பாடல் #1378

பாடல் #1378: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பரந்தி ருந்துள்ளே யறுப்பது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையில் மலரவை யேந்திச்
சிறந்தவ ரேத்துஞ் சிறீதன மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரநதி ருநதுளளெ யறுபபது சததி
கரநதன கனனிக ளபபடி சூழ
மலரநதிரு கையில மலரவை யெநதிச
சிறநதவ ரெததுஞ சிறிதன மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரந்து இருந்து உள்ளே அறுப்பது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இரு கையில் மலர் அவை ஏந்தி
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.

பதப்பொருள்:

பரந்து (அனைத்திலும் பரந்து விரிந்து) இருந்து (இருக்கின்ற இறைவியானவள்) உள்ளே (சாதகருக்கு உள்ளிருந்து) அறுப்பது (அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற) சத்தி (சக்தியாக இருக்கின்றாள்)
கரந்தன (அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற) கன்னிகள் (அறுபத்து நான்கு சக்திகளும்) அப்படி (சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச்) சூழ (சுற்றி இருந்து)
மலர்ந்து (மலர்ந்து இருக்கின்ற) இரு (தங்களின் இரண்டு) கையில் (கைகளிலும்) மலர் (தாமரை மலர்களை) அவை (பல விதங்களில்) ஏந்தி (ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்)
சிறந்தவர் (இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள்) ஏத்தும் (போற்றி வணங்குகின்ற) சிறீம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின்) தனம் (பலனாகவே) ஆமே (இறைவி இருக்கின்றாள்).

விளக்கம்:

அனைத்திலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்கு உள்ளிருந்து அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற சக்தியாக இருக்கின்றாள். பாடல் #1371 இல் உள்ளபடி அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச் சுற்றி இருந்து பாடல் #1376 இல் உள்ளபடி மலர்ந்து இருக்கின்ற தங்களின் இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை பல விதங்களில் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள் போற்றி வணங்குகின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின் பலனாகவே இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1379

பாடல் #1379: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மறிக்கிலோ ராண்டிற்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிடச் செய்தி யதாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனமது வாகிய தையலை நொககி
மனமது வொடி மறிககிலொ ராணடிற
கனமவை யறறுக கருதிய நெஞசந
தினகர னாரிடச செயதி யதாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மறிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரனார் இட செய்தி அது ஆமே.

பதப்பொருள்:

தனம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் பலனை) அது (அளிக்கின்ற) ஆகிய (சக்தியாகிய) தையலை (சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருக்கின்ற இறைவியை) நோக்கி (நினைத்து)
மனம் (மனதில் இருக்கின்ற) அது (எண்ணங்களை) ஓடி (வெளியில் சென்று விடும்படி செய்து / ஒருமுகப் படுத்தி) மறிக்கில் (எண்ணங்கள் அற்ற நிலையில்) ஓர் (ஒரு) ஆண்டில் (வருடம் தியானத்தில் இருந்தால்)
கனம் (பிறவிக்கு பாரமான) அவை (அனைத்தும்) அற்றுக் (சாதகரை விட்டு நீங்கிவிட) கருதிய (இறைவியையே எண்ணி தியானித்து இருந்த) நெஞ்சம் (சாதகருடைய நெஞ்சத்தில்)
தினகரனார் (இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து) இட (தமது திருவடியை வைத்து அருளுவார்) செய்தி (நவாக்கிரி சக்கரத்தின் தன்மை) அது (இதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1378 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருந்து அதிலுள்ள பீஜ மந்திரங்களின் பலனை அளிக்கின்ற சக்தியாகிய இறைவியை மட்டுமே நினைத்து கொண்டு மனதில் இருக்கின்ற மற்ற எண்ணங்களை எல்லாம் வெளியில் சென்று விடும்படி செய்து எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பிறவிக்கு பாரமான அனைத்தும் சாதகரை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு இறைவியையே எண்ணி தியானித்து இருந்த சாதகருடைய நெஞ்சத்தில் இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து தமது திருவடியை வைத்து அருளுவார். நவாக்கிரி சக்கரத்தின் தன்மை இதுவே ஆகும்.

பாடல் #1380

பாடல் #1380: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற மூலத தெழுநத முழுமலர
பொகினற பெரொளி யாய மலரதாயப
பொகினற பூரண மாக நிறைநதபின
செரகினற செநதழல மணடல மானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர்
போகின்ற பேர் ஒளி ஆய மலர் அது ஆய்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே.

பதப்பொருள்:

ஆகின்ற (நவாக்கிரி சக்கரத்தின்) மூலத்து (சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து) எழுந்த (மேலே எழுந்து வருகின்ற) முழு (முழுமை பெற்ற) மலர் (ஜோதி வடிவான சக்தியானது)
போகின்ற (சாதகரிடமிருந்து வெளிப்பட்டு வரும் போது) பேர் (மிகப் பெரும்) ஒளி (ஒளியாக) ஆய (விரிந்து) மலர் (பேரொளியான மலராகவே) அது (நவாக்கிரி சக்கரத்தின் சக்தியானது) ஆய் (மாறுகின்றது)
போகின்ற (அப்போது அது சென்று பரவுகின்ற அனைத்து இடத்திலும்) பூரணம் (பரிபூரணம்) ஆக (பெற்றதாக) நிறைந்த (முழுவதுமாக நிறைகின்றது) பின் (அதன் பிறகு)
சேர்கின்ற (அனைத்து உயிர்களும் சென்று சேருகின்ற) செந்தழல் (செம்மையான நெருப்பு) மண்டலம் (மண்டலமாகவே) ஆனதே (அந்த பேரொளியான மலர் ஆகி விடுகின்றது).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தின் சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து மேலே எழுந்து வருகின்ற முழுமை பெற்ற ஜோதி வடிவான சக்தியானது சாதகரிடமிருந்து வெளிப்பட்டு வரும் போது மிகப் பெரும் ஒளியாக விரிந்து நவாக்கிரி சக்கரத்தின் சக்தியே பேரொளியான மலராக மாறுகின்றது. அப்போது அது சென்று பரவுகின்ற அனைத்து இடத்திலும் பரிபூரணமாக முழுவதுமாக நிறைகின்றது. அதன் பிறகு பேரொளியான மலரில் பரிபூரணமான இந்த சக்தியானது அனைத்து உயிர்களும் சென்று சேருகின்ற நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாகவே ஆகி விடுகின்றது.

கருத்து:

நவாக்கிரி சக்கர சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரிடமிருந்து வெளிவரும் ஜோதி வடிவமான சக்தியானது அண்ட சராசரங்களுக்கும் பரவுகின்ற பேரொளியான மலராக விரிகின்றது. அப்படி விரிந்த மலருக்குள் இருக்கும் சக்தியானது மகரந்தத்தால் வண்டுகளை ஈர்ப்பது போல தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாக இருக்கின்றது.

பாடல் #1381

பாடல் #1381: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆகின்ற மண்டலத் துள்ளே யமைந்தவ
ளாகின்ற வத்தனி நாயகி யானவ
ளாகின்ற வைம்பத் தறுசத்தி நேர்தரு
வாகின்ற வைம்பத் தறுவகை சூழவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற மணடலத துளளெ யமைநதவ
ளாகினற வததனி நாயகி யானவ
ளாகினற வைமபத தறுசததி நெரதரு
வாகினற வைமபத தறுவகை சூழவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற மண்டலத்து உள்ளே அமைந்தவள்
ஆகின்ற அத் தனி நாயகி ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர் தரு
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே.

பதப்பொருள்:

ஆகின்ற (நன்மை செய்கின்ற நெருப்பு) மண்டலத்து (மண்டலத்தின்) உள்ளே (நடுவில்) அமைந்தவள் (வீற்றிருக்கின்ற இறைவியானவள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) அத் (அவளே) தனி (தனி ஒருவளாகவும்) நாயகி (தலைவியாகவும்) ஆனவள் (இருக்கின்றாள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) ஐம்பத்து (ஐந்து பத்தும்) அறு (ஆறும் கூட்டி மொத்தம் ஐம்பத்தாறு) சத்தி (சக்திகளும்) நேர் (இறைவிக்கு இணையான) தரு (அருளைத் தருபவர்களாக இருக்கின்றார்கள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) ஐம்பத்து (ஐந்து பத்தும்) அறு (ஆறும் கூட்டி மொத்தம் ஐம்பத்தாறு) வகை (வகையான சக்திகளும்) சூழவே (நடுவில் வீற்றிருக்கும் இறைவியை சுற்றியே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1380 இல் உள்ளபடி தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலத்திற்கு உள்ளே நடுவில் வீற்றிருக்கின்ற இறைவியானவள் அவளே தனி ஒருவளாகவும் தலைவியாகவும் அந்த நெருப்பு மண்டலமாகவும் இருக்கின்றாள். பாடல் #1371 இல் உள்ளபடி இறைவியின் அம்சமாக எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். எட்டு வகையாக இருக்கின்ற சக்திகளில் வகைக்கு ஒருவராக மொத்தம் எட்டு சக்திகளும் இறைவியோடு சேர்ந்திருக்க மீதமுள்ள ஐம்பத்து ஆறு சக்திகளும் இறைவிக்கு இணையான அருளைத் தருபவர்களாக அவளைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #1382

பாடல் #1382: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
யாங்கணி முத்த மழகிய மேனியுந்
தாங்கிரு கையவை தார்கிளி ஞானமா
யேந்து கரங்க ளெடுத்தமா பாசமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சூழநதெழு சொதி சுடரமுடி பாதமா
யாஙகணி முதத மழகிய மெனியுந
தாஙகிரு கையவை தாரகிளி ஞானமா
யெநது கரஙக ளெடுததமா பாசமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதம் ஆய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கி இரு கை அவை தார் கிளி ஞானம் ஆய்
ஏந்து கரங்கள் எடுத்த மா பாசமே.

பதப்பொருள்:

சூழ்ந்து (ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்து இருக்கின்ற இறைவியானவள்) எழு (மேலெழுந்து பரவுகின்ற) சோதி (மாபெரும் ஜோதி வடிவில்) சுடர் (ஜோதியின் சுடரானது) முடி (தலையாகவும்) பாதம் (ஜோதியின் அடிப்பாகமானது திருவடிகளாகவும்) ஆய் (கொண்டு)
ஆங்கு (ஜோதியின் நடுப்புறப் பகுதியே) அணி (அணிகலனாகிய) முத்தம் (முத்துக்கள் போலவும்) அழகிய (பேரழகு கொண்ட) மேனியும் (திருமேனியாகவும் கொண்டு)
தாங்கி (தாங்கி இருக்கின்ற) இரு (தனது இரண்டு) கை (திருக்கரங்களில்) அவை (ஏந்தி இருப்பவை) தார் (மலர்கொத்தின் மீது அமர்ந்திருக்கும்) கிளி (கிளியாகவும்) ஞானம் (உண்மையான ஞானத்தைக் கொடுக்கும் சின் முத்திரை) ஆய் (ஆகவும் வைத்திருக்கின்றாள்)
ஏந்து (மேல் புறமாக ஏந்தி இருக்கின்ற) கரங்கள் (தனது இரண்டு திருக்கரங்களில்) எடுத்த (அவள் எடுத்து வைத்திருப்பது) மா (ஆணவத்தை அழிக்கின்ற அங்குசமும்) பாசமே (பாசத்தை அறுக்கின்ற கயிறும் ஆகும்).

விளக்கம்:

பாடல் #1381 இல் உள்ளபடி ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்து இருக்கின்ற இறைவியானவள் மேலெழுந்து பரவுகின்ற மாபெரும் ஜோதி வடிவில் ஜோதியின் சுடரே தனது தலையாகவும் ஜோதியின் அடிப்பாகமே தனது திருவடிகளாகவும் கொண்டு இருக்கின்றாள். ஜோதியின் நடுப்புறப் பகுதியே அணிகலனாகிய முத்துக்கள் போலவும் பேரழகு கொண்ட திருமேனியாகவும் கொண்டு இருக்கின்றாள். அவள் தனது இரண்டு திருக்கரங்களிலும் மலர்கொத்தின் மீது அமர்ந்திருக்கும் கிளியையும் உண்மையான ஞானத்தைக் கொடுக்கும் சின் முத்திரையையும் தாங்கி இருக்கின்றாள். மேல் புறமாக ஏந்தி இருக்கின்ற தனது இரண்டு திருக்கரங்களில் ஆணவத்தை அழிக்கின்ற அங்குசத்தையும் பாசத்தை அறுக்கின்ற கயிறையும் வைத்து இருக்கின்றாள்.

பாடல் #1383

பாடல் #1383: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைந்திடு மும்முளே
நாசம தெல்லா நடந்திடு மையாண்டிற்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசம தாகிய வெரை யறுததிடடு
நெசம தாக நினைநதிடு முமமுளெ
நாசம தெலலா நடநதிடு மையாணடிற
காசினி மெலமர கணணுத லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு
நேசம் அது ஆக நினைத்து இடும் உம் உள்ளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.

பதப்பொருள்:

பாசம் (பாசம் என்கிற) அது (உலகப் பற்றுக்கள்) ஆகிய (ஆக இருக்கின்ற ஆசையை) வேரை (வேரோடு) அறுத்து (அறுத்து) இட்டு (எறிந்து விட்டு)
நேசம் (உண்மையான அன்பையே) அது (சிவம்) ஆக (என்று) நினைத்து (நினைத்துக் கொண்டு) இடும் (வைத்து) உம் (சாதகர் தமக்கு) உள்ளே (உள்ளேயே தியானித்து இருந்தால்)
நாசம் (தீமையானது) அது (என்று உலகத்தில் இருக்கின்ற) எல்லாம் (அனைத்தும்) நடந்திடும் (சாதகரை விட்டு விலகி விடும்) ஐ (ஐந்து) ஆண்டில் (ஆண்டுகளில்)
காசினி (பூமிக்கு) மேல் (மேலாக) அமர் (அமர்ந்திருக்கின்ற சாதகர்) கண் (ஞானக் கண்ணை) நுதல் (நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே) ஆகுமே (ஆகிவிடுவார்).

விளக்கம்:

பாடல் #1382 இல் உள்ளபடி இறைவியானவள் தனது திருக்கரங்களில் ஏந்தி இருக்கும் பாசம் என்கிற கயிறாக இருக்கின்ற உலகப் பற்றுக்கள் எனும் ஆசையை வேரோடு அறுத்து எறிந்து விட்டு உண்மையான அன்பையே சிவமாக நினைத்துக் கொண்டு சாதகர் தமக்கு உள்ளே சிவமான அன்பையே வைத்து தியானித்து இருக்க வேண்டும். அப்படி தியானித்து இருந்தால் ஐந்து ஆண்டுகளில் தீமையானது என்று உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு பூமிக்கு மேலாக அமர்ந்திருக்கின்ற சாதகர் ஞானக் கண்ணை நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே ஆகிவிடுவார்.

பாடல் #1384

பாடல் #1384: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுயர் நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்கிடி றீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணணுடை நாயகி தனனரு ளாமவழி
பணணுயர நாதம பகையற நினறிடில
விணணமர சொதி விளஙகிடி றீஙகார
மணணுடை நாயகி மணடல மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண் உயர் நாதம் பகை அற நின்று இடில்
விண் அமர் சோதி விளங்க இடில் ஹ்ரீம் காரம்
மண் உடை நாயகி மண்டலம் ஆகுமே.

பதப்பொருள்:

கண் (ஞானக் கண்ணை) உடை (நெற்றியில் உடைய) நாயகி (இறைவியானவள்) தன் (தனது) அருள் (திருவருளால்) ஆம் (அருளிய) வழி (வழியின் படியே நடந்து)
பண் (இசைகளிலே) உயர் (உயர்வான) நாதம் (நாதமாகிய இறைவனை) பகை (அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள்) அற (இல்லாமல்) நின்று (தமக்குள்) இடில் (வைத்து இருந்தால்)
விண் (விண்ணுலகத்தில்) அமர் (வீற்றிருக்கும்) சோதி (பேரொளியான இறைவன்) விளங்க (தமக்குள் வீற்றிருக்கும் படி) இடில் (சாதகர் வைத்து) ஹ்ரீம் (‘ஹ்ரீம்’ எனும்) காரம் (பீஜத்திலேயே தியானித்து இருந்தால்)
மண் (பூமியை) உடை (உடையவளாகிய) நாயகி (இறைவியின்) மண்டலம் (சக்தி மண்டலமாகவே) ஆகுமே (சாதகரைச் சுற்றி இருக்கும்).

விளக்கம்:

பாடல் #1383 இல் உள்ளபடி தனது நெற்றியில் ஞானக் கண்ணை உடைய இறைவியானவளின் திருவருளால் அருளிய வழியின் படியே நடந்து இசைகளிலே உயர்வான நாதமாகிய இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள் இல்லாமல் தமக்குள் வைத்து இருந்தால் விண்ணுலகத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவன் தமக்குள் வீற்றிருக்கும் படி சாதகர் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்திலேயே தியானித்து இருந்தால் பூமியை உடையவளாகிய இறைவியின் சக்தி மண்டலமாகவே சாதகரைச் சுற்றி இருக்கும்.

பாடல் #1385

பாடல் #1385: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலாற்
றண்டகத் துள்ளவை தாங்கலு மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மணடலத துளளெ மலரநதெழு தீபததைக
கணடகத துளளெ கருதி யிருநதிடும
விணடகத துளளெ விளஙகி வருதலாற
றணடகத துளளவை தாஙகலு மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

பதப்பொருள்:

மண்டலத்து (சாதகரைச் சுற்றி இருக்கின்ற சக்தி மண்டலத்தின்) உள்ளே (உள்ளிருந்து) மலர்ந்து (மலர் போல விரிந்து) எழு (எழுகின்ற) தீபத்தை (ஜோதியை)
கண்டு (தரிசித்து) அகத்து (அதைத் தமக்கு) உள்ளே (உள்ளே வைத்து) கருதி (அந்த ஜோதியும் தானும் வேறு வேறு இல்லை எனும் எண்ணத்திலேயே) இருந்திடும் (தியானத்தில் வீற்றிருந்தால்)
விண்டு (பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில்) அகத்து (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) உள்ளே (தமக்கு உள்ளேயே) விளங்கி (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) வருதலால் (கிடைக்கப் பெறுவதால்)
தண்டு (அதன் பிறகு சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கின்ற சுழுமுனை நாடியின்) அகத்து (அடியிலிருந்து உச்சி வரை இருக்கின்ற இடத்திற்கு) உள் (உள்ளேயே) அவை (பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும்) தாங்கலும் (தாங்கிக் கொண்டு வீற்றிருக்கின்ற இயல்பை) ஆமே (சாதகர் அடைந்து விடுவார்).

விளக்கம்:

பாடல் #1384 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றி இருக்கின்ற சக்தி மண்டலத்தின் உள்ளிருந்து மலர் போல விரிந்து எழுகின்ற ஜோதியை தரிசித்து அதைத் தமக்கு உள்ளே வைத்து அந்த ஜோதியும் தானும் வேறு வேறு இல்லை எனும் எண்ணத்திலேயே தியானத்தில் வீற்றிருந்தால் பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தமக்கு உள்ளேயே தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி கிடைக்கப் பெறும். அதன் பிறகு சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கின்ற சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சி வரை இருக்கின்ற இடத்திற்கு உள்ளேயே பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தாங்கிக் கொண்டு வீற்றிருக்கின்ற இயல்பை சாதகர் அடைந்து விடுவார்.

பாடல் #1386

பாடல் #1386: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாங்கிய நாவித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்ளுணர் வானவ
ளேங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய னாதம் வலியுட னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகிய நாவித தடமலர மணடலத
தொஙகி யெழுஙகலைக குளளுணர வானவ
ளெஙக வருமபிறப பெணணி யறுததிட
வாஙகிய னாதம வலியுட னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்கிய நாவி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்கு உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

பதப்பொருள்:

தாங்கிய (ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற) நாவி (சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின்) தட (தாமரை) மலர் (மலர் போன்ற) மண்டலத்து (மண்டலத்தில் இருந்து)
ஓங்கி (வேகமாக மேலே) எழும் (எழுந்து வரும்) கலைக்கு (நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு) உள் (உள்ளே இருக்கின்ற) உணர்வு (உணர்வு வடிவமாக) ஆனவள் (இருக்கின்ற இறைவியானவளை)
ஏங்க (இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து) வரும் (இனிமேல் வருகின்ற) பிறப்பு (பிறப்புகளை எல்லாம்) எண்ணி (இறைவியையே எண்ணி இருந்து) அறுத்திட (அறுத்து விட)
வாங்கிய (அதன் பிறகு சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த) நாதம் (நாத வடிவான இறைவன்) வலியுடன் (மிகவும் வலிமையுடன்) ஆகுமே (வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1385 இல் உள்ளபடி பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின் தாமரை மலர் போன்ற மண்டலத்தில் இருந்து வேகமாக மேலே எழுந்து வரும் நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு உள்ளே இருக்கின்ற உணர்வு வடிவமாக இருக்கின்ற இறைவியானவளை இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து இனிமேல் வருகின்ற பிறப்புகளை எல்லாம் இறைவியையே எண்ணி இருந்து அறுத்து விட வேண்டும். அதன் பிறகு பாடல் #1383 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த நாத வடிவான இறைவன் மிகவும் வலிமையுடன் வீற்றிருப்பார்.

பாடல் #1387

பாடல் #1387: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நாவுக்கு நாயகி நன்மணிப் பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாள்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்த
ளாவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாவுககு நாயகி நனமணிப பூணாரம
பூவுககு நாயகி பொனமுடி யாடையாள
பாவுககு நாயகி பாலொதத வணணதத
ளாவுககு நாயகி யஙகமரந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆள்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.

பதப்பொருள்:

நாவுக்கு (நாக்கிற்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு) நாயகி (தலைவியான இறைவி) நல் (நல்ல / நன்மையைக் கொடுக்கும்) மணி (நவரத்தினங்களை / பிரகாசத்தினால் ஈர்க்கின்ற) பூண் (பதித்து இருக்கும் / தேஜஸை) ஆரம் (மாலையை அணிந்து இருக்கின்றாள் / கொண்டு விளங்குகின்றாள்)
பூவுக்கு (மலர் வடிவான / போல மென்மையான சக்கரத்திற்கு) நாயகி (தலைவியான இறைவி) பொன் (தங்கம் போல் தகதகக்கும் / சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக) முடி (தலை முடியிலிருந்து கீழ் வரை) ஆடை (ஆடையை / சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக) ஆள் (அணிந்து இருக்கின்றாள் / வெளிப்பட்டு வருவாள்)
பாவுக்கு (பாடல்களுக்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின்) நாயகி (தலைவியான இறைவி) பால் (பாலைப் / சாதகரின் சாதகத் தன்மைக்கு) ஒத்த (போன்ற / ஏற்ற) வண்ணத்தள் (வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள் / விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள்)
ஆவுக்கு (ஆன்மாவிற்கு) நாயகி (தலைவியான அவளே) அங்கு (சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே) அமர்ந்தாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

நாக்கிற்கு தலைவியான இறைவி நல்ல நவரத்தினங்களை பதித்து இருக்கும் மாலையை அணிந்து இருக்கின்றாள். மலர் வடிவான சக்கரத்திற்கு தலைவியான இறைவி தலை முடியிலிருந்து கீழ் வரை தங்கம் போல் தகதகக்கும் ஆடையை அணிந்து இருக்கின்றாள். பாடல்களுக்கு தலைவியான இறைவி பாலைப் போன்ற வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.

உட் கருத்து:

நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு தலைவியான இறைவி நன்மையைக் கொடுக்கும் பிரகாசத்தினால் ஈர்க்கின்ற தேஜஸை கொண்டு விளங்குகின்றாள். மலர் போல மென்மையான சக்கரத்திற்கு தலைவியான இறைவி சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக தலை முடியிலிருந்து கீழ் வரை சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக வெளிப்பட்டு வருவாள். நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின் தலைவியான இறைவி சாதகரின் சாதகத் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.