பாடல் #651

பாடல் #651: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வல
ருந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.

விளக்கம்:

வானம் முதல் பூமி வரையுள்ள அனைத்திலும் சிவனையே கண்டு சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்பவர்களுக்கு 360 நாள்களில் தொப்புள் குழிக்கு அருகில் இருக்கும் மணிப்பூரக சக்கரத்தில் ஒளி எழும்பி மேலெழுந்து செல்லும்.

கருத்து: பார்ப்பவைகள் அனைத்திலும் சிவனையே கண்டு சிந்திப்பவர்களுக்கு 360 நாட்களில் மணிப்பூரகச் சக்கரத்திலிருந்து ஒளி எழும்பும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

19-6-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனித வாழ்க்கையின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

இதற்கான விடை மிகவும் எளியது. ஆனால் அடையும் முயற்சிகள் மிகப் பெரியவை ஆகும். ஒவ்வொருவரின் பிறவியும் வாழ்கையில் தமக்குள் உள்ளிருக்கும் தெய்வ சக்தியை உணர்வது. நம் அனைவருக்குள்ளும் இறைவன் குடிகொண்டு இருக்கின்றான் என்பதை யாரும் உணர்வதில்லை. தெய்வீக சக்திக்கு மனிதன் ஒரு வீடாக இருக்கின்றான். அந்த வீட்டில் இறைவன் தங்கி உள்ளான். ஆனால் நாம் அதனை உணராமல் வெளியே தேடி அலைகின்றோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் நமது இந்திரியங்களும் ஐம்புலன்களும் ஆகும். இவை இரண்டும் நம்மைத் திசை திருப்பி மாயையின் பிடியில் தள்ளுவதால் மீண்டும் நம்மால் வெளியே வர முடியவில்லை. அனைவரும் தியானத்தின் மூலம் நமக்கு உள்ளே சென்று பார்த்தல் வேண்டும். தினந்தோறும் குறைந்த அளவில் ஒரு அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்பவர்களும் மந்திரஜபம் தொடர்சியாக செய்து வருபவர்களும் உறுதியாக தமக்குள் உள்ள இறைவனை உணர்வது மட்டும் இல்லாமல் உயர்ந்த நிலையும் அடையவார்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும். நான் என்கின்றது அகங்காரம் ஆகும். நான் என்பது சரியானது இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடைவதற்காகவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் கூறுகின்றனர். இவ்விதம் யாம் என்பதை வார்த்தைகளில் மட்டும் சேர்த்துக் கூறினால் போதாது. உண்மையாகவே இறைவன் நம்முடன் இருந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதைப் பரிபூரணமாக நம்புதல் வேண்டும். என் செயலால் இனி ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நடப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் காண இயலும். இக்காலத்தின் கலியுகத் தன்மையில் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காதது அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக்கொண்டு எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக.

பாடல் #652

பாடல் #652: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

விளக்கம்:

ஐம்புலன்களாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகியவற்றில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணர்ந்து முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்து இருப்பவர்கள் சிவ முக்தர்கள் ஆவார்கள். இவர்கள் ஐந்து புலன்களின் உணர்விலும் தொடர்பில்லாதவர்கள் ஆகையால் தூய நிலையை அடைந்து அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடுவார்கள்.

கருத்து: சிவயோகியர் உடம்பை மறந்து மேல் நிலையில் இன்புற்று இருப்பார்கள்.

பாடல் #653

பாடல் #653: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.

விளக்கம்:

பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகிய ஒன்பது வாயுக்களும், இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு ஆகிய ஒன்பது நாடிகளில் (நரம்புகளில்) அதிகமாகாமலும் குறையாமலும் சரிசமமாக இருந்தால் பத்தாவது நாடியான சுழுமுனை வழியே செல்லும் பத்தாவது வாயுவான தனஞ்செயன் என்னும் வாயு உடலோடும் உயிரோடும் ஒன்றுபட்டு பிரியாமல் இருக்கும்.

கருத்து: உடலிலுள்ள ஒன்பது வாயுக்களும் சமமாக இருந்தால் உடலை விட்டு உயிர் பிரியாது இருக்கும்.

பாடல் #654

பாடல் #654: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்
இருக்கு முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

விளக்கம்:

தனஞ்செயன் என்னும் வாயு உடம்பில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடு கலந்து உடலில் உள்ள இருநூற்று இருபத்து நான்கு நரம்புகள் வழியே சென்று கொண்டு இருக்கும். அவ்வாறு செல்லாமல் இருந்தால் உடம்பு வீங்கி வெடித்துவிடும்.

கருத்து: தனஞ்செயன் என்னும் வாயு உடலில் உள்ளவரை உடல் அழியாது.

பாடல் #655

பாடல் #655: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

விளக்கம்:

வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குஷ்டம், உறுப்புகள் வீக்கம், பலவகை சோகைகள், வாதம் (நரம்பு தளர்ச்சி) கூன், முடம் (ஊனம்) கண் நோய்கள் ஆகிய வியாதிகள் உடலிலுள்ள தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.

கருத்து: உடலுக்கு வரும் வியாதிகளில் பல தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் வருகின்றன.

பாடல் #656

பாடல் #656: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

விளக்கம்:

கண்ணில் வியாதிகளைக் கொடுக்கும் தனஞ்செயன் கண்ணில் பூ விழுதல் (கருவிழியில் வெள்ளை நிறம் தோன்றி கண் பார்வை போதல்) காசம் (கண்ணில் சீழ் வழிதல்) ஆகியவற்றிற்கு காரணம் இல்லை. கண்ணிலிருந்து ஒளியை மூளைக்குக் கொண்டு செல்லும் கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் இவ்விரு வியாதிகள் வருகின்றன. இந்த வாயுவின் குறைபாட்டால் பார்வையில் ஒளி இல்லாமலும் ஆகும்.

கருத்து: கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் கண்ணில் பூ விழுதல் காசம் ஆகிய இரு நோய்கள் உண்டாகும்.

பாடல் #657

பாடல் #657: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து தலை உச்சிக்கு செல்லும் குண்டலினி சக்தியின் ஜோதியை அகக் கண்ணால் கண்டு அந்த ஜோதியின் ஒளிர்விடும் ஓசையை இதயத்துடிப்பால் உணர்ந்து இருப்பவர்களை தேவர்களுள் முதல்வர்களான உருத்ரன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் இடைவிடாது உள்ளுக்குள் உணர்ந்திருப்பார்கள்.

கருத்து: குண்டலியின் ஜோதியையும் அதன் ஓசையும் தமக்குள் உணர்ந்தவர்களை முப்பெரும் தேவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.

பாடல் #658

பாடல் #658: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.

விளக்கம்:

ஒன்பது துவாரங்களைக் (இரண்டு கண், இரண்டு காது, வாய், மூக்கு, மலத் துவாரம், சிறுநீர்த் துவாரம்) கொண்ட மனித உடலில் இருக்கும் ஒன்பது வித நாடிகளை (இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு) புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி தவம் செய்யக்கூடியவர்களின் உடலுக்கு என்றும் அழிவில்லை.

கருத்து: ஒன்பது நாடிகளையும் ஒருமுகப்படுத்தி தவம் செய்பவர்களுக்கு உடல் என்றும் அழியாமல் இருக்கும்.