பாடல் #495

பாடல் #495: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தன்
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் இரண்டாவதாக இருக்கும் மெய்பிரளய அகலர் அனைவரும் பிரளயகாலப் பேரழிவில் முக்தியைப் பெறுபவர்கள். ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலங்களை மட்டும் கொண்டிருக்கும் இவர்கள் அபக்குவர் பரமுத்தர் அபரமுத்தர் என்ற பெயருடன் இருக்கின்றனர். அபக்குவர் பரமுத்தர் என்கிற இரண்டு வகையாக 54- 54 என்ற எண்ணிக்கையில் நூற்று எட்டு உருத்திரர்களாக இருக்கின்றனர். அபரமுக்தர் ஒரு வகையாகவும் மொத்தம் மூன்று வகைகளாக இருக்கின்றனர். பாடல் #494ல் உள்ள விஞ்ஞானர். இந்த பாடலில் கூறிய மெய்பிரளய அகலர் ஆகிய இரு வகையில் இல்லாத மற்ற அனைவரும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர் ஆவார்கள்.

அபரமுக்தர் விளக்கம்:

இவர்கள் ஞானம் அடைந்து உலகத்தில் படைத்தல் மறைத்தல் காத்தல் அருளல் அழித்தல் ஆகிய இறைவனின் தொழில்களை செய்து பிறவி இல்லாத நிலையில் ஆணவம், கன்மம் என இரண்டு மலங்களை மட்டுமே கொண்டு பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருக்கும் ஞானிகள் ஆவார்கள்.

பரமுக்தர் விளக்கம்:

உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறப்பதற்கு வானுலகத்தில் இறைவனின் கட்டளைக்காக காத்திருப்பவர்கள் பரமுக்தர் என்கின்ற ஞானிகள் ஆவார்கள். இவர்கள் 54 வகையான ருந்திரர் என்கின்ற பதவியில் இருக்கின்றார்கள்

அபக்குவர் விளக்கம்:

உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறந்து அனைத்து உயிர்களோடு வாழ்ந்து வருபவர்கள் அபக்குவர் என்கின்ற ஞானிகள் ஆவார்கள். இவர்கள் 54 ருந்திரர் வகையான என்கின்ற பதவியில் இருக்கின்றார்கள்

குறிப்பு: பரமுக்தர் அபக்குவர் இருவகையினரும் உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறந்து உயிர்களோடு உயிராக வாழ்ந்து பல நல்கருத்துக்களை கூறி ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர்களை பிறவியில்லா நிலையை அடையச்செய்வதற்கும் இறைவனை உணர்வதற்க்கான காரியத்தையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.