அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சூழ்ந்து இருந்தாலும் தனித்தனியாகவே விளங்கிக் கொண்டிருக்கும்.
அக்கினிக்கு அறுபத்து நான்கு சூரியனுக்குப் பன்னிரண்டு சந்திரனுக்குப் பதினாறு என கலைகள் 92 ம் சேர்ந்துள்ள மூலாதாரத்தில் நட்சத்திரக் கலை நான்கு உள்ளன. இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.
சந்திர மண்டலமாகிய இடகலை மற்றும் சூரிய மண்டலமாகிய பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் எல்லா மூச்சுக்காற்றும் இயல்பாகவே கீழ் நோக்கி செல்லக்கூடியவை. அவற்றைத் தடுத்து நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே அவற்றை மேல் நோக்கி எடுத்துச் சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து இறைவனின் மேல் எண்ணத்தை வைத்து இருக்கும் யோகியர்கள் எப்போதும் இறப்பின்றி இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.
சந்திர யோகத்தில் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் மூச்சுக்காற்று மூலாதாரத்தில் உள்ள நெருப்பின் மேல் பட்டு மூலாதாரத்தின் அசைவினால் தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் சூரியன் சந்திரன் என்னும் இரண்டு நட்சத்திரங்களாக மாறுகிறது. இந்த நட்சத்திரங்களாக மாறிய ஒளிக்கீற்றைகளை மூச்சுக்காற்றுடன் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தாண்டி எட்டாவது சக்கரமாகிய துவாதசந்தவெளியையும் தாண்டி ஒன்பதாவது பரவெளியில் கொண்டு சென்று அங்கு உள்ள பரவொளியுடன் கலந்து விட்டால் உலகத்தை இயக்கும் இறைவனது பேரொளியின் அம்சமாக இருக்கலாம்.
குறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது எனும் சொல்லுக்கு ஏற்ப உலகம் என்று நாம் அழைக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் இன்னும் பல நட்சத்திரங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒளி உருவமாக இருந்து இயக்கும் இறைசக்தியே நமது உடலில் சகஸ்ரதளத்தில் ஜோதி வடிவாக தங்கி இருக்கின்றது. இதை நாம் யோகப் பயிற்சியின் மூலம் இயக்க ஆரம்பித்தால் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் இறை சக்தியாகவே நாமும் மாறிவிடுவோம்.
உயிர்களின் உடலில் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத அம்சங்கள் இடகலை பிங்கலை வழியே சுழன்று கொண்டிருக்கும் சூடான மற்றும் குளிர்ந்த மூச்சுக்காற்று மூலாதாரத்திலுள்ள குண்டலினியிலிருந்து தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் என மொத்தம் ஒன்பது வகையான அம்சங்களும் பிரணவமாகிய இறை சக்தியின் அம்சங்களாகும். இவற்றை உபயோகித்து செய்யும் யோகமே இறைவனை அடைவதற்கு உதவும் மிகப்பெரிய மார்க்கமாகும்.
வானத்து நட்சத்திரங்கள் சந்திரனின் தேய்பிறை சமயத்தில் பிரகாசமாக மின்னும். அதுவே சந்திரனின் வளர்பிறை சமயத்தில் நட்சத்திரங்களின் ஒளி சந்திரனின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்கின்ற யோகியர்கள் தமது மூச்சுக்காற்றை கீழ் நோக்கி எடுத்துச் சென்று குண்டலினியில் கலக்கும்போது அதில் பிரகாசமான ஒளிக்கீற்றுக்கள் உருவாகும். அதை ஒளிக்கீற்றை மேல் நோக்கி சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் செல்லும்போது சகஸ்ரதள ஜோதியின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். சந்திர யோகம் செய்து குண்டலினியில் உருவாகும் ஒளிக்கீற்றுக்களை சகஸ்ரதள ஜோதியில் சென்று சேர்க்கும் யோகியர்களிடம் பிரகாசிக்கும் ஜோதி உலகத்தில் அனைத்தையும் உருவாக்கும் பேரொளி ஜோதியான இறைவனின் சொரூபம் (ஒளி உருவம்) ஆகும்.
சந்திரன் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பெளர்ணமியில் முழுமை அடையும். அதன்பிறகு பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து அமாவாசையில் முழுமையாக மறைந்துவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்யும் யோகியருக்கு குண்டலினியில் ஒளிக்கீற்றுக்கள் தோன்றி பெரிய நட்சத்திரமாக வளர்ந்து பின்பு சகஸ்ரதளத்தில் சென்று முழுமையாக மறைந்துவிடும். இந்த பதினைந்து நிலைகளையும் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய யோகியர்கள் வார்த்தைகளில் கூறிவிடமுடியாத மகத்துவத்தைக் கொண்ட இறைவனின் திருவடிகளை தமக்குள் கண்டு அடைவார்கள்.
அகயோகம் மூலம் மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பிய பிறகு அந்த அக்கினியை அருமையான சூரிய மண்டலத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயுவோடு சேர்த்து நட்சத்திர ஒளியாக மாறுவதற்கு பத்து நாட்களும் அதன் பிறகு நட்சத்திரமாக மாறிய ஒளிக்கீற்றுக்களை சந்திர சூரிய அக்கினி மண்டலங்களோடு சேர்த்து மனதை ஒருமுகப்படுத்தி ஐந்து புலன்களையும் அதனதன் வழியில் செல்ல விடாமல் தடுத்து இறைவனின் மேல் எண்ணங்களை வைத்து சகஸ்ரதளத்தை அடைவதற்கு ஐந்து நாட்களும் ஆக மொத்தம் பதினைந்து நாட்கள் பாடல் #861 இல் கூறியுள்ளபடி உணர்ந்து அறிந்து கொண்டு செய்வதே சந்திர யோகமாகும்.
பாடல் #863: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்று அதில்வீழ்வர் திகைப்பொழி யாரே.
விளக்கம்:
வானத்திலிருக்கின்ற வளர் பிறை தேய் பிறை சந்திர மாற்றங்களின் பதினாறு கலைகளும் உயிர்களின் உடலுக்குள்ளேயும் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகும் அதை வைத்துக்கொண்டு இறைவனை நினைத்து சந்திரயோகம் செய்து பிறவி இல்லாத பெருவாழ்வை அடைய முயற்சி செய்யாத கீழான குணமுடையவர்களை கண்ட எமன் இனி இவர்கள் வாழ்ந்து என்ன பயன் என்று அவர்கள் இறந்து அடுத்த பிறவி எடுக்கும்படி மரணப்பிடியில் சிக்க வைக்கிறார். கீழான குணமுடையவர்களும் அதில் சென்று வீழ்ந்து மீண்டும் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பது என்று திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பாடல் #864: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை தங்கிய அதுவே சகலமு மாமே.
விளக்கம்:
குண்டலினியாகிய மூலாக்கினியில் சந்திர கலையாகிய இடகலை மூச்சுக்காற்று இணையும்போது அது சூரிய ஒளிக்கீற்றைப் பெறுகிறது. மூலாக்கினியில் சூரிய கலையாகிய பிங்கலை மூச்சுக்காற்று இணையும் போது அது சந்திர ஒளிக்கீற்றைப் பெறுகிறது. இப்படி மாறிப் பெற்ற இரண்டு ஒளிக்கீற்றுக்களும் சுழுமுனையில் ஒன்றாக இணையும் போது அது நட்சத்திர மண்டலங்களாக மாறுகின்றது. இந்த நட்சத்திர மண்டலங்கள் உயிர்களின் உடலிலுள்ள ஒன்பது மண்டலங்களையும் தாண்டி பரவெளியில் இறை சக்தியோடு ஒன்றினையும் போது அனைத்துமாகிய இறைவனாகவே யோகியர்கள் ஆகிவிடுகின்றனர்.