பாடல் #1788

பாடல் #1788: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானென நீயென வேறில்லை நண்ணுத
லூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானென நீயென வெறிலலை நணணுத
லூனென வுனனுயி ரெனன வுடலநினறு
வானென வானவர நினறு மனிதரகள
தெனென வினபந திளைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என உள் உயிர் என்ன உடல் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

நான் (நான்) என (என்றும்) நீ (நீ) என (என்றும்) வேறு (வேறு வேறாக) இல்லை (இல்லாமல்) நண்ணுதல் (உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும்)
ஊன் (தசைகள்) என (ஆகவும்) உள் (உள்ளே இருக்கின்ற) உயிர் (உயிர்) என்ன (ஆகவும் இந்த இரண்டும் சேர்ந்த) உடல் (உடலாகவும்) நின்று (நின்று)
வான் (ஆகாயம்) என (ஆகவும்) வானவர் (அதில் இருக்கின்ற தேவர்களாகவும்) நின்று (நின்று) மனிதர்கள் (மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல்)
தேன் (மாயையில் மயங்கி அந்த மயக்கமே) என (உண்மை என்று நினைத்து) இன்பம் (சிற்றின்ப) திளைக்கின்ற (ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல் உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல், மாயையில் மயங்கி அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்.

பாடல் #1789

பாடல் #1789: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மில்லை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மிலலை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாரும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

அவனும் (இறைவனும்) அவனும் (அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும்) அவனை (உண்மையான பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்வதில்லை)
அவனை (இறைவனை) அறியில் (மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும்) அறிவாரும் (அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது) இல்லை (இல்லை)
அவனும் (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய) அவனும் (தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன்) அவனை (இறைவனாக தனக்குள் இருப்பவனை) அறியில் (முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு)
அவனும் (இறைவனும்) அவனும் (உயிராக இருப்பவனும்) அவன் (இறைவனே) இவன் (தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக) ஆமே (வீற்றிருப்பான்).

விளக்கம்:

இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான்.

பாடல் #1790

பாடல் #1790: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானிது தானென நின்றில னாடோறு
மூனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகிற் போற்பொழி வானுள
னானிது வம்பர நாதனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானிது தானென நினறில னாடொறு
மூனிது தானுயிர பொலுணர வானுளன
வானிரு மாமுகிற பொறபொழி வானுள
னானிது வமபர நாதனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் இது தான் என நின்று இலன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.

பதப்பொருள்:

நான் (நான்) இது (இறைவன்) தான் (தான்) என (என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே) நின்று (நின்று) இலன் (இருக்காமல்) நாள் (தினந்) தோறும் (தோறும்)
ஊன் (தனது உடலாக) இது (இருப்பதே இறைவன்) தான் (தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது) உயிர் (தனது உயிர்) போல் (போல் இருக்கின்றவன் இறைவனே) உணர்வான் (என்பதை உணர்ந்து) உளன் (கொள்கின்றான்)
வான் (அப்போது வானத்தில்) இரு (இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டம்) போல் (மழையாகப் பொழிவதைப் போல) பொழிவான் (தமது பேரருளை மழையாகப் பொழிபவன்) உளன் (தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான்)
நான் (அதன் பிறகு தாமாக இருக்கின்ற) இது (இறைவனே) அம்பர (ஆகாயத்தில்) நாதனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்).

விளக்கம்:

பாடல் #1789 இல் உள்ளபடி நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்.

பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.