) அருள் (அந்த உயிர்களின் மேல் கருணை) புரியா (செய்யாமல்) நிற்கும் (நிற்கின்ற)
எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத அளவிற்கு பெரும்பாலான) பாவிகள் (பாவிகள்) எம் (எமது) இறை (இறைவனாகிய) ஈசனை (சிவபெருமானை)
நண்ணி (நெருங்கிச் சென்று) அறியாமல் (அறிந்து கொள்ளாமல்) நழுவுகின்றாரே (அறியாமையால் விலகிச் சென்றே அழிகின்றார்கள்).

விளக்கம்:

இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை செய்கின்றவர்களுக்கு இறைவனை வழிபடும் போது அதற்கு தேவையான பூவும் நீரும் இறையருளால் எப்போதும் கிடைக்கும். ஆனால் எண்ணிக்கையில்லாத அளவு பெரும்பாலான மனிதர்கள் அனைத்து உயிர்களிலும் இறைவனை கண்டு அறிந்து கொண்டு அந்த உயிர்களின் மேல் கருணை செய்து அதன் மூலம் இறைவனை நெருங்கிச் சென்று அவனை முழுவதும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அறியாமையால் இறைவனை விட்டு விலகிச் சென்ற பாவிகளாகவே வாழ்ந்து அழிகின்றார்கள்.

பாடல் #1827

பாடல் #1827: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினு ளீசனிலை பெறு காரண
மஞ்சமு தாமுப சாரமெட் டெட்டோடு
மஞ்சலி யோடுங் கலந்தற்சித் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மஞசன மாலை நிலாவிய வானவர
நெஞசினு ளீசனிலை பெறு காரண
மஞசமு தாமுப சாரமெட டெடடொடு
மஞசலி யொடுங கலநதறசித தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம்
அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டோடும்
அஞ்சலியோடும் கலந்து அற்சித்தார்களே.

பதப்பொருள்:

மஞ்சன (அடியவர்களால் அபிஷேகமும்) மாலை (மலர் மாலைகள் சூட்டி அலங்காரமும் செய்து வழிபடப் படுகின்ற) நிலாவிய (ஒளியாக வலம் வருகின்ற / இறைவனின் பிரதிநிதியாக வைத்து வழிபடப் படுகின்ற) வானவர் (வானுலகத்து தேவர்களின்)
நெஞ்சின் (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) ஈசன் (இறைவன்) நிலை (எப்போதும் வீற்றிருந்து) பெறு (அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு) காரணம் (காரணம் என்னவென்றால்)
அஞ்சு (பஞ்ச) அமுது (அமிர்தமாக) ஆம் (இருக்கின்ற உணவுக் கூழை படைத்து) உபசாரம் (இறைவனை போற்றி வணங்குகின்ற) எட்டு (எட்டும்) எட்டோடும் (எட்டும் கூட்டி வருகின்ற மொத்தம் 16 விதமான உபசாரங்களை செய்து)
அஞ்சலியோடும் (இரண்டு கரங்களையும் ஒன்றாக கூப்பி வேண்டி) கலந்து (மனதை இறைவன் மேல் வைத்து) அற்சித்தார்களே (உண்மையான அன்போடு அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்).

விளக்கம்:

அடியவர்களால் அபிஷேகமும் மலர்கள் சூட்டி அலங்காரமும் செய்து இறைவனின் பிரதிநிதிகளாக வழிபடப் படுகின்ற வானுலகத்து தேவர்களின் நெஞ்சத்திற்குள் இறைவன் வீற்றிருந்து அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு காரணம் என்னவென்றால் அடியவர்கள் உண்மையான அன்போடு பஞ்சாமிர்தம் முதலாகிய 16 விதமான உபசாரங்களை செய்து அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்.

16 வகையான உபசாரங்கள்:

  1. ஆவாகனம் – மந்திரத்தால் இறை சக்தியை ஒரு மூர்த்திக்கு மாற்றுதல்
  2. தாபனம் – மூர்த்தியை பிரதிஷ்டை செய்தல்
  3. சந்நிதானம் – மூர்த்தி இருக்கின்ற மூலஸ்தானத்தை சுத்தப் படுத்துதல்
  4. சந்நிரோதனம் – இறைவனது சாந்நியத்தை (சக்தி வெளிப்பாடு) மூர்த்தியில் நிறுத்துதல்
  5. அவகுண்டவம் – மூர்த்தியை சுற்றி மூன்று கவசங்களை மந்திரத்தால் உருவாக்குதல்
  6. தேனுமுத்திரை – மனதை ஒருநிலைப் படுத்தி முத்திரை காட்டுதல்
  7. பாத்தியம் – மூல மந்திரத்தை உச்சரித்து மூர்த்தியின் திருவடியில் தீர்த்தம் சமர்ப்பித்தல்
  8. ஆசமனீயம் – புனிதப் படுத்தும் நீரை மந்திரத்தால் உட்கொள்ளுதல்
  9. அருக்கியம் – தூய்மையான நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்தல்
  10. புஷ்பதானம் – மலர்கள் சாற்றுதல்
  11. தூபம் – சாம்பிராணி காட்டுதல்
  12. தீபம் – தீப ஆராதனை செய்தல்
  13. நைவேத்தியம் – இறைவனை நினைத்து சமைத்த சாத்வீகமான உணவு படைத்தல்
  14. பாணீயம் – தூய்மையான நீர் படைத்தல்
  15. செபசமர்ப்பணம் – மந்திரங்களை ஜெபித்து சமர்ப்பித்தல்
  16. ஆராத்திரிகை – போற்றி பாடி மணியடித்து ஆராதித்தல்