பாடல் #250

பாடல் #250: முதல் தந்திரம் – 15. தானச் சிறப்பு (தருமம் செய்வதன் பெருமை)

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

விளக்கம்:

அவர்கள், இவர்கள், பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், வேற்றார் என்று எந்தவித பாகுபாடும் எண்ணாமல் உணவை அனைவருக்கும் கொடுத்து உதவுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு பசியோடு யாராவது வருகின்றார்களா என்று பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள். சாப்பிடாமல் வைத்த பழைய உணவை சேமிப்பாக கருதி எடுத்து வைக்காமல் அதை உடனே பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். உணவின் மேல் அதிக ஆசை வைக்காமலும் பசியோடு இருக்கும்போது அவசர அவசரமாக வேகமாக சாப்பிடாமல் இருங்கள். காக்கை பசியோடு இருக்கும்போதும் கரைந்து கூப்பிட்டு மற்ற காகங்கள் வந்தபின் ஒன்றாகக் கூடி உண்பதைக் கண்டு அடுத்தவருக்கும் உணவை கொடுத்து சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.