பாடல் #320

பாடல் #320: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

விளக்கம்:

தனக்கோ உற்றார் உறவினர் மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும் இன்பம் துன்பம் என எது வந்தாலும் எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காத விருப்பு வெறுப்பு இல்லாமல் தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

பாடல் #321

பாடல் #321: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே பின்பு உலகத்தைக் காக்கும் திருமால் உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். சிலர் சிறந்த ஞானியாகி சிவமாகவே மாறிவிடுவார்கள்.

பாடல் #322

பாடல் #322: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே ஆகின்றார்கள், யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

பாடல் #323

பாடல் #323: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

விளக்கம்:

அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து ஈசன் திருவடிகளை பற்றி மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.