பாடல் #583

பாடல் #583: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருக்கும் துளையை (மலத்துவாரம்) சதைகளால் இறுக்கி அடைத்துக் கொண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் (ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடம்) மனதை வைத்து உடல் உணர்வுகளை மறந்த நிலையில் தியானித்து இருப்பதே இறவாமல் இருக்கும் வழியாகும்.

பாடல் #584

பாடல் #584: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

விளக்கம்:

மலதுவாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலும் பிறப்புறுப்புக்கு இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில் இருக்கும் ஜோதியை (குண்டலினி சக்தி) உணர்ந்து தியானிக்க முடிந்தவர்களோடு உடலுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் கலந்து நிற்பான்.

பாடல் #585

பாடல் #585: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைவதும், தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உணர்வதும் அந்த உணர்வினால் இறைவனின் மேல் அன்பு அதிகமாவதும் அவ்வாறு அதிகமாகிய அன்பினால் இறைவனை எப்பொதும் மறக்காமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

பாடல் #586

பாடல் #586: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

விளக்கம்:

உள்ளிழுத்து வெளியே விட்ட மூச்சுக்காற்றை மீண்டும் உள்ளிழுக்காமல் ஒரு குறிப்பிட்ட கால அளவு (தியான முறைப்படி) மன உறுதியுடன் இருந்தால் உள்ளம் இறைவனின் மேல் ஈர்க்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஈர்க்கப்பட்டு இருக்கும் உள்ளத்துடன் பெருங் கருணையுடைய இறைவன் எப்போதும் கலந்தே இருப்பான்.

பாடல் #587

பாடல் #587: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் கூறும் மூன்று சக்கர இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம்) மனதை ஒருமுகப்படுத்துவன் உலகம் தோன்றிய நாள் முதல் இறைவனை அடையத் தடையாக இருக்கும் மாயை எனும் அறியாமையாகிய இருளை அகற்றி இறைவனை தேடிச் செல்லலாம். அவ்வாறு இறைவனை விரும்பித் தேட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தால் காணக் கிடைக்காத அரிய இறைக் காட்சியைக் கண்டு அழிவில்லாத நிலையை அடையலாம்.

பாடல் #565

பாடல் #565: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

விளக்கம்:

மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

பாடல் #566

பாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

விளக்கம்:

பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.

பாடல் #567

பாடல் #567: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

விளக்கம்:

பிராணாயாமத்தின் மூலமாக சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு நிலைப்படுத்தி மூச்சுக்காற்றை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசத்தின் வழியாகச் செலுத்தி சமாதி நிலையை (தன்னை மறந்த நிலை) அடைந்தால் இனி வேறு பிறப்பின்றி பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.

குறிப்பு: மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்.

மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்.

பாடல் #568

பாடல் #568: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.

விளக்கம்:

ஒரு மடங்கு அளவு (பதினாறு வினாடிகள்) காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்தல் பூரகம் ஆகும். அந்த மூச்சுக்காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (அறுபத்து நான்கு வினாடிகள்) அடக்கி வைத்திருத்தல் கும்பகம் ஆகும். அப்படி அடக்கிய மூச்சுக்காற்றை இரண்டு மடங்கு அளவு (முப்பத்து இரண்டு வினாடிகள்) வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுதல் இரேசகம் ஆகும். இவ்வாறு செய்வதே பிராணாயமம் செய்யும் வழிமுறையாகும். பிராணாயாமத்தை இவ்வாறு சரியாகச் செய்வதால் உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து நற்பண்புகள் கைகூடும். இவ்வாறு செய்யாமல் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக முதலில் இழுத்து இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதல் ஆகும்.

குறிப்பு: பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் இடது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து வலது பக்கம் மூக்குத் துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்ய வேண்டும். முதலில் வலது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து இடது பக்கம் மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்தால் உடலுக்கு தீங்கு உண்டாகும்.

பாடல் #569

பாடல் #569: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

விளக்கம்:

பாடல் #568 இல் உள்ள பிராணாயம முறைப்படி மூச்சுக்காற்றை வயிற்றில் அடக்கி வைத்திருந்தால் உடம்புக்கு அதன் வயதுக்கு ஏற்ப ஏற்படும் முதுமை வெளியே தெரிந்தாலும் உள்ளே முதுமைத் தன்மை சிறிதும் இல்லாமல் இளமையாக பளிங்கு போன்ற வலிமைப் பெற்று இருக்கும். அந்த உணர்வு தெளிவை பெற்று ஞான குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட இலேசாகி மிதக்கும் நிலையை உடல் பெற்றுவிடும்.