பாடல் #1175

பாடல் #1175: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தக்க பராவித்தை தானிரு பத்தேழில்
தக்கெழு மோருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடு மென்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

விளக்கம்:

பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது தானாகவே இருபத்து ஏழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது. இந்த தத்துவங்களைப் பெற்று பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாக சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்ப செபித்து தியானித்துக் கொண்டே இருந்தால் அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெள்ளை நிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டும் ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.

பாடல் #1176

பாடல் #1176: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
அத்துவ மாயல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

விளக்கம்:

பாடல் #1175 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். மூன்று வகை முத்திரைகளை தன் வசம் வைத்திருக்கும் உண்மையான ஞானத்தை உடையவளான இறைவி அந்த முத்திரைகளின் தத்துவங்களாகவும் தத்துவங்கள் இல்லாததாகவும் அனைத்துமாகவும் அவளே இருக்கின்றாள். சாதகருக்குள் இருக்கும் பரம்பொருளாகிய இறைவனாகவே இருந்து இயங்குகின்ற பராசக்தியான இறைவி பேரின்பத்தைக் கொடுக்கின்ற சக்தியான இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்றாள்.

பாடல் #1177

பாடல் #1177: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்
அங்குச பாச மெனுமகி லங்கனி
தங்கு மவள்மனை தானறி வாயே.

விளக்கம்:

பாடல் #1176 இல் உள்ளபடி இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்ற இறைவியானவளின் திரு உருவத்தை தமக்குள் அறிந்து உணர்ந்து கொள்வதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். நறுமணத்தை தருகின்ற வாசனை மிக்க மலர்கள் பூத்திருக்கும் செடியின் கொம்பு போன்ற மெல்லிய இடையுடனும் மலரின் அரும்பு போன்ற மென்மையான முலைகளுடனும் என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள்ளிருந்து பொங்கி வெளிப்படும் குங்குமம் போன்ற சிவந்த ஒளி வீசும் திரு உருவத்தைக் கொண்டவள். அவளது திருக்கைகளில் அங்குசத்தையும் பாசக் கயிறையும் ஏந்திக் கொண்டு அடியவர்களின் உலகப் பற்றை அடக்கி ஆளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் அன்போடு வீற்றிருக்கின்ற அவள் தங்கியிருக்கும் வீடாகிய சாதகரின் உடலுக்குள் தாமாகவே தேடி அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #1178

பாடல் #1178: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்
தாயு மகளுநல் தாரமு மாமே.

விளக்கம்:

பாடல் #1177 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளே தேடி அறிந்து கொண்ட இறைவியானவள் இறைவனுடன் எப்படி சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடல் அறிந்து கொள்ளலாம். வாக்கால் சொல்ல முடியாதவளும் எண்ணங்களால் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியாதவளும் ஆகிய மனோன்மணி எனும் இறைவி தனது பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருந்து உலகங்களின் இயக்கம் நடைபெறுவதற்கு எண்ணங்களோடு இருக்கின்ற ஆன்மாக்களையும் தேவ கணங்களையும் அதிகமாக வைத்து இயக்குகின்றாள். கல்வி அறிவால் எவ்வளவு ஆராய்ந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத இறைவனுக்கு அவளே தாயாகவும் மகளாகவும் என்றும் நன்மை தரும் துணைவியாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: உலக இயக்கம் நடைபெறுவதற்கு இறைவியின் எண்ணத்திற்கு ஏற்ப ஐந்து பூதங்களையும் கணங்கள் செயல் படுத்துகின்றது. இறைவனிடமிருந்து தன் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பிரிந்து வந்த எண்ணங்களுடைய ஆன்மா தனது ஆசைகளையும் அதனால் சேரும் வினைகளையும் பிறவி எடுத்து தீர்த்துக் கொள்கிறது. இதுவே இங்கு பேய் என்று குறிப்பிடப் படுகின்றது.

உப குறிப்பு: சாதகர் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்ளும் இறைவியானவள் முதல் நிலையில் தாயாக இருந்து சாதகரின் மேல் அன்பு செலுத்துகிறாள். இரண்டாவது நிலையில் சாதகர் தாம் உணர்ந்த இறைவியின் மேல் தன் மகளைப் போல அன்பு செலுத்துகிறார். மூன்றாவது நிலையில் இறைவியும் சாதகரும் சரிசமமாக ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துகிறார்கள்.

பாடல் #1179

பாடல் #1179: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தாரமும் மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

விளக்கம்:

பாடல் #1178 இல் உள்ளபடி இறைவனோடு துணையாக இருக்கின்ற இறைவியின் தன்மைகளை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவனுக்குத் துணையாகவும் இருக்கின்ற இறைவி அதன் அனைத்து தத்துவங்களாகவும் நிற்கின்றாள். இறைவன் உலகங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போது அதன் காரணமாகவும் இறைவன் எண்ணியபடியே உலகங்களை படைக்கும் போது அதன் காரியமாகவும் எப்போதும் இறைவனோடு கலந்தே இருக்கின்றாள் இறைவி. இறைவனின் பரிபூரண ஜோதியாகிய ஒளி ஒருவத்தோடு கலந்து அதனுள்ளே சக்தியாக அடங்கி இருக்கின்ற ஆதியான இறைவி உலகங்கள் அனைத்தின் அளவுக்கும் பரந்து விரிந்து அதையும் தாண்டி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளாக இருக்கின்றாள்.

பாடல் #1180

பாடல் #1180: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பத்து முகமுடை யாளெம் பராசத்தி
வைத்தன ளாறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ளாதார மொன்றுட னோங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.

விளக்கம்:

பாடல் #1179 இல் உள்ளபடி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளான இறைவி இறைவனோடு சேர்ந்து எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பத்து திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்ட எமது பராசக்தியான இறைவியே உயிர்கள் உய்ய வேண்டும் என்று நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் உருவாக்கி வைத்து அருளினாள். அவளே அனைத்திற்கும் ஆதாரமான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து மிகவும் உயர்ந்த நிலையில் எல்லா காலத்திலும் எப்போதும் இறைவனுடன் சரிசமமான பாகமாக சேர்ந்தே நிற்கின்றாள்.

வேதத்தின் ஆறு அங்கங்கள்:

  1. சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.

பாடல் #1181

பாடல் #1181: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை யமுத பயோதரி
பேருயி ராளி பிறிவுஅறுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1180 இல் உள்ளபடி இறைவனோடு பல விதங்களில் கலந்து இருக்கும் இறைவியானவள் அவனோடு உத்தமமான உயிர்களையும் சேர்த்து அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். எம்மால் புகழ்ந்து கூறப்படுகின்ற என்றும் இளமை பொருந்திய இறைவியானவள் வளைந்த புருவங்களோடு சீரும் சிறப்பும் கொண்டவளாக ஏழு உலகங்களிலும் திகழ்ந்து இருக்கின்றாள். வேதங்களாகவே இருக்கின்ற என்றும் இளமையான இறைவி உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலைக் கொண்ட தனங்களை உடையவள். தகுதியான உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலை அளித்து ஆட்கொண்டு இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் அவர்களின் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாகச் சேர்த்து அருளுகின்றாள்.

பாடல் #1182

பாடல் #1182: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

விளக்கம்:

பாடல் #1181 இல் உள்ளபடி இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாக சேர்வதற்கு அருளுகின்ற இறைவியானவள் ஆரம்ப நிலையில் சாதகரின் ஆன்மாவை பெரும் கருணையோடு காத்து நின்று இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற அவரின் எண்ணங்களோடு சேர்ந்து நின்று கொம்பின் உயரத்திற்கு ஏற்ப வளர்கின்ற பூங்கொடியைப் போல சாதகரின் எண்ணங்களுக்கு ஏற்ப அருள் புரிகின்ற அழகிய பூங்கொடியாக இருக்கின்றாள். இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சாதகரின் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அதனோடு ஒன்றாக சேர்ந்து நின்று அவருக்கு இறைவனை அடைவதற்கு வேண்டிய உண்மை ஞானத்தை அருளி அந்த ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்றாள்.

பாடல் #1183

பாடல் #1183: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

விளக்கம்:

பாடல் #1182 இல் உள்ளபடி உண்மை ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்ற இறைவியானவள் அவருக்கு எவ்வாறு அருள் புரிகிறாள் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகரின் உள்ளத்திற்கு உள்ளே வந்து அவருடனே சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் அவரின் ஐந்து புலன்களும் இறைவனை நோக்கி செல்வதை தடுத்து ஆசைகளின் வழியே செல்ல வைக்கின்ற கள்ளத் தனத்தை (வஞ்சகத் தன்மையை) அகற்றி அவருடன் ஒன்றாகக் கலந்து நின்று அவரை தம்மோடு அணைத்துக் கொண்டு அவர் கொண்ட தவத்தின் வழிப்படியே செல்வதில் இருந்து தவறிவிடாமல் காப்பாற்றி அவர் செய்கின்ற தவம் கைகூடும் காலத்தில் பேரின்பத்தை அளித்து அதிலேயே அவர் லயித்து இருக்குமாறு அருளுகின்ற பெருங்கருணை கொண்ட வள்ளல் தலைவியாக இருக்கின்றாள்.

பாடல் #1184

பாடல் #1184: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற வின்ப மறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்
திருந்த விலக்கி லினிதிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1183 இல் உள்ளபடி பேரின்பத்தைக் கொடுத்து அருளுகின்ற பெரும் கருணை வள்ளலாக இருக்கின்ற இறைவியானவள் சாதகருடன் எவ்வாறு சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகருக்கு அருள் புரிந்து பேரின்பத்தைக் கொடுக்கின்ற மாபெரும் சக்தியாகிய இறைவி சாதகருக்குள் வீற்றிருந்து தமது அருளினால் புரிகின்ற பேரின்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சில சாதகர்கள் இருக்கின்றனர். பேரின்பத்தை அறிந்து கொண்ட சாதகர்களுக்குள் அண்டத்தில் இருக்கும் பராசக்தியின் ஒரு துளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் பூவும் நிறமும் போல சாதகரும் தாமும் ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கின்றாள். இப்படி இறைவியோடு தாமும் கலந்து வீற்றிருக்கின்ற நிலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வீற்றிருக்கின்ற சாதகர்களோடு அவளும் இன்பமாக வீற்றிருக்கின்றாள்.