பாடல் #1408

பாடல் #1408: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அமுத மதாக வழகிய மேனி
படிக மதாகப் பரந்தெழு முள்ளே
குமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுத மதாகிய கேடிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமுத மதாக வழகிய மெனி
படிக மதாகப பரநதெழு முளளெ
குமுத மதாகக குளிரநதெழு முததுக
கெழுத மதாகிய கெடிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழும் முத்துக்கு
எழுதம் அது ஆகிய கேடு இலி தானே.

பதப்பொருள்:

அமுதம் (அமிழ்தம்) அது (எனும் பொருள்) ஆக (ஆகவே மாறி இருக்கும் இறைவியின்) அழகிய (பேரழகுடைய) மேனி (திருமேனியானது)
படிகம் (பளிங்குக் கல்லை) அது (போலவே) ஆக (உறுதியாக) பரந்து (சாதகரை வணங்கும் உயிர்களுக்குள் பரந்து விரிந்து) எழும் (எழுந்து) உள்ளே (உள்ளுக்குள்)
குமுதம் (அல்லி எனும்) அது (மலரைப்) ஆக (போலவே) குளிர்ந்து (குளிர்ச்சியுடன்) எழும் (மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை) முத்துக்கு (முத்துப் போன்ற)
எழுதம் (வடிவமாகவும்) அது (உறுதியான கல்லாகவும்) ஆகிய (ஆக்கி) கேடு (அதற்கு எந்த விதமான தீங்கும்) இலி (இல்லாத) தானே (சக்தியாகிறது).

விளக்கம்:

பாடல் #1407 இல் உள்ளபடி அமிழ்தமாகவே மாறி இருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது பளிங்குக் கல்லை போலவே உறுதியாக சாதகருக்குள் பரந்து விரிந்து எழுந்து அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆக்கி அதற்கு எந்த விதமான தீங்கும் இல்லாத சக்தியாகிறது.

பாடல் #1409

பாடல் #1409: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரு
நாடிலி கன்னிக ணாலொன் பதிமரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின்றார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடிலி சததிகள முபபத தறுவரு
நாடிலி கனனிக ணாலொன பதிமரும
பூவிலி பூவித ளுளளெ யிருநதவர
நாளிலி தனனை நணுகிநினறார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதிமரும்
பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே.

பதப்பொருள்:

கேடு (எந்தவிதமான தீங்கும்) இலி (இல்லாமல்) சத்திகள் (சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள்) முப்பத்து (முப்பதும்) அறுவரும் (ஆறும் கூட்டி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
நாடு (சாதகர் தேடி அடைய வேண்டியது) இலி (இல்லாமல்) கன்னிகள் (தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் சக்திகள்) நால் (நான்கும்) ஒன்பதிமரும் (ஒன்பதும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
பூ (தமக்கென்று எந்த இடமும்) இலி (இல்லாதவர்களாக) பூ (சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின்) இதழ் (இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே வந்து) இருந்தவர் (வீற்றிருக்கின்றார்கள்)
நாள் (காலம் என்கிற ஒன்று) இலி (இல்லாதவளாகிய) தன்னை (இறைவியை) நணுகி (நெருங்கியே) நின்றார்களே (இவர்கள் நிற்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1408 இல் உள்ளபடி எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கின்றார்கள். சாதகர் தேடி அடைய வேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகளும் தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கின்றார்கள். இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கின்றார்கள்.

பாடல் #1410

பாடல் #1410: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து ளிருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின வென்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறது புநதி நிறைநதிடும வனனியுங
கணடது சொதி கருதது ளிருநதிடக
கொணடது வொராணடு கூடி வருகைககு
விணட வெளகாரம விளஙகின வெனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற அது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்ட அது சோதி கருத்து உள் இருந்திட
கொண்ட அது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின என்றே.

பதப்பொருள்:

நின்ற (முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற) அது (இறைவியே) புந்தி (சாதகரின் அறிவு) நிறைந்திடும் (முழுவதும் நிறைந்து இருக்கின்ற) வன்னியும் (அக்னியாகவும்)
கண்ட (அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற) அது (வடிவமே) சோதி (ஜோதியாகவும்) கருத்து (தமது கருத்துக்கு) உள் (உள்ளே வைத்து) இருந்திட (தியானத்தில் இருப்பதையே)
கொண்ட (சாதகமாகக் கொண்ட) அது (சாதகர்களுக்கு) ஓர் (அந்த நிலையே ஒரு) ஆண்டு (ஆண்டு முழுவதும்) கூடி (விட்டுவிடாமல் சேர்ந்து) வருகைக்கு (கைவரப் பெற்றால்)
விண்ட (ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள) வௌகாரம் (‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின்) விளங்கின (உட் பொருளை விளங்கிக் கொள்ள) என்றே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1409 இல் உள்ளபடி முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்து இருக்கின்ற அக்னியாகவும் அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் தமது கருத்துக்கு உள்ளே வைத்து இடைவிடாமல் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பாடல் #1406 இல் உள்ளபடி ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.

பாடல் #1411

பாடல் #1411: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளங்கிடும் வானிடை நின்றவை யெல்லாம்
வணங்கிடு மண்டல மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளஙகிடும வானிடை நினறவை யெலலாம
வணஙகிடு மண்டல மனனுயி ராக
நலஙகிளர நனமைகள நாரண னொததுச
சுணஙகிடை நினறவை சொலலலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்றவை செல்லலும் ஆமே.

பதப்பொருள்:

விளங்கிடும் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு விளங்கி விடும்) வான் (ஆகாயத்தின்) இடை (நடுவில்) நின்றவை (நிற்கின்ற) எல்லாம் (அனைத்து தத்துவங்களும்)
வணங்கிடும் (அவரை வணங்கிடும்) மண்டலம் (இடத்திலெல்லாம்) மன் (வாழுகின்ற) உயிர் (உயிர்கள்) ஆக (ஆகவே அவரும் இருந்து)
நலம் (நலம் தரும்) கிளர் (பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து) நன்மைகள் (அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து) நாரணன் (நரனாக / மனிதனாக இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து) ஒத்து (காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே)
சுணங்கு (உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க) இடை (அதற்கு நடுவில்) நின்றவை (நின்று கொண்டு) செல்லலும் (அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1410 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்து தத்துவங்களும் விளங்கிவிடும். அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே அவரும் இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து நரனாக (மனிதனாக) இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க அதற்கு நடுவில் நின்று கொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும்.

பாடல் #1412

பாடல் #1412: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யதோமுக மேலே யமுதமாய்த்
தானே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யதொமுக மெலெ யமுதமாயத
தானெ யுகாரந தழைததெழுஞ சொமனுங
காமெல வருகினற கறபக மானது
பூமெல வருகினற பொறகொடி யானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்
தானே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொற் கொடி ஆனதே.

பதப்பொருள்:

ஆமே (எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர்) அதோ (இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ) முகம் (முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும்) மேலே (அதற்கு மேலே இருக்கின்ற) அமுதம் (அமிழ்தம்) ஆய் (ஆகவும்)
தானே (தாமே) உகாரம் (அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும்) தழைத்து (சிறப்பாக) எழும் (எழுந்து வந்து) சோமனும் (உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும்)
கா (தமது உடலுக்கு) மேல் (மேலே) வருகின்ற (வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும்) கற்பகம் (கற்பகத் தரு) ஆனது (ஆகவும்)
பூ (பூமியின்) மேல் (மேல்) வருகின்ற (வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற) பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடி (கொடியாகவும்) ஆனதே (ஆகி இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1411 இல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர் இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும், அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும், சிறப்பாக எழுந்து வந்து உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும், தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும் கற்பகத் தருவாகவும், பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கின்றார்.

பாடல் #1413

பாடல் #1413: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
வக்களி யாகிய வாங்காரம் போய்விடு
மற்கடி யாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொறகொடி யாளுடன பூசனை செயதிட
வககளி யாகிய வாஙகாரம பொயவிடு
மறகடி யாகிய மணடலந தனனுளெ
பிறகொடி யாகிய பெதையைக காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொற் கொடியாள் உடன் பூசனை செய்திட
அக் களி ஆகிய ஆங்காரம் போய்விடும்
மற் கடி ஆகிய மண்டலம் தன் உளே
பிற் கொடி ஆகிய பேதையை காணுமே.

பதப்பொருள்:

பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடியாள் (கொடியாக இருக்கின்ற) உடன் (இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து) பூசனை (பூஜைகள்) செய்திட (செய்து கொண்டு இருக்கும் போது)
அக் (அங்கு) களி (கிடைத்த இன்ப) ஆகிய (எண்ணமாகிய) ஆங்காரம் (இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற அகங்காரத்தை) போய்விடும் (சாதகரை விட்டு போக வைத்துவிடும்)
மற் (அதன் பிறகு நிலைபெற்று) கடி (காவலாக) ஆகிய (தம்மைச் சுற்றி இருக்கின்ற) மண்டலம் (மண்டலத்தை) தன் (அதற்கு) உளே (உள்ளேயே)
பிற் (சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற) கொடி (கொடி) ஆகிய (ஆக இருக்கின்ற) பேதையை (குழந்தை போன்ற இறைவியை) காணுமே (தமக்குள்ளே தரிசிக்க முடியும்).

விளக்கம்:

பாடல் #1412 இல் உள்ளபடி தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்து கொண்டு இருக்கும் போது அதில் இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு சாதகரைச் சுற்றி காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியை தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும்.

பாடல் #1414

பாடல் #1414: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்
தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெதை யிவளுககுப பெணமை யழகாகுந
தாதை யிவளுககுத தாணுவுமாய நிறகும
மாதை யிவளுககு மணணுந திலதமாயக
கொதையர சூழக குவிநதிடுங காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவும் ஆய் நிற்கும்
மாதை இவளுக்கு மண்ணும் திலதம் ஆய்
கோதையர் சூழ குவிந்திடும் காணுமே.

பதப்பொருள்:

பேதை (குழந்தை போல இருக்கின்ற) இவளுக்கு (இறைவிக்கு) பெண்மை (சக்தியின் பரிபூரணமே) அழகு (பேரழகாக) ஆகும் (இருக்கின்றது)
தாதை (அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும்) இவளுக்கு (இறைவிக்கு) தாணுவும் (உறுதுணை) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்றார்)
மாதை (இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும்) இவளுக்கு (இறைவிக்கு) மண்ணும் (அழகாக பூசிய) திலதம் (குங்குமத் திலகம்) ஆய் (போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க)
கோதையர் (மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும்) சூழ (அவளைச் சுற்றி) குவிந்திடும் (ஒன்றாக கூடி இருப்பதை) காணுமே (சாதகரால் தரிசிக்க முடியும்).

விளக்கம்:

பாடல் #1413 இல் உள்ளபடி குழந்தை போல இருக்கின்ற இறைவிக்கு சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கின்றது. அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கின்றார். இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு அழகாக பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாக கூடி இருப்பதை சாதகரால் தரிசிக்க முடியும்.

பாடல் #1415

பாடல் #1415: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

குவிந்தன சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
யிருந்தனர் காணு மிடம்பல கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குவிநதன சததிகள முபபத திருவர
நடநதனர கனனிகள நாலெணமர சூழப
பரநதித ழாகிய பஙகயத துளளெ
யிருநதனர காணு மிடமபல கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்
நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழ
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே.

பதப்பொருள்:

குவிந்தனர் (இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) முப்பத்து (முப்பதும்) இருவர் (இரண்டும் கூட்டி மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள்)
நடந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகள்) நால் (நான்கு திசைகளுக்கும்) எண்மர் (எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களும்) சூழ (இறைவியைச் சுற்றி இருந்து)
பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து) இதழ் (இதழ்களாக) ஆகிய (இருக்கின்ற இறைவியின் செயல்களாகவும்) பங்கயத்து (தாமரை மலரான இறைவியோடு அதற்கு) உள்ளே (உள்ளேயும்)
இருந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இருப்பதை) காணும் (சாதகர் தமக்குள் தரிசிக்க முடியும்) இடம் (அவர்கள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற இடமாக) பல (பலவித இடங்களிலும்) கொண்டே (இருந்து கொண்டு புரிகின்ற அனைத்து செயல்களையும்).

விளக்கம்:

பாடல் #1414 இல் உள்ளபடி இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக நான்கு திசைகளுக்கும் எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களாக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள். தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக சேர்ந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்து செயல்களையும் சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும்.

பாடல் #1416

பாடல் #1416: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமா
மின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணடங கிருநதனர கூதத னொழியினைக
கணடங கிருநதனர காரணத துளளது
பணடை மறைகள பரநதெஙகுந தெடுமா
மினறென மனததுளளெ யிலலடைந தாளுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள் அது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆம்
இன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே.

பதப்பொருள்:

கொண்டு (உலக செயல்களை புரிந்து கொண்டு) அங்கு (பலவிதமான இடங்களில்) இருந்தனர் (இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும்) கூத்தன் (ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின்) ஒளியினை (பேரொளி வடிவத்தையே)
கண்டு (தரிசித்துக் கொண்டு) அங்கு (அந்தந்த இடங்களில்) இருந்தனர் (இருந்து) காரணத்து (உலக நன்மைக்கான காரணத்திற்காக) உள் (இறைவிக்கு உள்ளே இருந்து) அது (அவற்றை செயல் பட வைக்கின்றனர்)
பண்டை (ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால்) மறைகள் (அருளப்பட்ட வேதங்களை) பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று) எங்கும் (அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில்) தேடும் (இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு) ஆம் (உதவியும் புரிகின்றனர்)
இன்று (இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது) என் (இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின்) மனத்து (மனதிற்கு) உள்ளே (உள்ளே இருந்து) இல் (அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு) அடைந்து (அவருக்குள் வீற்றிருந்து) ஆளுமே (சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1415 இல் உள்ளபடி உலக செயல்களை புரிந்து கொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும் ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக் கொண்டு அந்தந்த இடங்களில் இருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளே இருந்து அவற்றை செயல் பட வைக்கின்றனர். ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால் அருளப்பட்ட வேதங்களை அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில் இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகின்றனர். இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளே இருந்து அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்.

பாடல் #1417

பாடல் #1417: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இல்லடைந் தாளுக்கு மில்லாத தொன்றில்லை
யில்லடைந் தானுக் கிறப்பது தானில்லை
யில்லடைந் தானுக் கிமையவர் தானொவ்வர்
ரில்லடைந் தானுக்கு மில்லாதில் லானையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலலடைந தாளுககு மிலலாத தொனறிலலை
யிலலடைந தானுக கிறபபது தானிலலை
யிலலடைந தானுக கிமையவர தானொவவர
ரிலலடைந தானுககு மிலலாதில லானையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இல் அடைந்தாளுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இறப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தான் ஒவ்வர்
இல் அடைந்தானுக்கும் இல்லாது இல் ஆனையே.

பதப்பொருள்:

இல் (சாதகரின் உள்ளத்தையே கோயிலாக) அடைந்தாளுக்கும் (கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு) இல்லாதது (இல்லாதது என்ற எந்த) ஒன்று (ஒன்றுமே) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இறப்பது (இனி இறப்பது) தான் (என்கிற நிகழ்வு) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இமையவர் (கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள்) தான் (அனைவரும்) ஒவ்வர் (சரிசமம் ஆவார்கள்)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கும் (உள்ளத்தை அடைந்த சாதகருக்கும்) இல்லாது (இல்லாத) இல் (இடம் என்று எதுவும் இல்லை) ஆனையே (இறைவன் வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட ஆன்மாவுக்கு).

விளக்கம்:

பாடல் #1416 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்தையே கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்ற எந்த ஒன்றுமே இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார்கள். இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும் இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.