பாடல் #709

பாடல் #709: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

விளக்கம்:

யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

கருத்து: குண்டலினி சக்தியை ஏழு சக்கரங்களுக்கும் ஏற்றிச் சென்று எட்டாவது நிலையில் அமிர்தமாகி ஒன்பதாவது நிலையில் இறைவனோடு கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

பாடல் #710

பாடல் #710: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

விளக்கம்:

குளிர்ச்சியான சந்திரனின் குணம் கொண்ட இடகலை மற்றும் வெப்பமான சூரியனின் குணம் கொண்ட பிங்கலை ஆகிய நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றுகளை சுழுமுனை நாடிவழியே ஒன்றாகச் சேர்த்து மேலெழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் ஒன்றாகக் கலக்கும் படி செய்யும் அகயோகத்தை செய்த யோகியர்களே வானத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் தேவர்களாகிறார்கள். இந்த அகயோகத்தை உண்மையாக கடைபிடித்து இருக்கும் சித்தர்களுக்கு அதையும் தாண்டிய ஆனந்த யோகத்தில் தன்னை அடையும் வழியைக் காட்டி அங்கே அவர்களுடன் கலந்து இறைவனும் நிற்கின்றான்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை மேலே சேர்க்கும் அகயோகத்தை செய்த யோகிகள் தேவர்களாகிறார்கள். அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் இறைவனோடு இணைகின்ற ஆனந்த யோகத்தை செய்த யோகிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

பாடல் #711

பாடல் #711: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டுஅறி வார்க்கு நமனில்லை தானே.

விளக்கம்:

கீழ்நோக்கிச் செல்லும் மூச்சுக்காற்றை மேல்நோக்கி செல்ல வைத்து அதை சுழுமுனை நாடியோடு கட்டி வைக்கும் திறனைப் பெற்ற யோகியர்கள் அனைத்தும் தாமே என்பதை உணர்ந்து நிற்பார்கள். அதன்பின் சகஸ்ரதளத்தில் மலர்ந்த ஆயிரம் தாமரை இதழ்களின் மேலே வீற்றிருக்கும் இறைவனோடு மூச்சுக்காற்றை கலக்கவிட்டு அதை மீண்டும் கீழிறக்கி உள் நாக்கின் மேலே மூடியுள்ள துளையைக் குத்தி அதில் அமிர்தத்தை சுரக்க வைத்து அந்த அமிர்தத்தைப் பருகி தனது நடு நாடியாகிய சுழுமுனையிலேயே மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்க முடிந்த யோகியர்கள் இனி எப்போதும் இறந்து பிறவாத நிலையை அடைவார்கள்.

கருத்து: அகயோகம் ஆனந்தயோகம் செய்த யோகியர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

பாடல் #632

பாடல் #632: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.

பாடல் #633

பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

விளக்கம்:

சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.

பாடல் #634

பாடல் #634: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

விளக்கம்:

சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.

கருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.

பாடல் #635

பாடல் #635: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.

பாடல் #636

பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.

பாடல் #637

பாடல் #637: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

விளக்கம்:

நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

பாடல் #638

பாடல் #638: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.