பாடல் #709

பாடல் #709: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

விளக்கம்:

யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

கருத்து: குண்டலினி சக்தியை ஏழு சக்கரங்களுக்கும் ஏற்றிச் சென்று எட்டாவது நிலையில் அமிர்தமாகி ஒன்பதாவது நிலையில் இறைவனோடு கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

பாடல் #710

பாடல் #710: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

விளக்கம்:

குளிர்ச்சியான சந்திரனின் குணம் கொண்ட இடகலை மற்றும் வெப்பமான சூரியனின் குணம் கொண்ட பிங்கலை ஆகிய நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றுகளை சுழுமுனை நாடிவழியே ஒன்றாகச் சேர்த்து மேலெழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் ஒன்றாகக் கலக்கும் படி செய்யும் அகயோகத்தை செய்த யோகியர்களே வானத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் தேவர்களாகிறார்கள். இந்த அகயோகத்தை உண்மையாக கடைபிடித்து இருக்கும் சித்தர்களுக்கு அதையும் தாண்டிய ஆனந்த யோகத்தில் தன்னை அடையும் வழியைக் காட்டி அங்கே அவர்களுடன் கலந்து இறைவனும் நிற்கின்றான்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை மேலே சேர்க்கும் அகயோகத்தை செய்த யோகிகள் தேவர்களாகிறார்கள். அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் இறைவனோடு இணைகின்ற ஆனந்த யோகத்தை செய்த யோகிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

பாடல் #711

பாடல் #711: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டுஅறி வார்க்கு நமனில்லை தானே.

விளக்கம்:

கீழ்நோக்கிச் செல்லும் மூச்சுக்காற்றை மேல்நோக்கி செல்ல வைத்து அதை சுழுமுனை நாடியோடு கட்டி வைக்கும் திறனைப் பெற்ற யோகியர்கள் அனைத்தும் தாமே என்பதை உணர்ந்து நிற்பார்கள். அதன்பின் சகஸ்ரதளத்தில் மலர்ந்த ஆயிரம் தாமரை இதழ்களின் மேலே வீற்றிருக்கும் இறைவனோடு மூச்சுக்காற்றை கலக்கவிட்டு அதை மீண்டும் கீழிறக்கி உள் நாக்கின் மேலே மூடியுள்ள துளையைக் குத்தி அதில் அமிர்தத்தை சுரக்க வைத்து அந்த அமிர்தத்தைப் பருகி தனது நடு நாடியாகிய சுழுமுனையிலேயே மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்க முடிந்த யோகியர்கள் இனி எப்போதும் இறந்து பிறவாத நிலையை அடைவார்கள்.

கருத்து: அகயோகம் ஆனந்தயோகம் செய்த யோகியர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

7-1-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சுய உடமைகள் (பொருட்கள்) இருப்பது தேவையற்றதா? அவ்வாறு சுய உடமைகள் இருப்பது தவறாகுமா?

கலிகாலத்தில் உடமைகள் இல்லாமல் வாழ்வது கடினம். இருப்பினும் நாம் ஒரு பொருளை நம் தேவைக்காக என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொருள் இருந்தால்தான் நம்மால் இருக்க முடியும் என்று இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்துக்கள் இருந்தால் தவறாகாது. சொத்துக்கள் தான் அனைத்தும் என்கின்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் உடம்பை விட்டுச் செல்லும் போது அனைத்தையும் விட்டு விட்டே செல்ல வேண்டும். ஆத்மாவின் விடுதலைக்கும் ஆத்மாவின் முக்திக்கும் சொத்துக்கள் தேவையற்றது. இந்நிலையில் சொத்துக்களை அனுபவித்துச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே இருக்க வேண்டும். பிற்காலத்தில் இதை விட்டுச் செல்ல வேண்டுமே என்று வருத்தமாக இருக்கக்கூடாது. உடமைகள் இருப்பது தவறில்லை. ஆனால் உடமைகள் இல்லாமல் வாழ முடியும் என்பதை மனதில் வைத்து ஆன்மீகப் பாதையில் சென்றால் எவ்விதத் தவறும் இல்லை. உதாரணமாக ஆன்மீகப் பாதையில் செல்வோர் தொலைபேசி உபயோகிப்பது தொலைக்காட்சி காண்பது தவறாகாது. இருப்பினும் அதனை அனுபவித்து விட்டு அது இல்லாமல் இருக்கும் போது அதனை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதே எமது அறிவுரை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

11-12-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறைவனின் அருளானது ஏன் அனைவரின் மீதும் விழவில்லை?

இறையருள் அனைவரின் மீதும் சமமாக விழுகிறது. இதை பலர் உணர்வதில்லை. வெளிச்சம் விழும் காலத்தில் நல்ல கண்ணாடி வழியாக சிறப்பாக வெளிச்சம் உண்டாகும். அழுக்காக உள்ள கண்ணாடியில் வெளிச்சம் சிறிது குறைவாக விழும். கறுப்பாக உள்ள கண்ணாடியில் வெளிச்சமே வராது. இவ்விதமே மனிதரின் நிலைமை ஆத்மா எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவிற்கே இறைவன் அருளை அவர்களால் உணர முடியும். இறைவனுக்குப் பேதங்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்தது என்கின்ற போது அனைவரும் அவரின் குழந்தைகள். இத்தகைய நிலையில் ஒருவருக்கு நலம் தருவதும் மற்றவருக்குத் துன்பம் தருவதும் இல்லை. பின் ஏன் சிலருக்கு கடினம் என்றால் அவரவர் கொண்டு வந்த கர்ம மூட்டைகளின் நிலைகளே ஆகும். இந்நிலையில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தியானத்தின் வழியாகவும் வழிபாட்டின் வழியாகவும் தயார் செய்து கொண்டால் அருளைப் பெறுவதை உணர்வதையும் உணராமல் இருப்பதையும் பெரும் அளவில் அறிந்து கொள்ள முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

13-11-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பொதுவாக அனைத்தும் கர்மவிதிப்படி நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியுமா?

உறுதியாக மாற்றிவிட முடியும். ஏன் என்றால் கர்ம விதிகள் இறைவனால் மாற்ற முடியாவிட்டால் இறைவனை விட கர்மவிதி பெரிதாகும் அல்லவா? இறைவனே பெரியவன். ஆகையால் கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியும். இத்தகைய நிலையில் சில விஷேச நாட்களில் உலக நன்மைக்காக இறைவன் கர்ம நிலைகளை மாற்றிவிட இயலும். மேலும் பொதுவாக அவரவர் தன் கர்ம விதிகளை தீர்த்தல் வேண்டும் என விதியும் உண்டு. இது மனதினால், உடலால், துயரத்தால், தவத்தால், வழிபாட்டால் எனப் பல வகையில் தீர்த்திட முடியும். நல் எண்ணம் படைத்தோர் இதனை தியானவழி பூஜை வழிகளில் தீர்த்திடுகின்றனர். இவ்விதம் இருந்த போதிலும் அவரவர் செய்த கர்மத்திற்கு ஏற்றார் போல் மன வேதனைகளும் உடல் வேதனைகளும் அவர்களைத் தொடரும். காரணம் அவரவர் தம் சுமைகளை பிறக்கும் பொழுது கொண்டு வருவதே. இது மட்டுமல்லாது அக்குறைகளை தீர்த்திட முயற்சிக்காமல் மேலும் சில கர்ம வினைகளை சேர்ப்பதே மனிதனின் நிலைக்குக் காரணம். தீவிரமான வழிபாடு தியான முறைகள் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதோடு எதிர்பார்ப்பற்ற நிலையில் வாழ்வதும் எளிதாக கர்ம நிலைகளை மாற்றி இறைவனின் பாதம் அடைய வழி வகுக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

17-10-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மிக பாதையில் தடைகள் பல வருகின்றதே இறைவனை நாடத் தடைகள் ஏன் வருகின்றது?

தடைகள் என்பது பொதுவாக அனைத்திலும் வரக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். தடை என்றால் அத்தடைகளை மீற வேண்டும் என்பதே பொருள். தடை ஒன்று இருந்தால் அதைச் சுற்றிச் செல்லலாம். அதன் மீது தாவிச் செல்லலாம் இல்லை மாற்று வழியாகச் செல்லலாம். தடைகளை நாம் தாண்டிச் செல்ல நம் ஆன்மிக வளர்ச்சி பெருமளவில் வளரும் என்பது இதற்குப் பொருள். தடைகள் இல்லையேல் ஆன்மிகப் பாதையில் சாதனை புரியும் வாய்ப்புக்கள் கிடைக்காது என்ற ஓர் நிலையும் உள்ளது. போராடிச் செல்வதே எப்பொழுதும் நலம். அவ்விதம் போராட்டம் நடத்தும் காலங்களில் நாம் நம்முடைய குறைகளையும் நிறைகளையும் தானாக அறிவோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் செல்வதும் உண்டு. இது மட்டும் இல்லாமல் தடைகளை வெல்ல பெரியோர்களை நாடுவோம். இவ்வழியில் பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதற்காகத்தான் தடைகளை நம் வாழ்க்கையில் பலவகைகளாக அனைவரும் காண்கிறோம். குறிப்பாக ஆன்மிகப் பாதையில் தடைகள் ஓர் தடையல்ல ஓர் பிரசாதமாக காணுதல் வேண்டும். ஏனெனில் நாம் அத்தடைகளைத் தாண்டி மேலே செல்லும் போது ஆண்டவன் ஆனந்தம் கொள்கிறான். ஆனந்தத்தின் பூரிப்பால் அவன் அருள் புரிகின்றான். அந்த அருளை நாமும் பெற மேலும் மேலும் மேன்மைகள் உண்டாகும் என்பதே பொருளாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

20-9-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் வியர்வை சிந்தி உழைப்பால் கிடைக்கும் பொருளை உணவாக எடுத்துக் கொண்டால் அனைத்து தீயவைகளும் நல்வழியில் செல்லும். மற்றவர்கள் உழைப்பில் வாழ எண்ணுபவன் பெரும் மடங்கு கர்மாக்களை ஏற்றுக் கொள்கிறான். இக்காலத்தில் மற்றவர்கள் உழைப்பில் வாழ்வது ஓர் சாதாரண நிலை ஆகி விட்டது. அலுவலகங்களில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு எந்த அளவிற்கு குறைவாக வேலை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு குறைவாக வேலை செய்கின்றனர். அது மட்டுமில்லாது வேகமாக வேலை செய்தால் அதிக சம்பளம் எப்படி பெறுவது என்று எண்ணுகின்றனர். பொதுவாக அவரவர் பணிகள் அவரவர்கள் செய்திட நலமாகும். இக்கால நிலையில் தன்னுடைய துணிகளைத் தானாகவே சுத்தம் செய்து தேய்த்து வைப்பது என்பது ஆகாத நிலையாக இருக்கிறது. இருப்பினும் உணவு சாப்பிட்ட பின்பு நாம் உண்ட பாத்திரத்தை நாமாகவே சுத்தம் செய்து வைக்கலாமே? இதில் தடை ஏதும் இல்லையே?

இவ்விதம் சிறு சிறு பணிகள் நாம் இயன்ற அளவிற்கு செய்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால் சர்வ நலமும் உண்டாகும். மேலும் நாம் உழைப்பால் தான் வளர முடியும் என்பதையும் இங்கு கூறுகிறோம். உழைப்பு இல்லையென்றால் வளர்ச்சி இல்லை என்பது பொது விதியாகின்றது. உழைக்காமல் இப்பொழுது வரை நன்றாகவே வாழ்ந்து வருகின்றேன் எனப் பலரும் கூறக்கூடும் இது சீராகாது. ஏனெனில் உழைப்பை உடல் உழைப்பு என்றும் மன உழைப்பு என்றும் பிரித்திட முடியும். மன உழைப்பின் காரணமாகப் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். பின்பு மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் சாப்பிடுவதும் இல்லையென்றால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் கோபத்தில் ஆடுவதையும் காண்கின்றோம். தாமதமாகத் தூங்காமல் உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கி அதிகாலை எழுந்து காரியங்கள் செய்தால் ஆரோக்கியம் தானாக உண்டாகும். அனைவரும் பிராணாயாமம் செய்து வர உடல் நோய்கள் நீங்கி அனைவருக்கும் நலம் என்று கூறுகிறோம். இவ்வார்த்தையின் பொருளில் இருந்து நீங்கள் அனைத்தும் உணரலாம். பிராணாயாமம் என்பது பிராணத்தை உள் சேகரிக்கும் முறை என்று அர்த்தம் ஆகின்றது. இப்பூத உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பே இந்தப் பிராணன்தான் என அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் பிராணத்துடன் பிராணன் உள் செல்வதையும் வெளி செல்வதையும் கூர்ந்து கவனித்துத் தியான முறையாக மாற்றிக் கொண்டால் விரைவில் நலன்கள் அனைத்தும் காணலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #29

23-8-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நாமஸ்மரணம் (இறைவனின் நாமங்களை நினைத்து உச்சரித்து தியானிப்பது) என்பது எக்காலத்திலும் செய்யக் கூடியதா?

நாமஸ்மரணனத்திற்கு எவ்வித கால ஒதுக்கீடும் இல்லை என்றும் சதா நாமமாகவும் சதா மந்திரமாகவும் (எப்பொழுதும்) கூறக்கூடியது. இது எங்கும் எந்த வேலை செய்யும் காலத்திலும் கூறக்கூடியது என்றும் இங்கு எடுத்துரைப்போம். இதற்கு எவ்வித விதி விலக்கும் இல்லை.

கேள்வி: நாம் ஆலயத்திற்கு இறைவனிடம் செல்லும் காலத்தில் நம்மை மனதாலும், உடம்பாலும், தூய்மையாக்கிக் கொண்டு செல்லுதல் வேண்டுமா? இது கட்டாயமா?

பொதுவாக இறை நாட்டம் செல்லும் போது ஆலயம் பூஜை அறை செல்லும் போது உடலை சுத்தப் படுத்துவதோடு மன நிலையையும் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்லுதல் வேண்டும் என்பது நலம் தருவதாகும். இருப்பினும் இறை பாதையில் செல்ல நாம் முதன்மையில் உடலை தூய்மையாக்கிச் செல்லுதல் வேண்டும் என்பது விதியில்லை. ஏனெனில் நாம் எவ்விதம் இருக்கின்றோமோ அந்நிலையில் சரணடைவதே முக்கியமாகும். இவ்விதம் தாயே அப்பனே என்று சரணடைந்து விட்டால் அவர்கள் நம்மை சுத்தப்படுத்தி அனுப்புவார்கள். ஓர் குழந்தையை தாய் சுத்தப் படுத்துவது கடமை என்கின்றபோது இறைவன் உலகத்திலுள்ள எல்லா தாயையும் விட மேன்மையானவன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

27-7-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: முற்பிறவியில் சென்றது இப்பிறவியில் பாதிப்பது ஏன்? முற்பிறவியில் சென்றதை மறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அவ்வாறு மறந்தால் முற்பிறவியில் நாம் செய்த கர்மா குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது உண்மையா?

அன்பரே நன்றாக சிந்திக்க வேண்டும். அன்று விதைத்தது இன்று பயிராக நிற்கின்றது. விதைத்தது மறந்து நின்றால் பயிரானது இறையருள் இருந்தால் வளர்ந்து நிற்கும் இறையருள் இல்லையேல் காய்ந்து போகும். சென்ற பிறவியே இப்பிறவியையும் வரும் பிறவியையும் முடிவு செய்யும். வினையைத் தாங்கும் சக்தி நம்முடன் இருத்தல் வேண்டும். அந்த வினையைத் தாங்கும் சக்தியைப் பெற இறைவன் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். இப்பிறவியில் முன்பிறவியை நாம் மறந்து விடுகின்றோம். இப்போது நடப்பது முற்பிறவியின் வினையாலே என உணர்ந்தால் இறைவன் அருளால் அனைத்தும் சமமாகும். இறப்பதும் பிறப்பதும் இறைவன் விதியே. கர்மவிதியால் அவ்விதிப்படி நம் வாழ்வு முறை அமைகிறது. கர்மத்தை இறைவன் மாற்ற முடியாது என்பது பொது விதி. இருப்பினும் இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றால் இறைவன் அவ்வாறு நினைத்தால் உங்கள் விதியை மாற்ற முடியும். இந்த உணர்வோடு இறைவன் திருவடியை நாடுங்கள் இந்த உணர்வோடு சரணடையுங்கள். இந்த உணர்வோடு திருவடி பணிந்திட நல்வழி நல்மார்க்கம் நல்மாற்றம் உண்டு.