பாடல் #1507

பாடல் #1507: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்
சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையா
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாலொக மாதி சரிதாதியிற பெறுஞ
சாலொக சாமீபந தஙகுஞ சரிதையா
மாலொகஞ செரில வழியாகுஞ சாரூபம
பாலொக மிலலாப பரனுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாலோகம் ஆதி சரிதை ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரிதை ஆம்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆகுமே.

பதப்பொருள்:

சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை) ஆதி (முதலாகிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும்) சரிதை (இறைவனை அடைவதற்கான சரியை) ஆதியில் (முதலாகிய சரியை, கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால்) பெறும் (பெறப்படும்)
சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம்) சாமீபம் (இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலை) தங்கும் (நமக்கு கிடைப்பது) சரிதை (சரியையை தொடர்ந்து முறைப்படி) ஆம் (செய்து கொண்டு இருப்பதால் ஆகும்)
மாலோகம் (இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே) சேரில் (சேர்ந்து இருந்தால்) வழி (அதுவே வழியாக) ஆகும் (இருக்கும்) சாரூபம் (அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு)
பாலோகம் (அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும்) இல்லா (இருக்கின்ற வடிவங்களில் இல்லாத) பரன் (பரம்பொருளின்) உரு (ஒளி உருவத்தோடு) ஆகுமே (அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும் இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது சரியையை தொடர்ந்து முறைப்படி செய்து கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால் அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

இறைவனை அடைந்த முக்திக்கான நிலைகள்:

  1. சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
  2. சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
  3. சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
  4. சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

இறைவனை அடைவதற்கான வழிகள்:

  1. சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது.
  2. கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது.
  3. யோகம் – தியானம் தவம் செய்வது.
  4. ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.