பாடல் #724: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
விளக்கம்:
உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.
கருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.
