அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #74

30-1-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக பாதையில் செல்ல குருவிடம் சரணாகதி ஆன பின்பும் ஏன் வெறுமை நிலை ஏற்படுகிறது?

பொதுவாக சரணாகதி நிலையும் குரு அருளும் குருவின் மீது விடா சிந்தனையும் நிலைத்திட அங்கு வெறுமைக்கு இடமில்லை. ஏனென்றால் அத்தகைய நிலை பேரானந்தம் கொடுக்க வேண்டும். இவ்விதம் ஆனந்தம் கொடுக்கும் நிலையில் வெறுமைக்கு அங்கு இடம் இல்லை அவ்விதம் வெறுமை கொண்டு விட்டால் தவறு உன்னுடையதே. ஏனெனில் இன்னும் முழுமையாக ஆசாபாசங்களை விடாநிலையில் இமயம் ஏறுதல் வேண்டும் என எண்ணம் படைத்தாய். இதனை மாற்றிக் கொண்டு சரணாகதி முழுவதாகவும் பக்தியினை வளர்த்தல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #73

3-1-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காலம் என்பது என்ன?

இதனை கூறுவது மிகவும் கடினமாகும். மானிட அளவில் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்றெல்லாம் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் எக்காரியம் எக்காலத்தில் சாதித்தல் வேண்டும் என்பது ஓர் கேள்விக்குரியாகவே எப்பொழுதும் உண்டு. இந்நிலையில் கால வரம்பினை நாம் நிர்ணயிக்க இயலாது. இக்கால வழிகளில் இப்பணிகள் அப்பணிகள் என்று பிரித்து குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கணக்கிடுகின்றார்கள். இக்குறிப்பிட்ட காலத்தில் இப்பணிபுரிதல் செய்ய வேண்டும் என்றால் அக்காலத்திற்கு ஓர் சக்தி தானாக பெறுதல் வேண்டும். அச்சக்தி இறையருள் ஆகும். இத்தகைய நிலையில் காலத்தை வீணாக்குதல் என்பது ஓர் மாபெரும் குற்றமாகும், குறிப்பாக ஆன்மீக பாதையில் செல்வோர் அங்கும் இங்கும் அலைந்து இருக்கும் இடத்தை விட்டும் ஓடி அலைந்தும் காலத்தை வீணாக்கிட்டால் அப்பொன் போன்ற காலங்கள் மீண்டும் கிடைக்காது என்பதை உணர வேண்டும் இதை யாம் மட்டும் கூறுவது அல்ல ஆன்மீக நிலையில் உயர்ந்தோரின் கருத்தும் ஆகும் இதனை மனமதில் வைத்து செயல்படுவது நன்றே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #72

7-12-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தில் செல்லும் போது எதில் ஒழுக்கம் வேண்டும்?

ஆன்மீக பாதையில் ஒழுக்கமே அச்சாணி என்பதை மறந்து விட்டீர்கள். ஒழுக்கம் என்பது மன அளவில் வாக்கு அளவில் செயல் அளவில் சிந்தனையில் என்பதெல்லாம் உண்டு என்பதனால் அதிக அளவில் அசையாது அதிக அளவில் பேசாது அதிக அளவில் தகாதோர் உறவு இல்லாமல் இயன்ற அளவில் தனிமை காண மனசுத்தி தானாக ஆகும். மற்ற சுத்திகள் தொடர்ந்து வரும் இருப்பினும் இதற்கு மேலான அர்த்தம் உண்டு. ஒழுக்கம் என்பதற்கு மறு அர்த்தம் என்னவென்றால் ஒழுகி வருவது என்பதும் அர்த்தமாகின்றது. இதனை ஆங்கிலமதில் கூறினால் UNINTERRUPTED FLOW என்றும் கூறுவர். மனமதில் இடைவிடாது இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது முடியுமா என்று கேட்டால் இதற்கு உதவியாக மந்திரங்கள் சதா மனமதில் உச்சாடனம் (ஜெபிக்க) செய்ய இறை சிந்தனை எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. அவ்விதம் மனமதில் இறைவனை நீக்கி விட்டால் மனசுத்தம் இல்லை என்பதே பொருளாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #71

9-11-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பரிபூரண சரணாகதி அடைந்தோர்க்கு கிரகங்களை விட்டு செல்ல இயலும். (நவகிரகங்களின் பாதிப்பு வராது) அனைத்து தியானம் ஜபம் என்கின்றவை செய்தலோடு சரணாகதியும் காண எவ்வித பாதிப்புகளும் வராது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #70

13-10-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தந்திரம், மந்திரம் எந்த முறை பூஜை சிறப்பானது?

பூஜைகள் மூன்று வகை உண்டு. மந்திரம், தந்திரம் இதற்கு மேலானது மானசீக பூஜை. மனதிற்குள் சொல்லும் மந்திரம் சிறந்தது என்றும் அவ்வழியில் பூஜைகளும் மானசீகமாய் செய்வதே சிறந்தது. இரண்டாவது வழி தாந்திரிக பூஜை இது மந்திரமது மனதிற்குள்ளும் முத்திரை வழி அதாவது செய்கையின் வழி உணர்த்தும் பூஜையாம். மூன்றாவது மந்திர உச்சாடனம் இரண்டாவது கற்ப்பது சிறிது கடினம் என்றும் செய்யும் முத்திரைகள் சீரில்லையேல் பலனும் குறையும் இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மந்திரம் பின்பு தந்திரம் பின்பும் மானசீகம் என்ற விதிமுறையே வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #69

16-9-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனிதனுக்கு விடுதலை கிட்டாமல் தடுப்பது எப்பொருள்?

இதில் பெரும் சிந்தனை தேவையற்றதாகின்றது ஏனெனில் பெரும் சொத்தானது மனிதனுக்கு தன் உயிர் ஒன்றே இதற்கு பின்பே மற்றவை அனைத்தும் ஏனெனில் வெள்ளி (பணம்) செல்வங்கள் உண்ண இயலாது எதற்கும் உதவாது. கடினமான காலங்கள் தோன்றும் போது உயிர் என்பதே கடைசியாக பிரியும் சொத்தாக இருக்கின்றதால் அதற்கு மேல் தான் மனிதனுக்கு பற்று அப்பற்றினை நீக்கிட முயற்சிகள் செய்திட வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #68

19-8-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பல மகாகவிகள் பல மகான்கள் செய்யுள்கள், பாடல்கள், தேவாரங்கள் என்றெல்லாம் எழுதிய போதிலும் விகடகவிகளுக்கு ஏன் முக்கியத்துவம் உள்ளது?

விகடகவிகள் என்றால் லேசாக எடையிடுதல் ஆகாது ஏனெனில் பாமரமக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் நகைச்சுவையுடன் பல பல முக்கியமான பொருள்களும் எடுத்துரைத்துள்ளார்கள். இதை மனமதில் நிறுத்த வேண்டும் இன்று ஓர் திருமந்திர செய்யுளை எளிதாக உணர முடியாத பொழுதும் அதனின் பொருளை எடுத்து எளிதாக நகைச்சுவை மூலமாக மக்களுக்கும் எடுத்துரைத்துள்ளார்கள் இத்தகைய நிலையில் அவர்கள் பணி மகத்தானது மேலும் விகடத்தை மட்டும் காணாது உட்பொருட்களை சிரத்தையோடு காணுதல் வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகிறது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #67

23-7-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகம் என்கின்ற பாதையில் ஒருவன் செல்லும் போது முதன்மையில் பல பல ரூபங்கள் வழிபட்டும் மேல் செல்ல செல்ல எப்படி நம்மிடமுள்ள பழக்கங்கள் உதிருகின்றதோ அவ்விதம் ஒவ்வொரு ரூபமும் உதிர்ந்து விடும். முடிவில் ஓரிரு ரூபங்கள் இருக்கும் காலத்தில் இதனையும் தாண்டி செல்லுதல் வேண்டும் என எண்ணினால் மிகவும் ஓர் வெறுமை தோன்றும். இவ்விதம் வெறுமை தோன்றுவது சீரில்லை. ஏனெனில் சீராக சாதனைகள் செய்து கொண்டால் ரூபம் விட்டு அரூப நிலைக்கு செல்லும் போது ஆனந்தமே பெருகுதல் வேண்டும். அவ்விதம் ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் இந்நிலைக்கு இன்னும் தகுதி பெறவில்லை என்றே பொருளாகும். இதனை மனதில் நிறுத்த வேண்டும். இந்நிலை அடைய முயற்சிகள் பெருக்கிடல் வேண்டும். ஏனெனில் நாம் பட்டப்படிப்புக்கு செல்லும் போது கீழ் வகுப்பு புத்தகங்களை உபயோகித்தலாகாது என்கின்ற விதியும் உண்டு. இத்தகைய நிலையில் மேல் நிலை அடையுங்கால் மீண்டும் எமக்கு விளையாட்டுத்தனமாக சாதனைகள் வேண்டும் என்பதே சரியில்லை. இது கடினமாக சொல்லவில்லை என்கின்ற போதிலும் இது ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும் என்றும் எண்ணிட்டோமே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #66

25-6-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

இறந்து சென்றவர்கள் பல பிறவி எடுக்கின்றனர் என்கின்ற நிலையில் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகும் அவர்களுக்கு ஏன் ஸ்ரார்த்தம் தவசம் என்றெல்லாம் நடத்துதல் வேண்டும்?

இது உங்கள் மன திருப்திக்காக நடத்துகின்றீர்கள் ஓராண்டு உங்கள் திருப்திக்கு செய்தபின் வருகின்ற ஆண்டுகளில் அந்நாளில் அன்னம் பலித்து (அன்னதானம் செய்து) அந்த அண்ணதான புண்ணியத்தை அந்த ஆத்மாவிற்கு எங்கு இருந்த போதிலும் அங்கு சமர்ப்பணம் செய்வதே சிறந்த வழியாகின்றது. பசியுள்ளவனுக்கு அன்னதானம் செய்து அவன் உண்டு வாழ்த்துதல் வேண்டும். இங்கு உயர் குலத்தோன் கீழ் குலத்தோன் என்பது எதுவுமில்லை. ஆண் பெண் பேதமில்லை. பசி என்பது யாவர்கும் ஒன்றே நன்றாக பசித்து பசி தீர்ந்த பின் வாழ்த்தும் வாழ்த்தே சிறந்த வாழ்த்தாகும். இவ்வழி செய்வதே நலம் தருவதாகும். மற்றவர்கள் ஆச்சாரம் அடிப்படையில் இவ்விதம் அவ்விதம் என்று கூறுவார்கள். இழுவு வீட்டில் உள்ளோர் ஓராண்டு காலம் ஆலயம் செல்லுதல் வேண்டாம் என்றும் கூறுவது உண்டு. இதுவும் எமது அபிப்பிராயத்தில் மடமையாகின்றது. விதி முடிவதற்கும் ஆண்டவனுக்கும் என்ன சம்பந்தம் சைவ நெறியில் உட்பட்டதாக ஒருவர் மாண்டுவிட்டால் காரியங்கள் அன்று முடிந்த பின்பே ஆலயத்திற்கு செல்லுதல் வேண்டும் என்பதே விதியாகும். இதில் சைவ சித்தாந்தத்தில் வழியுண்டு என்று கூறுகிறோம். மற்றவர்கள் கூறுவது ஆச்சார்ய முறைகளாகும். மதத்தை சார்ந்ததாகும் உண்மையான ஆன்மீகம் மதம் எங்கு முடிகின்றதோ அங்கு தான் துவங்கும். இங்கு வருபவர்கள் ஆன்மீகத்தை நாடுகின்றனர் என்கின்ற ஓர் கருத்தின் அடிப்படையில் இவ்விதம் கூறினோம்.

மானசீக பூஜையில் ஆலய விதிமுறைகளின் படி பூஜை செய்ய முடியுமா?

உள்ளம் ஓர் ஆலயம் எனக் கணக்கிட்டால் நமது ஸ்வரமானது (மூச்சுக்காற்றானது) நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பு மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபகரணங்களாகவும் கண்களில் காணும் மின் ஒளியை ஆரத்தியாகவும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வளர்த்தல் வேண்டும். இவ்விதம் செய்திட்டால் உள்ளமானது ஓர் உத்தமமான ஆலமாகின்றது. அவ்விதம் ஆகிய பின் மற்ற தலங்களில் (ஆலயங்களில்) அலைய மனதிற்குத் தோன்றாது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #65

29-5-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றுதல் வேண்டுமா?

பலருக்கும் இதில் மனக்குழப்பங்கள் உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இல்லை சப்தமத்திற்கு (15நாட்களுக்கு ஒரு நாள்) ஏதேனும் ஒரு நாள் தீபம் ஏற்றினால் போதாதா என மனதில் தோன்றுகிறது. ஏனெனில் விளக்கேற்றுவதும் கிரியை (வேலை) அன்றோ? என கூறுகின்றனர். இது ஓர் தவறான அபிப்பிராயமாகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஈடானது தீபம் என்றும் அது வீட்டில் தினந்தோறும் காலை மாலை ஏற்றுதல் வேண்டும். காலையில் சூரியன் உதயமாகும் காலங்களிலும் பின்பு மாலை சந்திரன் வரும் காலங்களிலும் இதனை செய்தல் வேண்டும். அவர்களின் வருகையை போற்றும் வழியாக இதனை செய்கின்றோம். இதனை மறக்க வேண்டாம் மேலும் தீபத்தின் முழு அர்த்தங்கள் என்ன வென்றால் எவருக்கும் இருட்டில் இருப்பது பிடிப்பதில்லை ஏனெனில் இருட்டில் காண்பதெல்லாம் மாறி காண்கின்றோம். சிறிது அச்சம் தோன்றுகிறது. வெளிச்சம் வந்தவுடன் உண்மை விளங்குகிறது இதனால் அச்சம் தீருகின்றது அல்லவா? இது போல வாழ்க்கையிலும் நமக்கு தோன்றும் அச்சங்கள் விரட்டுவதற்கு தினந்தோறும் தீபங்கள் ஏற்றுதல் வேண்டும். இதற்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு பெரும் காரியமல்ல தீபம் வெளிச்சம் கொடுக்கின்றது வெளிச்சம் என்பது அறிவு எனக்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் அறிவு போதும் வெளிச்சம் போதும் என்பது சிறிது மடமையாக தோன்றுகிறது அல்லவா? இதுபோல் என்றும் அறிவு வேண்டும் வெளிச்சம் வேண்டும் என்றும் பயம் அகல வேண்டும் என்றும் ஆனந்தம் பெறுதல் வேண்டும் என்றால் காலை மாலை இரு முறையாவது ஓரு மணி நேரத்திற்காவது தீபத்தை ஏற்றுதல் வேண்டும்.