பாடல் #1820

பாடல் #1820: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின்மல னாக்கி
யறமே புரிந்தெனக் காரமு தீய்ந்த
திறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புறமெ திரிநதெனைப பொறகழல சூடடி
நிறமெ புகுநதெனை நினமல னாககி
யறமெ புரிநதெனக காரமு தீயநத
திறமெ யதெணணித திகைததிருந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின் மலன் ஆக்கி
அறமே புரிந்து எனக்கு ஆர் அமுது ஈய்ந்த
திறமே அது எண்ணி திகைத்து இருந்தேனே.

பதப்பொருள்:

புறமே (இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று) திரிந்தேனை (அலைந்து திரிந்த எமது தலை மேல்) பொன் (தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற) கழல் (திருவடிகளை) சூட்டி (அணிவித்து)
நிறமே (இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது) புகுந்தேனை (உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி) நின் (எந்தவொரு) மலன் (மலங்களும் இல்லாதவனாக) ஆக்கி (ஆக்கிவிட்டு)
அறமே (பேரருளாகிய தர்மத்தின்) புரிந்து (வழியாக வந்து) எனக்கு (எமக்கு) ஆர் (எப்போதும் தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஈய்ந்த (கொடுத்து அருளிய)
திறமே (பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணை) அது (அதை) எண்ணி (நினைத்துப் பார்த்து) திகைத்து (அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே) இருந்தேனே (ஆழ்ந்து இருந்தேன்).

விளக்கம்:

இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று அலைந்து திரிந்த யாம் பாடல் #1819 இல் உள்ளபடி எமக்குள் இருக்கின்ற ஆன்மாவை உணர்ந்து கொண்ட பிறகு எமது தலை மேல் தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற திருவடிகளை அணிவித்து, இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி எந்தவொரு மலங்களும் இல்லாதவனாக ஆக்கிவிட்டு, பேரருளாகிய தர்மத்தின் வழியாக வந்து எமக்கு எப்போதும் தெகிட்டாத அமிழ்தத்தை கொடுத்து அருளிய பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணையை நினைத்துப் பார்த்து அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே ஆழ்ந்து இருந்தேன்.

பாடல் #1821

பாடல் #1821: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

அருளது வென்ற வகலிட மொன்றும்
பொருளது வென்ற புகலிட மொன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளது வெனற வகலிட மொனறும
பொருளது வெனற புகலிட மொனறும
மருளது நீஙக மனமபுகுந தானைத
தெருளுறும பினனைச சிவகதி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருள் உறும் பின்னை சிவ கதி ஆமே.

பதப்பொருள்:

அருள் (இறையருள்) அது (அது) என்ற (என்று அழைக்கப்படும் பரம்பொருள்) அகல் (அண்ட சராசரங்களிலும் அதை தாண்டியும் இருக்கின்ற) இடம் (பரவெளியில்) ஒன்றும் (பொருந்தி இருக்கும்)
பொருள் (உயிர்கள்) அது (அது) என்ற (என்று அழைக்கப்படும் பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள்) புகல் (தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த) இடம் (இந்த உலகத்தை) ஒன்றும் (பொருந்தி இருக்கும்)
மருள் (உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம்) அது (அது) நீங்க (நீங்கும் படி செய்து) மனம் (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களின் உள்ளத்திற்குள்) புகுந்தானை (புகுந்தான்)
தெருள் (அப்படி தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனை தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு) உறும் (அவனையே உறுதியாக பற்றிக் கொண்டு இருந்தால்) பின்னை (பிறகு வரும் காலத்தில்) சிவ (இறைவனிடம்) கதி (சென்று அடையும்) ஆமே (நிலை அதுவே ஆகும்).

விளக்கம்:

இறையருள் என்று அழைக்கப்படும் பரம்பொருள் அண்ட சராசரங்களிலும் அதை தாண்டியும் இருக்கின்ற பரவெளியில் பொருந்தி இருக்கும். உயிர்கள் என்று அழைக்கப்படும் பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள் தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த இந்த உலகத்தை பொருந்தி இருக்கும். தாம் பொருந்தி இருக்கின்ற இந்த உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம் நீங்கும் படி செய்து அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களின் உள்ளத்திற்குள் புகுந்தான். அப்படி தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனை தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு அவனையே உறுதியாக பற்றிக் கொண்டு இருந்தால் பிறகு வரும் காலத்தில் இறைவனிடம் சென்று அடையும் நிலை அதுவே ஆகும்.

பாடல் #1822

பாடல் #1822: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

கூறுமின் னீர்முன் பிறந்தங் கிறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்பொரு ணீங்கிடும்
பாரணி யும்முடல் வீழவிட் டாருயிர்
தேரணி வோமிது செப்பவல் லீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமின னீரமுன பிறநதங கிறநதமை
வெறொரு தெயவததின மெயபொரு ணீஙகிடும
பாரணி யுமமுடல வீழவிட டாருயிர
தெரணி வொமிது செபபவல லீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் நீர் முன் பிறந்து அங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய் பொருள் நீங்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே.

பதப்பொருள்:

கூறுமின் (உங்களால் முடிந்தால் விளக்கி சொல்லுங்கள்) நீர் (நீங்கள்) முன் (முன் ஜென்மத்தில்) பிறந்து (எங்கு பிறந்து) அங்கு (அங்கேயே) இறந்தமை (இறந்த விதத்தை)
வேறு (உள்ளிருக்கும் சிவத்தை தவிர வெளியில் வேறு) ஒரு (ஒரு) தெய்வத்தின் (தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது) மெய் (உண்மை போல் தெரியும்) பொருள் (அந்த பொய்யான பொருள்) நீங்கிடும் (உடல் அழியும் போது நீங்கிப் போய் விடும்)
பார் (உலகத்தில் பிறக்கும் போது) அணியும் (நீங்கள் அணிந்து வந்த) உடல் (உடல் எனும் சட்டையை) வீழ (இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும் படி) விட்டு (விட்டு விட்டு) ஆர் (அந்த உடலுக்குள் இருந்த அருமையான) உயிர் (உயிர் எனும்)
தேர் (தேராக செயல்புரிகின்ற சிவத்தை) அணிவோம் (அணிந்து கொள்ளுவோம்) இது (இதை) செப்ப (மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல) வல்லீரே (முடிந்தவர்கள் சொல்லுங்கள்).

விளக்கம்:

உலகத்தில் கற்றதே உண்மை என்று நீங்கள் நம்புவது உண்மை என்றால் இதற்கு முன் ஜென்மத்தில் நீங்கள் எங்கு பிறந்து அங்கு எப்படி இறந்தீர்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அது போலவே உள்ளிருக்கும் சிவத்தை தவிர வெளியில் வேறு ஒரு தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது உண்மை போல் தெரியும். அப்படி உண்மை போல் தெரிகின்ற பொருளானது உங்களின் உடல் அழியும் போது உங்களை விட்டு நீங்கிப் போய் விடும். ஆகவே உலகத்தில் பிறக்கும் போது நீங்கள் அணிந்து வந்த உடல் எனும் சட்டையை இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும் படி விட்டு விட்டு அந்த உடலுக்குள் இருந்த அருமையான உயிர் எனும் தேராக செயல்புரிகின்ற சிவத்தை அணிந்து கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு முக்கியமான இந்த உண்மையை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல முடிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடல் #1801

பாடல் #1801: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளா லமுதப் பெருங்கட லாட்டி
யருளா லடிபுனைந் தாரமுந் தந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளா லென்னந்தி யகம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளா லமுதப பெருஙகட லாடடி
யருளா லடிபுனைந தாரமுந தநதிட
டருளான வானநதத தாரமு தூடடி
யருளா லெனனநதி யகமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் ஆல் அமுத பெரும் கடல் ஆட்டி
அருள் ஆல் அடி புனைந்து ஆரமும் தந்து இட்டு
அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.

பதப்பொருள்:

அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அமுத (அமுதத்தால் நிறைந்த) பெரும் (மிகப் பெரிய) கடல் (கடலில்) ஆட்டி (எம்மை மூழ்க வைத்து நீராட்டி)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) அடி (அவனுடைய திருவடியை) புனைந்து (எமது தலைமேல் இருக்கும் படி செய்து) ஆரமும் (அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும்) தந்து (எமக்கு கொடுத்து) இட்டு (யாம் அணியம் படி செய்து)
அருள் (அவனது திருவருள்) ஆன (ஆகிய) ஆனந்தத்து (பேரானந்தத்தினால்) ஆர் (நிறைந்து இருக்கும்) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (எமக்கு ஊட்டிக் கொடுத்து)
அருள் (அவனது திருவருள்) ஆல் (மூலம்) என் (எமது) நந்தி (குருநாதனாகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்து கொண்டானே).

விளக்கம்:

இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் அமுதத்தால் நிறைந்த மிகப் பெரிய கடலில் எம்மை மூழ்க வைத்து நீராட்டி, அவனது திருவடிகளை எமது தலை மேல் வைத்து, அவன் கழுத்தில் அணிகின்ற மாலையையும் எம்மை அணிய வைத்து, பேரானந்தமாகிய அமிழ்தத்தை எமக்கு ஊட்டி, எமது குருநாதனாகிய இறைவனே எமக்குள் புகுந்து கொண்டான்.

பாடல் #1802

பாடல் #1802: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பாசத்தி லிட்ட தருள்தந்த பாசத்தில்
நேசத்தை விட்ட தருள்தந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருள்தந்த கூட்டத்தில்
நேசமற்றுந் தோன்றா நிலையரு ளாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசததி லிடட தருளதநத பாசததில
நெசததை விடட தருளதநத நெசததிற
கூசறற முததி யருளதநத கூடடததில
நெசமறறுந தொனறா நிலையரு ளாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசத்தில் இட்டது அருள் தந்த பாசத்தில்
நேசத்தை விட்டது அருள் தந்த நேசத்தில்
கூசு அற்ற முத்தி அருள் தந்த கூட்டத்தில்
நேசம் அற்றும் தோன்றா நிலை அருள் ஆமே.

பதப்பொருள்:

பாசத்தில் (குடும்ப பாசத்தில்) இட்டது (இருக்கும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) பாசத்தில் (பாசத்தினால் ஆகும்)
நேசத்தை (அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை) விட்டது (விடும் படி செய்தது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) நேசத்தில் (பேரன்பினால் ஆகும்)
கூசு (அந்த பேரன்பில் நிலை குறைவு) அற்ற (இல்லாத) முத்தி (முக்தியானது) அருள் (இறையருள்) தந்த (கொடுத்த) கூட்டத்தில் (திருவருள் சேர்க்கையினால் ஆகும்)
நேசம் (அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும்) அற்றும் (இல்லாத) தோன்றா (எண்ணங்கள் தோன்றாத) நிலை (நிலையே) அருள் (பேரருள்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1801 இல் உள்ளபடி இறைவன் எம்மீது கொண்ட மாபெரும் கருணையாகிய திருவருளால் குடும்ப பாசத்தில் இருக்கும் படி எம்மை வைத்து, அந்த பாசத்தை அனுபவித்து முடித்த பின் ஆசையை விடும் படி செய்து, உள்ளத்தில் ஊற்றெடுத்து வரும் பேரன்பில் குறைவு இல்லாத முக்தி நிலையை கொடுத்து, அவனது திருவருளை எம்மோடு சேர்த்துக் கொடுத்தான். அந்த திருவருள் சேர்க்கையினால் பாசமும் ஆசையும் இல்லாத, எண்ணங்கள் தோன்றாத, அமைதியான நிலையே பேரருள் ஆகும்.

பாடல் #1803

பாடல் #1803: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மருவா வருள்தந்த மாநந்தி யார்க்கு
மறவாழி யந்தண னாதிப் பராபர
னுறவாகி வந்தெனுளம் புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறவா நெறிதநத பெரரு ளாளன
மருவா வருளதநத மாநநதி யாரககு
மறவாழி யநதண னாதிப பராபர
னுறவாகி வநதெனுளம புகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறவா நெறி தந்த பேர் அருளாளன்
மருவா அருள் தந்த மா நந்தி யார்க்கும்
அற வாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே.

பதப்பொருள்:

பிறவா (இனி எப்போதும் பிறக்காத) நெறி (வழி முறையை) தந்த (எமக்கு கொடுத்த) பேர் (மிகப் பெரிய) அருளாளன் (அருளாளன்)
மருவா (என்றும் மாறாத) அருள் (அருளை) தந்த (எமக்கு கொடுத்த) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) யார்க்கும் (எவருக்கும்)
அற (தர்மத்தின்) வாழி (வழியில் வாழுகின்ற) அந்தணன் (வழி முறைகளை கற்றுக் கொடுக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்றவன்) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பராபரன் (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய பரம் பொருளானவன்)
உறவு (எம்மோடு உறவு) ஆகி (கொண்டு) வந்து (வந்து) என் (எமது) உளம் (உள்ளத்திற்குள்) புகுந்தானே (புகுந்தானே).

விளக்கம்:

இனி எப்போதும் பிறக்காத வழிமுறையை எமக்கு கொடுத்தவன் பேரருளாளன். என்றும் மாறாத அருளை எமக்கு கொடுத்தவன் மாபெரும் குருநாதனாகிய இறைவன். வேதங்கள் சொல்லுகின்ற தர்மங்களை கற்றுக்கொடுத்து அதன் வழியில் வாழுகின்ற அனைவரும் சென்று அடைகின்ற அந்த வேதத்தின் எல்லையாக இருக்கின்றவன். ஆதியிலிருந்தே இருக்கின்ற அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய அந்த பரம்பொருளே எம்மோடு உறவு கொண்டாடி எமது உள்ளத்திற்குள் புகுந்து கொண்டான்.

பாடல் #1806

பாடல் #1806: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருளே சகமு மாய பவுதிக
மருளே சராசர மாய மலமே
யிருளே வெளியே யெனும்மெங்கு மீச
னருளே சகளத் தவனன்றி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளெ சகமு மாய பவுதிக
மருளெ சராசர மாய மலமெ
யிருளெ வெளியெ யெனுமெஙகு மீச
னருளெ சகளத தவனனறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளே சகமும் ஆய பௌதிகம்
அருளே சரா சரம் ஆய மலமே
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்து அவன் அன்றி ஆமே.

பதப்பொருள்:

அருளே (இறையருளே) சகமும் (உலகமும்) ஆய (அந்த உலகமாக இருக்கின்ற) பௌதிகம் (இயற்கையும்)
அருளே (இறையருளே) சரா (உலகத்தில் உள்ள அசையாத பொருள்களும்) சரம் (உலகத்தில் இருக்கின்ற அசைகின்ற பொருள்களும்) ஆய (அதுவே) மலமே (மும் மலங்களாகவும் இருக்கின்றது)
இருளே (மாயையாகிய இருள்) வெளியே (வெளிச்சமாகிய ஞானம்) எனும் (என்று அழைக்கப்படும்) எங்கும் (எங்கும் இருப்பது) ஈசன் (இறைவனின்)
அருளே (திருவருளே) சகளத்து (அண்டமும் அதிலுள்ள அனைத்து பொருள்களின் வடிவமாக இருக்கின்றது) அவன் (இறைவன்) அன்றி (இல்லாமல்) ஆமே (இவை எதுவுமே இல்லையாம்).

விளக்கம்:

பாடல் #1805 இல் உள்ளபடி ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற இறையருளே உலகமாகவும், அதிலுள்ள உள்ள இயற்கையாகவும், அதிலுள்ள அசையும் அசையாத பொருள்களாகவும், அதிலுள்ள உயிர்களை கட்டி இருக்கின்ற மூன்று விதமான (ஆணவம், கன்மம், மாயை) மலங்களாகவும், அந்த மலத்தினால் உயிர்களுக்கு இருக்கின்ற அறியாமையாகிய இருளாகவும், இறையருள் பெற்ற உயிர்களுக்கு உள்ளிருந்து இறைவன் உணர்த்துகின்ற ஞானமாகிய வெளிச்சமாகவும், அண்டங்களும் அதிலுள்ள அனைத்து பொருட்களின் வடிவமாகவும் இருக்கின்றது. இப்படி இறையருளாக இருக்கின்ற இறைவன் இல்லாமல் இவை எதுவுமே இல்லையாம்.

பாடல் #1804

பாடல் #1804: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அகம்புகுந் தானடி யேற்கரு ளாலே
யகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க்
ககம்புகுந் தானந்த மாக்கிச் சிவமா
யகம்புகுந் தானந்தி யானந்தி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகமபுகுந தானடி யெறகரு ளாலெ
யகமபுகுந துநதெரி யானரு ளிலலொரக
ககமபுகுந தானநத மாககிச சிவமா
யகமபுகுந தானநதி யானநதி யாமே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவம் ஆய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே.

பதப்பொருள்:

அகம் (எமக்குள்) புகுந்தான் (புகுந்தான் இறைவன்) அடியேற்கு (அடியேனின் மேல் வைத்த) அருளாலே (அருளாலே)
அகம் (எமக்குள்) புகுந்தும் (புகுந்து இருந்தாலும்) தெரியான் (அவன் தெரிவது இல்லை) அருள் (அவனது அருள்) இல்லோர்க்கு (இல்லாதவர்களுக்கு)
அகம் (எமக்குள்) புகுந்து (புகுந்து) ஆனந்தம் (எம்மை பேரின்பமாக) ஆக்கி (மாற்றி) சிவம் (சிவமாகவே) ஆய் (ஆக்கி விட்டான்)
அகம் (எமக்குள்) புகுந்தான் (புகுந்தவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) ஆனந்தி (அவனே பேரின்பத்தின் வடிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1803 இல் உள்ளபடி எமக்குள் புகுந்த இறைவனின் திருவருளை யாம் அவனருளால் காப்பாற்றி அவன் எமக்குள் புகுந்து கொண்டதை கண்டுகொண்டோம். அவ்வாறு இறைவன் தமக்குள் புகுந்து கொண்ட திருவருளை காப்பாற்றிக் கொள்ளும் அருள் இல்லாதவர்களுக்கு அவன் தெரிவதில்லை. எமக்குள் புகுந்த அந்த இறைவன் எம்மை பேரின்பமாக மாற்றி சிவமாகவே ஆக்கி விட்டு எமக்குள் குருநாதனாக வீற்றிருந்து பேரின்பத்தின் வடிவமாக அருளுகின்றான்.

பாடல் #1805

பாடல் #1805: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

ஆயு மறிவோ டறியாத மாமாயை
யாய கரணம் படைக்கு மைம்பூதமு
மாய பலவிந் திரிய மவற்றுட
னாய வருடைந்து மாயருட் செய்கையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயு மறிவொ டறியாத மாமாயை
யாய கரணம படைககு மைமபூதமு
மாய பலவிந திரிய மவறறுட
னாய வருடைநது மாயருட செயகையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம் பூதமும்
ஆய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்து மா அருள் செய்கையே.

பதப்பொருள்:

ஆயும் (ஆராய்ந்து அறிகின்ற) அறிவோடு (அறிவின் துணையோடு) அறியாத (அறிந்து கொள்ள முடியாத) மா (மாபெரும்) மாயை (மாயை)
ஆய (ஆக இருப்பது) கரணம் (அந்தக் கரணங்களும்) படைக்கும் (அதன் மூலம் படைக்கப்படும்) ஐம் (ஐந்து) பூதமும் (பூதங்களும்)
ஆய (கொண்ட உடம்பாக இருப்பது) பல (பல விதமான) இந்திரியம் (இந்திரியங்கள்) அவற்றுடன் (அவற்றோடு சேர்ந்து)
ஆய (அனைத்தையும் உருவாக்குகின்ற) அருள் (அருளானது) ஐந்து (ஐந்து விதமான) மா (மாபெரும்) அருள் (இறையருளின்) செய்கையே (செயல்களாலே ஆகும்).

விளக்கம்:

புலன்களால் ஆராய்ந்து அறியக்கூடிய உலக அறிவின் துணையால் அறிந்து கொள்ள முடியாத மாபெரும் மாயையாக இருக்கின்ற இறைவன் ஐந்து பூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்), அந்த ஐம்பூதங்களால் ஆகிய உடலையும், அந்த உடலுக்குள் அந்தக் கரணங்களாக இருக்கின்ற நான்கு விதமான (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) உள் உணர்வுகளையும், அந்த உயிருக்கு பல விதமான தத்துவங்களாகவும், அந்த தத்துவமாக இருக்கின்ற ஐந்து விதமான (கண், காது, மூக்கு, வாய், மெய்) இந்திரியங்களையும் தமது படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களின் மூலமே உருவாக்கி அருளுகின்றான்.

இறைவனின் ஐந்து தொழில்கள்:

படைத்தல் – தம்முடைய பேரான்மாவிலிருந்து ஆசையின் காரணமாக பிரிந்த ஜீவான்மாவை உலகத்தில் அந்த ஆசைகளை அனுபவிக்க ஐந்து பூதங்களை சேர்த்து தகுந்த உடலோடு படைத்தல்.
காத்தல் – அந்த உடலுக்குள்ளேயே இயங்குகின்ற சக்தியாக இருந்து உயிர் உள்ள காலம் வரை காத்தல்.
மறைத்தல் – அவ்வாறு தாம் உடலுக்குள் இருப்பதை உயிர்கள் உணராத படி மறக்கருணையினால் மறைத்தல்.
அருளல் – ஆன்மா தனது ஆசைகளை தீர்த்துக் கொள்ளவும், அந்த ஆசைகள் தீரத் தீர மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளவும் அருளல்.
அழித்தல் – ஆசைகள் முழுவதையும் அனுபவித்து முடித்த பிறகு அந்த ஜீவான்மாவின் வசித்த உடலில் இருந்து ஐந்து பூதங்களையும் பிரித்து மீண்டும் பரமாத்மாவாகிய தம்மிடமே வந்து சேரும் படி அழித்தல்.

அந்தக் கரணங்கள்:

மனம் – மனமானது சங்கல்பம் (விருப்பம்) மற்றும் விகல்பம் (சந்தேகம்) ஆகியவைகளின் தன்மையாகும்.
புத்தி – மனதின் முடிவெடுக்கும் பகுதி. பொய்யிலிருந்து உண்மையைப் பகுத்தறிந்து அதன் மூலம் ஞானத்தை சாத்தியமாக்கும் பகுதி.
சித்தம் – பதிவுகள், நினைவுகள் மற்றும் அனுபவங்கள் சேமிக்கப்படும் உணர்வு.
அகங்காரம் – நான், என்னுடையது என்று எண்ணுவது.

இந்திரியங்கள்:

கண் – பார்த்தல்
காது – கேட்டல்
மூக்கு – நுகர்தல்
வாய் – சுவைத்தல்
மெய் / உடல் – தொடுதல் / உணர்தல்

பாடல் #1807

பாடல் #1807: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

சிவமோடு சத்தி திகழ்நாத விந்துத்
தவமான வைமுக னீச னரனும்
பவமுறு மால் பதுமத்தோ னிறுதி
நவமவை யாகி நடிப்பவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமொடு சததி திகழநாத விநதுத
தவமான வைமுக னீச னரனும
பவமுறு மால பதுமததொ னிறுதி
நவமவை யாகி நடிபபவன றானே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவமோடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம் முகன் ஈசன் அரனும்
பவம் உறு மால் பதுமத்தோன் இறுதி
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே.

பதப்பொருள்:

சிவமோடு (ஆதி பராபரனாகிய சிவத்தோடு) சத்தி (ஆதி பராபரையாகிய சக்தியும்) திகழ் (அதற்குள்ளிருந்து தோன்றுகின்ற) நாதம் (ஒலியாகிய சத்தமும்) விந்து (ஒளியாகிய வெளிச்சமும்)
தவம் (பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று) ஆன (இறை நிலையை அடைந்த) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்டு) ஈசன் (அருளுகின்ற சதாசிவனும்) அரனும் (அழிக்கின்ற உருத்திரனும்)
பவம் (உலகத்தை காப்பதில்) உறு (மிகுதியாக நிற்கின்ற) மால் (திருமாலும்) பதுமத்தோன் (தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மனும்) இறுதி (கடைசியாக)
நவம் (மொத்தம் ஒன்பது) அவை (வகையான இறை சக்திகள்) ஆகி (ஆக உருமாறி) நடிப்பவன் (நடிக்கின்றவன்) தானே (ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவன் தான்).

விளக்கம்:

அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஆதி பராபரனாகிய சிவம், ஆதி பராபரையாகிய சக்தி, அவர்களுக்கு உள்ளிருந்து தோன்றுகின்ற ஒலியாகிய சத்தம், ஒளியாகிய வெளிச்சம், பெரும் தவங்கள் புரிந்து தகுதி பெற்று இறை நிலையை அடைந்த ஐந்து முகங்களைக் கொண்டு அருளுகின்ற சதாசிவன், அழிக்கின்ற உருத்திரன், உலகத்தை காப்பதில் மிகுதியாக நிற்கின்ற திருமால், தாமரை மலரின் மேல் தவம் புரிந்து படைக்கின்ற பிரம்மன் ஆகிய ஒன்பது விதமான இறை சக்திகளாக உருமாறி நடித்துக் கொண்டு இருக்கின்றவன் ஆதிப் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே.