பாடல் #1808

பாடல் #1808: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

அருட்கண்ணில் லாதார்க் கரும்பொருள் தோன்றா
வருட்கண்ணுள் ளோர்க்கெதிர் தோன்று மரனே
யிருட்கண்ணி னோர்க்கிங் கிரவியுந் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருடகணணில லாதாரக கருமபொருள தொனறா
வருடகணணுள ளொரககெதிர தொனறு மரனெ
யிருடகணணி னொரககிங கிரவியுந தொனறாத
தெருடகணணி னொரககெஙகுஞ சீரொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா
அருள் கண் உள்ளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு இங்கு இரவியும் தோன்றா
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.

பதப்பொருள்:

அருள் (இறைவனின் அருள் பெற்ற) கண் (ஞானக் கண்) இல்லாதார்க்கு (இல்லாதவர்களுக்கு) அரும் (எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற) பொருள் (பரம்பொருள்) தோன்றா (தோன்றுவது இல்லை)
அருள் (இறைவனின் அருள் பெற்ற) கண் (ஞானக் கண்) உள்ளோர்க்கு (உள்ளவர்களின்) எதிர் (கண்ணுக்கு எதிரில்) தோன்றும் (தோன்றுகின்றான்) அரனே (இறைவன்)
இருள் (மாயையினால் இருண்ட) கண்ணினோர்க்கு (கண்களை உடையவர்களுக்கு) இங்கு (இந்த உலகத்தில் எங்கும்) இரவியும் (இயற்கையில் சூரியனின் வெளிச்சம் தெரிந்தாலும் அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனின் பேரருள்) தோன்றா (தோன்றுவதில்லை)
தெருள் (மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற) கண்ணினோர்க்கு (கண்களை உடையவர்களுக்கு) எங்கும் (எங்கும்) சீர் (செம்மையாகத் தெரிகின்ற) ஒளி (பேரொளியாக) ஆமே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

இறைவனின் அருள் பெற்ற ஞானக் கண் இல்லாதவர்களுக்கு எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற பரம்பொருள் தோன்றுவது இல்லை. இறைவனின் அருள் பெற்ற ஞானக் கண் உள்ளவர்களின் கண்ணுக்கு எதிரில் தோன்றுகின்றான் இறைவன். மாயையினால் இருண்ட கண்களை உடையவர்களுக்கு இந்த உலகத்தில் எங்கும் இயற்கையில் சூரியனின் வெளிச்சம் தெரிந்தாலும் அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனின் பேரருள் தோன்றுவதில்லை. மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற கண்களை உடையவர்களுக்கு எங்கும் செம்மையாகத் தெரிகின்ற பேரொளியாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #1809

பாடல் #1809: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தானே படைத்திடுந் தானே யளித்திடுந்
தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்
தானே யிவைசெய்து தான்முத்தி தந்திடுந்
தானே வியாபித்த தலைவனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ படைததிடுந தானெ யளிததிடுந
தானெ துடைததிடுந தானெ மறைததிடுந
தானெ யிவைசெயது தானமுததி தநதிடுந
தானெ வியாபிதத தலைவனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபித்த தலைவனும் ஆமே.

பதப்பொருள்:

தானே (ஆதியிலிருந்து தானாகவே இருக்கின்ற பரம்பொருளான இறை சக்தியின் அருளே) படைத்திடும் (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது) தானே (அதுவே) அளித்திடும் (ஆசைகளை அனுபவித்து முடிக்கும் வரை உயிர்களை காத்து அதனதன் ஆசைகளுக்கு ஏற்ப அனுபவிக்கும் படி அளிக்கின்றது)
தானே (அதுவே) துடைத்திடும் (வினை முடிந்த உயிர்களை அழித்து உலகத்தில் இருந்து நீக்குகின்றது) தானே (அதுவே) மறைத்திடும் (தாம் அனைத்துக்கும் உள்ளே இருப்பதை மறக்கருணையினால் மறைக்கின்றது)
தானே (இறையருளாகிய ஒன்றே) இவை (இவை அனைத்தையும்) செய்து (செய்து) தான் (அதை முழுவதும் அனுபவித்து முடித்த உயிர்களுக்கு அதுவே) முத்தி (முக்தி நிலையையும்) தந்திடும் (தந்து அருளுகின்றது)
தானே (இவ்வாறு தாமாகவே) வியாபித்த (அனைத்திலும் கலந்து பரவியிருக்கின்ற இறையருளே) தலைவனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

ஆதியிலிருந்து தானாகவே இருக்கின்ற பரம்பொருளான இறை சக்தியின் அருளே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது, அதுவே ஆசைகளை அனுபவித்து முடிக்கும் வரை உயிர்களை காத்து அதனதன் ஆசைகளுக்கு ஏற்ப அனுபவிக்கும் படி அளிக்கின்றது, அதுவே வினை முடிந்த உயிர்களை அழித்து உலகத்தில் இருந்து நீக்குகின்றது, அதுவே தாம் அனைத்துக்கும் உள்ளே இருப்பதை மறக்கருணையினால் மறைக்கின்றது. இறையருளாகிய ஒன்றே இவை அனைத்தையும் செய்து அதை முழுவதும் அனுபவித்து முடித்த உயிர்களுக்கு அதுவே முக்தி நிலையையும் தந்து அருளுகின்றது. இவ்வாறு தாமாகவே அனைத்திலும் கலந்து பரவியிருக்கின்ற இறையருளே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றது.

பாடல் #1810

பாடல் #1810: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தலையான மேனான்குந் தான் குருவாகு
மலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்
நிலையான கீனான்கும் நீடுரு வாகுந்
துலையா விவைமுற்று மாயல்ல தொன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தலையான மெனானகுந தான குருவாகு
மலையா வருவுரு வாகுஞ சதாசிவம
நிலையான கீனானகும நீடுரு வாகுந
துலையா விவைமுறறு மாயலல தொனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தலை ஆன மேல் நான்கும் தான் குரு ஆகும்
அலையாத அருவுரு ஆகும் சதா சிவம்
நிலையான கீழ் நான்கும் நீடு உரு ஆகும்
துலையாத இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே.

பதப்பொருள்:

தலை (ஆதி முதல்வன்) ஆன (ஆக இருக்கின்ற) மேல் (அனைத்திற்கு மேலாகிய அசையா சக்தியாகிய பரம்பொருளே) நான்கும் (நான்கு உயர் தத்துவங்களாகிய சிவம், சக்தி, நாதம், விந்து) தான் (ஆக தாமே இருந்து) குரு (அனைத்திற்கும் குருநாதராக) ஆகும் (வழிகாட்டுகின்றது)
அலையா (அந்த அசையா சக்தியாகிய இறை அருளே) அருவுரு (உருவமில்லாத உருவம்) ஆகும் (ஆகிய) சதாசிவம் (சதாசிவமூர்த்தியாக நடுவில் நின்று)
நிலை (ஆதாரம்) ஆன (ஆகி) கீழ் (உயிர்களுக்காக உருவாகுகின்ற உலகமாகிய கீழ் தத்துவத்தில்) நான்கும் (பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நால்வரின் தொழில்களை செய்து) நீடு (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் நீண்டு பரவி இருக்கின்ற) உரு (உயிர்களின் உருவங்கள்) ஆகும் (ஆக இருக்கின்றது)
துலையா (எப்போதும் அழியாத) இவை (இந்த இறை சக்திகள்) முற்றும் (உயிர்களின் வினை முற்றுப் பெற்று இறைவனை அடையும் வரை) ஆய் (உருவம் உள்ளதாகவும்) அல்லது (இல்லாததாகவும்) ஒன்றே (இருப்பது அசையா சக்தியாகிய பரம்பொருள் ஒன்றே ஆகும்).

விளக்கம்:

ஆதி முதல்வனாக இருக்கின்ற அனைத்திற்கு மேலாக இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே முதன்மையான உயர் தத்துவங்களாகிய சிவம், சக்தி, நாதம், விந்து ஆகிய நான்கிற்கும் குருநாதராக வழி காட்டுகின்றது. அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளே அருவுருவமாகவும் நடுவில் நிற்கின்றது. அந்த பரம்பொருளே ஆதாரமாக நின்று உயிர்களுக்காக உருவாகுகின்ற உலகமாகிய கீழ் தத்துவத்தில் பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நால்வரின் தொழில்களை செய்து அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உயிர்களின் உருவங்களாக நீண்டு பரவி இருக்கின்றது. அழியாத இந்த இறை சக்திகள் உயிர்களின் வினை முற்றுப் பெற்று இறைவனை அடையும் வரை உருவம் உள்ளதாகவும் உருவம் இல்லாததாகவும் இருப்பது அசையா சக்தியாகிய பரம்பொருள் ஒன்றே ஆகும்.

பாடல் #1811

பாடல் #1811: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

ஒன்றது வாலே யுலப்பிலி தானாகி
நின்றது தாம்போ லுயிர்க்குயி ராய்நிலை
துன்றி யவையல்ல வாகுந் துணையென
நின்றது தான்விளை யாட்டென்னு நேயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறது வாலெ யுலபபிலி தானாகி
நினறது தாமபொ லுயிரககுயி ராயநிலை
துனறி யவையலல வாகுந துணையென
நினறது தானவிளை யாடடெனனு நெயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்று அதுவாலே உலப்பு இலி தான் ஆகி
நின்று அது தாம் போல் உயிர்க்கு உயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என
நின்று அது தான் விளையாட்டு என்னும் நேயமே.

பதப்பொருள்:

ஒன்று (ஒன்றாக இருக்கின்ற) அதுவாலே (இறைசக்தியாலே) உலப்பு (அழிவு) இலி (இல்லாத) தான் (தாமே) ஆகி (அனைத்தும் ஆகி)
நின்று (நின்று) அது (அந்த இறை சக்தியே) தாம் (தன்னைப்) போல் (போலவே படைக்கின்ற) உயிர்க்கு (அனைத்து உயிர்களுக்கும்) உயிராய் (உள் இருக்கின்ற உயிராய்) நிலை (நிலை பெற்று)
துன்றி (அந்த உயிர்களுக்கு உள்ளேயே பொருந்தி இருந்தாலும்) அவை (அந்த உயிர்கள்) அல்ல (இல்லாத உடல்கள்) ஆகும் (அனைத்துமாகவும் இருக்கின்றது) துணை (உடலோடு சேர்ந்து இருக்கின்ற வரை உயிருக்கும், உயிர் நீங்கி அழியும் வரை உடலுக்கும் தாமே துணை) என (எனவும்)
நின்று (நின்று) அது (இதுவே) தான் (தமது) விளையாட்டு (மாபெரும் விளையாட்டு) என்னும் (என்று அழைக்கப்படும்) நேயமே (பேரன்பாகவும் இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1810 இல் உள்ளபடி அனைத்தும் ஒன்றாக இருக்கின்ற அழிவில்லாத பரம்பொருள் தாமே அனைத்தும் ஆகி நிற்கின்றது. அந்த இறை சக்தியே தன்னைப் போலவே படைக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கின்ற உயிர் சக்தியாய் நிலை பெற்று பொருந்தி நிற்கின்றது. அந்த உயிர்கள் இல்லாத உடல்கள் அனைத்துமாகவும் தாமே இருக்கின்றது. பிறவி எடுத்ததில் இருந்து உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கும் வரை உயிருக்கும், உயிர் நீங்கிய பின்பு மண்ணோடு மண்ணாகும் வரை உடலுக்கும் எப்போதும் விலகாத துணையாகவும் தாமே இருக்கின்றது. இதுவே பேரன்பு என்று அழைக்கப்படும் இறைவனின் மாபெரும் திரு விளையாட்டு ஆகும்.

பாடல் #1812

பாடல் #1812: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

நேயத்தே நின்றிடும் நின்மல சத்தியோ
டாயக் குடிலையுள் நாத மடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாகிவிளை யுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெயததெ நினறிடும நினமல சததியொ
டாயக குடிலையுள நாத மடைநதிடடுப
பொயக கலைபல வாகப புணரநதிடடு
வீயத தகாவிநது வாகிவிளை யுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நேயத்தே நின்று இடும் நின் மல சத்தியோடு
ஆய குடிலை உள் நாதம் அடைந்து இட்டு
போய கலை பல ஆக புணர்ந்து இட்டு
வீய தகா விந்து ஆகி விளையுமே.

பதப்பொருள்:

நேயத்தே (பேரன்பில்) நின்று (நின்று) இடும் (இருக்கின்ற) நின் (எந்தவொரு) மல (அழுக்கும் இல்லாத) சத்தியோடு (இறை சக்தியோடு)
ஆய (கூடி இருக்கின்ற) குடிலை (சுத்த மாயையின்) உள் (உள்ளுக்குள்) நாதம் (இருந்து இயங்குகின்ற சத்தமாக) அடைந்து (அடைந்து) இட்டு (வீற்றிருந்து)
போய (அதனை விட்டு விலகிய) கலை (உடல் பெற்ற ஆன்மாக்கள்) பல (பல) ஆக (விதமாக) புணர்ந்து (பொருந்தி) இட்டு (வீற்றிருந்து)
வீய (என்றும் அழிந்து) தகா (போகாத) விந்து (பேரறிவாகிய வெளிச்சமாக) ஆகி (ஆகி) விளையுமே (அண்ட சராசரங்களிலிருக்கும் உலகங்கள் அனைத்திலும் வாழுகின்ற உயிர்களாகவும் விளைந்து இருக்குமே).

விளக்கம்:

பாடல் #1811 இல் உள்ளபடி விளையாடுகின்ற பேரன்பாக நின்று இருக்கின்ற எந்தவிதமான அழுக்கும் இல்லாத பரம்பொருளான இறை சக்தியே ஒன்றாக கூடி இருக்கின்ற சுத்த மாயையின் உள்ளுக்குள் இருந்து இயங்குகின்ற சத்தமாகவும் வீற்றிருக்கின்றது. அந்த சுத்த மாயையை விட்டு பிரிந்து உடல் பெற்று வந்த ஆன்மாக்களோடு பலவிதமாக பொருந்தி வீற்றிருந்து என்றும் அழியாத பேரறிவாகிய வெளிச்சமாகவும் வீற்றிருந்து அண்ட சராசரங்களிலிருக்கும் உலகங்கள் அனைத்திலும் வாழுகின்ற உயிர்களாகவும் விளைந்து இருக்கின்றது.

பாடல் #1813

பாடல் #1813: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையுந் தனிமாயை மிக்க மாமாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேத
மளவொன் றிலாவண்டமாங் கொடி யாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளையும பரவிநது தானெ வியாபி
விளையுந தனிமாயை மிகக மாமாயை
கிளையொனறு தெவர கிளரமனு வெத
மளவொன றிலாவணடமாங கொடி யாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளையும் பர விந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்டமாம் கொடியாளே.

பதப்பொருள்:

விளையும் (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் வாழுகின்ற உயிர்களாக விளைந்து இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) விந்து (பேரறிவாகிய வெளிச்சம்) தானே (தாமே) வியாபி (அண்ட சராசரங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்றது)
விளையும் (அனைத்துமாக விளைந்து நிற்கின்ற) தனி (தனிப் பொருளாகிய) மாயை (மாயையிலும்) மிக்க (அதனை விட மேன்மையான) மா (மாபெரும்) மாயை (மாயையிலும்)
கிளை (வானவர் இனத்தில்) ஒன்று (ஒன்றாக இருக்கின்ற) தேவர் (தேவர்கள்) கிளர் (உயிர்களின் உலக செயல்களுக்காக தமக்குள் இருந்து இறையருளால் கிளர்ந்து எழுகின்ற) மனு (மந்திரங்களாகிய) வேதம் (வேதத்திலும்)
அளவு (இவ்வளவு அளவு என்று) ஒன்று (ஒன்றும்) இலா (இல்லாத அளவிற்கு மிகப் பெரியதாகிய) அண்டமாம் (அண்டங்களிலும்) கொடியாளே (படர்ந்து விரிந்து இருக்கின்ற பேரருள் சக்தியாகவும் அதுவே இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1812 இல் உள்ளபடி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் வாழுகின்ற உயிர்களாக விளைந்து இருக்கின்ற பரம்பொருளாகிய பேரறிவு வெளிச்சமே அண்ட சராசரங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்றது. அந்த பரம்பொருளாகிய இறை சக்தியே தனிப் பொருளாகிய மாயையிலும், அதனை விட மேன்மையான மாமாயையிலும், வானவர் இனத்தில் ஒன்றாக இருக்கின்ற தேவர்கள் உயிர்களில் உலக செயல்களுக்காக தமக்குள் இருந்து இறையருளால் கிளர்ந்து எழுகின்ற மந்திரங்களாகிய வேதத்திலும், அளவில்லாத மிகப் பெரியதாகிய அண்டங்களிலும் படர்ந்து விரிந்து இருக்கின்றது.