பாடல் #356

பாடல் #356: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சேஅங்கி யுள்நாளும் உள்ளிட்டு
அப்பரி சேஆகி அலர்ந்திருந் தானே.

விளக்கம்:

தக்கன் செய்த யாகத்தில் அவிர்பாகத்தைப் பரிசாகப் பெற்ற பிரம்மன் திருமால் மற்றும் அனைத்து தேவர்களும் இறைவனே தாமாக இருக்கும் காரணத்தை அறிந்து தமது அறியாமையால் பிழை செய்துவிட்டோமே என்று வருந்தி அவனது திருவருளை வேண்டி நின்றனர். அக்கினிதேவனும் தமக்குள் தீயாகவும் ஒளியாகவும் வெப்பமாகவும் என்னாளும் இருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனது திருவருளை வேண்டி நின்றான். அவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவனும் அனைவரின் பிழைகளை மன்னித்து ஒளிமயமாகி எங்கும் வியாபித்து இருந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளிலும் அணுவாய் கலந்திருக்கும் இறைவன் உயிர்கள் தன் தவறை உணரும் போது அவர்களை மன்னித்து அருள்செய்வான்.

Related image

பாடல் #357

பாடல் #357: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.

விளக்கம்:

பாடல் #356 ல் உள்ளபடி அனைவரின் பிழைகளை மன்னித்து எங்கும் ஒளிமயமாகி வியாபித்து இருக்கும் சிவபெருமானை வானவர்கள் வணங்க அழுக்குகளையெல்லாம் எரித்து எதையும் தூய்மையாக்கும் அக்கினி தக்கன் யாகத்தில் கலந்து கொண்டு தூய்மை கெட்டதால் தன் குற்றம் நீங்க சிவனின் திருவடிகளை பற்றிக்கொள்ள சிவனும் அன்போடு அக்னிக்கு அருள் செய்ய ஓடிவந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு அந்த தவறில் அணுவாய் கலந்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினைத்து உள்ளத்தில் பற்றிக்கொள்ள இறைவன் அன்போடு அவர்களுக்கு அருள் செய்ய ஒடிவருவான்.

Related image

பாடல் #358

பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

விளக்கம்:

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.

உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.

Related image

பாடல் #359

பாடல் #359: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

விளக்கம்:

இறைவனுக்காக மந்திரங்களை செபித்து இறையருள் பெற்ற தேவர்கள் தக்கனின் யாகத்தில் இறையருள் இல்லாத மந்திரங்களை சொல்லி தங்களுக்குப் பெரும் பொருள் கிடைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்து செய்து குவித்த மந்திரங்கள் இறைவனது அருள் பெறாமல் செய்யப்பட்டமையால் அவர்களையே கொல்லும் கொடிய மந்திரங்களாக மாறிவிட்டன.

உட்கருத்து: உயிர்கள் வேள்வி போல் செய்யும் செயல்கள் யாவும் இறையருளுடன் செய்தால் அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் உலக ஆசைக்காக இறையருள் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு தீமைகளையே செய்யும்.

பாடல் #360

பாடல் #360: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

விளக்கம்:

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்து தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ தயைகூர்ந்து அருள் புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமானும் கருணைகொண்டு உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

உட்கருத்து: உயிர்கள் எந்த செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து அவனது திருவருளை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு இறை அருள் பெற்று செய்தால் எத்தகைய வேலையையும் செய்யத்தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் உயிர்களுக்கு அருளுவான்.

Related image

பாடல் #347

பாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.

விளக்கம்:

ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.

உட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.

Related image

பாடல் #348

பாடல் #348: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

விளக்கம்:

எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

Related image

பாடல் #349

பாடல் #349: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.

விளக்கம்:

கடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.

உட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.

இதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் தொழிலை செய்துள்ளார்கள்.

Related image

பாடல் #339

முன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.

பாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

விளக்கம்:

கருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.

உட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.

மனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.

Related image

பாடல் #340

பாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

விளக்கம்:

பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.

Related image