பாடல் #502: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)
கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுஉணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
விளக்கம்:
எமனால் உயிர்கள் ஒரு நாள் இறந்து போவதைப் பார்த்தாலும் தாமும் அப்படி ஒரு நாள் இறந்து போவோம் என்பதை உணராமல் உயிர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஒவ்வொரு உயிருக்குள்ளும் அந்த உயிரையே தனது அம்சமாகக் கொண்டு இருக்கும் இறைவன் தமக்குள்ளும் இருக்கின்றான் என்பதையும் உணராமல் இருக்கின்றனர். உலக வாழ்க்கையை விட நன்மை தருவது பேரின்பப் பெருவாழ்வு என்பதை உணர்ந்து அன்பாலும் தவத்தாலும் தேடிச் சென்று தமக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் சிலர் மட்டுமே இறைவனின் அருள் பெற்று தேவர்களாக பதவி பெறுகிறார்கள்.
உட்கருத்து: விரைவில் முடியும் உலக வாழ்க்கை மேல் ஆசை வைக்காமல் என்றும் நிரந்தரமான பேரின்பப் பெருவாழ்வுதான் வேண்டும் என்று உணர்ந்த உயிர்கள் மட்டுமே இறைவனின் அருளைப் பெறுவதற்கு தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

மிக மிக கருத்துள்ள பதிவு ஓம் நமசிவாய