பாடல் #1654

பாடல் #1654: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

நாடு முறவுங் கலந்தெங்க ணந்தியைத்
தேடுவன் றேடிச் சிவபெருமா னென்று
கூடுவன் கூடிக் குரைகழற்கே செல்ல
வீடு மளவும் விடுகின்றி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாடு முறவுங கலநதெஙக ணநதியைத
தெடுவன றெடிச சிவபெருமா னெனறு
கூடுவன கூடிக குரைகழறகெ செலல
வீடு மளவும விடுகினறி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை
தேடுவன் தேடி சிவ பெருமான் என்று
கூடுவன் கூடி குரை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்று இலேனே.

பதப்பொருள்:

நாடும் (எண்ணத்தில்) உறவும் (அன்பை) கலந்து (கலந்து) எங்கள் (எங்களின்) நந்தியை (குருநாதனாகிய இறைவனை)
தேடுவன் (தேடிக் கொண்டே இருப்பேன்) தேடி (தேடி அடையும் போது) சிவ (அவனே அனைத்திற்கும் மேலான சிவப்) பெருமான் (பரம் பொருள்) என்று (என்று அறிந்து)
கூடுவன் (அவனோடு சேர்ந்து கொள்வேன்) கூடி (அப்போது அவனது திருவருளும் என்னோடு சேர்ந்து கொள்ள) குரை (அவனுடைய பேரழகு வாய்ந்த) கழற்கே (திருவடிக்கே) செல்ல (சென்று விட வேண்டும் என்று உறுதியாகப் பற்றிக் கொண்டு)
வீடும் (அவனோடு இரண்டறக் கலக்கின்ற) அளவும் (காலம் வரும் வரையில்) விடுகின்று (அவனுடைய திருவடிகளை விட்டு விட) இலேனே (மாட்டேன்).

விளக்கம்:

எண்ணத்தில் அன்பை கலந்து எங்களின் குருநாதனாகிய இறைவனை தேடிக் கொண்டே இருப்பேன். தேடி அடையும் போது அவனே அனைத்திற்கும் மேலான சிவப் பரம் பொருள் என்று அறிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன். அப்போது அவனது திருவருளும் என்னோடு சேர்ந்து கொள்ள அவனுடைய பேரழகு வாய்ந்த திருவடிக்கே சென்று விட வேண்டும் என்று உறுதியாகப் பற்றிக் கொண்டு அவனோடு இரண்டறக் கலக்கின்ற காலம் வரும் வரையில் அவனுடைய திருவடிகளை விட்டு விட மாட்டேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.