பாடல் #699

பாடல் #699: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயுவின் முடிவகை யாமே.

விளக்கம்:

தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன் கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தை சொன்னால் அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலே எழும்பும் வாயுவானது உயிர் சக்தியாகிய குண்டலினியை எழுப்பி மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக அவற்றின் ஐம்ப்தத்தோரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி) ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது. உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே ஆகும்.

பாடல் #700

பாடல் #700: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பது
ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

விளக்கம்:

ஆராய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு முடியாத தலைவியாகிய ஆதிசக்தியுடனும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத குண்டலினி சக்தியுடனும் வாயு ஒன்றாகக் கலக்கும் அளவு எவ்வளவு என்று சொன்னால் உயிர்கள் தமக்குள் இழுக்கப்படும் மூச்சுக்காற்றில் 540 அளவுகளில் 539 அளவு உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகி மீதியிருப்பது ஒரு அளவே ஆகும். அந்த ஒரு அளவு வாயு மட்டும் உடலின் உள்ளிருந்து மேலே சென்று அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கின்றது.

540 வாயு அளவு விளக்கம்: ஆரோக்யமான ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான். இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதை 40 கூறுகளாகப் பிரித்தால் மொத்தம் 21,600/40 = 540 பங்குகள் வரும். இந்த 540 பங்கு மூச்சுக்காற்றில் 539 பங்கு மூச்சுக்காற்று உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகிறது. ஒரு பங்கு மூச்சுக்காற்று சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைசக்தியுடன் கலக்கிறது.

பாடல் #701

பாடல் #701: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

விளக்கம்:

பாடல் 700 ல் உள்ளபடி சகஸ்ர தளத்தில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய இறைவனிடத்தில் சென்று சேரும் ஒரு பங்கு காற்றின் அளவு உயிர்களின் உடலில் இருக்கும் இருநூற்று முப்பத்து மூன்று நாடிகளில் பரவிச்சென்று சகஸ்ர தளத்திலுள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரை மலரச் செய்து சங்கமமாகி விடுகின்றது. சங்கமமானதும் நமசிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாய் சகஸ்ர தளத்தை இயங்குகிறது.

கருத்து: சிவசக்தியாய் இருக்கும் சகஸ்ரதளத்தில் கலக்கும் ஒரு பங்கு காற்று நமசிவாய என்னும் மந்திரமாய் செயல்பட்டு தவத்தால் அடையக்கூடிய அட்டமா சித்திகளை இயக்குகிறது.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

25-4-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஞானிகள் எவ்வாறு இருப்பார்கள்?

பற்று இல்லாத நிலையுடன் பேரன்பு கூடியும் எதனிடமும் பற்று இல்லாத போதும் தன்னுடைய அன்பானது உலகிற்குக் கிடைக்கட்டும் என்கின்ற நிலையுடனும் விசேஷ ஆடைகள் இல்லாமல் விசேஷ அறிகுறிகள் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலையுடனும் இருப்பார்கள். ஆசைகள் வெறுப்புகள் விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி ஒழித்து விட்டு இறைவன் ஒருவனே தம்முடைய சொத்து இறைவன் மட்டுமே தம்முடைய ஆனந்தம் இறைவன் ஒருவனே தமக்கு அனைத்தும் என்கின்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையை நீங்கள் எப்படி அடைய முடியும் என்கின்ற கேள்விக்கு விடை எளிதானது. அவர்கள் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்நிலையில் சிறிது சிறிதாக நாம் விரும்பும் உணவிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நம்முடைய ஆசைகள் வெறுப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை நீக்கினால் அந்த உணவிற்கும், பழக்கவழக்கத்திற்கும் நாம் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வாறு விடுபட்டால் மற்ற அனைத்தும் எளிதாக விடுபட்டுச் சென்று விடும். மேலும் துறவு சென்றவன் சிவனே என அமர்வான். அவன் தன்னுடைய அடுத்தத் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஏனெனில் அனைத்தும் இறைவன் அளிப்பான் என்கின்ற பூரண நம்பிக்கை விசுவாசம் சரணாகதி ஆகிய அனைத்தும் அவனுக்கு உண்டு. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் முழுமையாகச் சரணடைந்து விட்டோம் என்றால் நமக்கு வேண்டியது அனைத்தும் நாம் இருக்கும் இடத்தைத் தேடி வரும் என்பது அதன் தத்துவம் ஆகின்றது. அவ்விதம் நாம் இருக்கும் இடம் தேடி வருமா? என்று சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஞானியின் நிலையை அடைவது கடினமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

29-3-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகப் பாதையில் இறைவன் திருவடி அடைய நம்முள் இருக்கும் இறைவனின் குரல் எவ்விதம் ஓர் வழிகாட்டியாக உள்ளது?

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சிந்தனை அதாவது நமது அறிவை உபயோகித்துச் சிந்தித்து அப்பாதையில் செல்ல ஓர் அளவிற்கே இயலும். நமது அறிவினைக் கொண்டு சிந்தித்துச் செல்வது நல்லது தான். ஆனால் அது ஓர் அளவிற்குத்தான் பயன்படும். அதற்கு மேலும் செல்ல வேண்டுமானால் நமக்குள் தோன்றக்கூடிய யுக்தி (Intuition) என்பது தான் கொண்டு போக முடியும். அதாவது யுத்தி என்பது என்னவென்றால் நமக்கு உள்ளே வாழும் தெய்வத்தின் வழிகாட்டுதலே ஆகும். அந்தத் தெய்வத்தின் குரலினைக் கேட்டு அவ்வழியாக இறைவனை அடைய முடியும். அந்தத் தெய்வம் நமக்குள் எப்படிக் குரல் கொடுக்கக்கூடும் என்றால் நாம் இறைவன் மீது வைக்கும் உண்மையான முழுமையான அன்பினாலே ஆகும். ஆகவே இறைவனை அடைய நம் அறிவாற்றலால் ஓரளவிற்கு முடியும் என்றால் நமக்குள் இருக்கும் இறைவனின் வழிகாட்டுதலால் முழுமையாக அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

01-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது துயரம் எது என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும். ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி. சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும். அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாடல் #702

பாடல் #702: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

விளக்கம்:

பாடல் 700 ல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும். அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தை சொன்னால் எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகள் வழியாக நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது.

கருத்து: நான்கு இதழ்களாக இருக்கின்ற மூலாதார சக்கரத்தில் இருந்து எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளின் வழியாக ஓர் பங்கு காற்று மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் கலக்கிறது.

குறிப்பு: பாடல் #700ல் உள்ளபடி ஓர் பங்கு மூச்சுக்காற்று பாடல் #701ல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை சொன்ன திருமூலர் இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை கூறுகிறார்.

பாடல் #703

பாடல் #703: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

விளக்கம்:

உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருக்கின்றன. இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்கு சென்று அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின் உருவாகின்ற அமிர்தம் அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது. இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும் போது மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்து இருக்கின்றது.

கருத்து: அமிர்தத்தைப் பருகி வாழ்பவர்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படுவதில்லை. அவர்கள் அமிர்தத்தை மட்டுமே பருகிக்கொண்டு ஒன்பது துவாரங்களின் வழியாக வெளிக்காற்றோடு இணைந்திருக்கின்றார்கள்.

பாடல் #704

பாடல் #704: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

விளக்கம்:

சந்திரகலையாகிய இடகலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சூரியகலையாகிய பிங்கலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சுழுமுனை நாடி வழியே மேலே சென்று சிவபெருமான் இருக்கும் சகஸ்ரதளத்தில் இணைவதை புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் பார்த்து அதிலேயே லயித்து தன்னுடல் மேலும் இந்த உலகத்தின் மேலும் உள்ள பற்றுக்களை அறுத்து பேரொளியாகிய இறைவனையே நினைத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள் ஆவார்கள்.

கருத்து: தனக்குள்ளே இறைவனை தரிசித்து இறை நினைப்போடு பற்றுக்களை அறுத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள்.

பாடல் #705

பாடல் #705: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல் கால்வேகம் நுந்தலே.

விளக்கம்:

உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகியோரை விட்டு நீங்கி இருப்பதும் பணிவை தருகின்ற உண்மையான கல்வியால் வருகின்ற ஞானத்தை அதிகமாகக் கொண்டிருப்பதும் எதையும் முணுமுணுக்காமல் உண்மையான மெளனத்தோடு அடங்கிக் கிடக்கும் சித்தர்கள் எண்ணத்தால் போதித்தவற்றை தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருப்பதும், உலக விஷயங்களில் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட மனதைக் கொண்டு எப்போதும் மூச்சுக்காற்றை தமக்குள்ளேயே வேகமாக ஏற்றி இறக்கி தியானத்தில் இருப்பதும் சித்தர்களின் செயல்களாகும்.

கருத்து: உலக விஷயங்களில் எதிலும் தலையிடாமல் எதனாலும் பாதிக்காத மனதுடன் குரு போதித்ததை தமக்குள்ளேயே உணர்ந்து மெளனமாய் இருப்பதும் தியானம் செய்து மூச்சுக்காற்றை கவனித்துக்கொண்டு இருப்பவர்களே சித்தர்கள்.