பாடல் #1465

பாடல் #1465: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

யோகிக்கும் யோகாதி மூன்றுள தொன்றுற்றோ
ராகத் தகுகிரி யாதி சரிதாதி
யாகத்தை விட்ட சரிதை யொன்றொன்றுள
வாகித்தன் பத்தியு ளன்புவைத் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகிககும யொகாதி மூனறுள தொனறுறறொ
ராகத தகுகிரி யாதி சரிதாதி
யாகததை விடட சரிதை யொனறொனறுள
வாகிததன பததியு ளனபுவைத தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகிக்கும் யோக ஆதி மூன்று உளது ஒன்று உற்றோர்
ஆக தகு கிரியை ஆதி சரிதை ஆதி
யாகத்தை விட்ட சரிதை ஒன்று ஒன்று உள
ஆகி தன் பத்தி உள் அன்பு வைத்தேனே.

பதப்பொருள்:

யோகிக்கும் (யோகத்தை புரிகின்ற யோகிக்கும்) யோக (யோக நெறிமுறைக்கும்) ஆதி (மூலமாக இருக்கின்ற) மூன்று (மூன்று விதமான வழிமுறைகள்) உளது (உள்ளது) ஒன்று (இவற்றோடு ஒன்றி) உற்றோர் (யோக முறையை கடை பிடிக்கின்ற யோகியர்கள்)
ஆக (யோகியாக ஆகுவதற்கு) தகு (தகுந்த) கிரியை (கிரியைகள்) ஆதி (மற்றும் அவற்றின் மூல முறைகள்) சரிதை (சரியைகள்) ஆதி (மற்றும் அவற்றின் மூல முறைகள்)
யாகத்தை (யாகம் செய்வதை) விட்ட (தவிர மற்ற அனைத்து செயல்களும்) சரிதை (அடங்கிய சரியை முறைகள்) ஒன்று (என்று ஒன்றும்) ஒன்று (ஒன்றும் ஆக) உள (உள்ள மூன்று விதமான முறைகளையும்)
ஆகி (தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக் கொண்டு அதன் வழியே புரிகின்ற யோகத்தில்) தன் (தாம் கொண்ட) பத்தி (பக்திக்கு) உள் (உள்ளேயே) அன்பு (இறைவன் மேல் உண்மையான அன்பை) வைத்தேனே (வைத்து இருப்பார்கள்).

விளக்கம்:

யோகத்தை புரிகின்ற யோகிக்கும் யோக நெறிமுறைக்கும் மூலமாக இருக்கின்ற மூன்று விதமான வழிமுறைகள் உள்ளது. இவற்றோடு ஒன்றி யோக முறையை கடை பிடிக்கின்ற யோகியர்கள் யோகியாக ஆகுவதற்கு தகுந்த கிரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் சரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் யாகம் செய்வதை தவிர மற்ற அனைத்து செயல்களும் அடங்கிய சரியை முறைகள் என்று ஒவ்வொன்றாக உள்ள மூன்று விதமான முறைகளையும் தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக் கொண்டு அதன் வழியே புரிகின்ற யோகத்தில் தாம் கொண்ட பக்திக்கு உள்ளேயே இறைவன் மேல் உண்மையான அன்பை வைத்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.