பாடல் #391

பாடல் #391: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.

விளக்கம்:

அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி அனைத்திலும் அன்பாகக் கலந்து இருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான். அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனாகவும் அவனே இருக்கின்றேன். அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அதிலிருக்கும் பொருட்களாகவும் அதில் வாழும் உயிர்களாகவும் இருந்து அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.

பாடல் #392

பாடல் #392: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

விளக்கம்:

எல்லாப்பயன்களையும் எளிதில் அளிக்கக் கூடியதும் பேரின்பத்தை வழங்கக் கூடியதும் நம்பிக்கைக்கு உரியதுமான ஒரு மாணிக்ககல் இருக்கிறது. அந்தக் மாணிக்ககல்லே உயிர்களைப் படைக்கும் பிரம்மனுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகிறது. அந்த மாணிக்ககல்லாக இறைவன் இருக்கும் காரணத்தை யாம் அறிந்து தெளிந்து கொண்டோம்.

Related image

பாடல் #375

பாடல் #375: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.

விளக்கம்:

மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி. அவனது அக்னி உருவத்தை ஆராய முற்பட்டு பிரம்மன் இறைவனின் திருமுடியைக் காணவும் திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர். பிரம்மன் மேல் செல்ல செல்ல இறைவனின் திருமுடி மேலே வளர்ந்து கொண்டே இருக்க திருமால் கீழே செல்ல செல்ல நன்மையை அருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடி கீழே வளர்ந்து கொண்டே இருந்து இருவருக்கும் எதையும் காண இயலவில்லை.

உள்விளக்கம்: இறைவனை உணர்ந்தால் இறைவன் எந்த ரூபத்தில் இருந்தாலும் இறைவனை அறியலாம். இறைவனை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள முயன்றால் அவரை அறிய இயலாது.

பாடல் #376

பாடல் #376: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்புஎய்து மாறே.

விளக்கம்:

இறைவனின் சிவந்த திருவடிகளை போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்று அடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும் இறைவனிடம் அருள் வேண்டி தவமிருக்கும் முனிவர்களும் இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரம்மனும் எவ்வளவு தூரம் தான் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காண இயலாது.

உள்விளக்கம்: தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரம்மா என்று எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும் நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனை தனக்குள் உணராமல் வெளியில் தேடினால் இறைவனை காண இயலாது.

பாடல் #377

பாடல் #377: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கட லூழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.

விளக்கம்:

நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரம்மனும் கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும் ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களின் உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடனே கலந்து இருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்கள் ஆக முடியாது.

Related image

பாடல் #378

பாடல் #378: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வரும்
கோலிங்கு அமைஞ்சருள் கூடலு மாமே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்தலும் இரண்டறக்கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள் உயிர்கள் தம்மை நாடி வந்து சேர பெருங்கருணை கொண்டு உண்மையான வழிமுறைகளை கொடுத்து உலகத்துப்பொருட்கள் எல்லாவற்றிலும் கலந்து உலா வருகிறது. இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளை பின்பற்றினால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

உட்கருத்து: அடிமுடி காண முடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாக இறைவன் காட்டிய நெறி வழிகளைப் பின்பற்றி சென்றால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.

பாடல் #379

பாடல் #379: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பமுங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானதடி சாரகி லாரே.

விளக்கம்:

ஒளிபொருந்திய உடலைக் கொடுத்த இறைவனை வழிபடுகின்ற தேவர்கள் எம்மைப் போல இறைவனிடம் தம்மையே ஒப்படைத்தாலும் இறைவனின் தன்மையை அறிய மாட்டார்கள். இறைவனிடம் தன்னைக் கொடுத்தால் இறைவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னையும் தந்து பேரின்பத்தையும் தருவான். அந்த இன்பத்திலேயே மூழ்கித் தம்மை மறந்துவிடாதபடி வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியையும் தருகிறான் இறைவன். ஆனால் தேவர்கள் யாம் இறைவனின் திருவடியை சார்ந்திருப்பதைப்போல தேவர்கள் இறைவனின் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை.

பாடல் #380

பாடல் #380: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.

விளக்கம்:

ஊழிக்காலம் முடிந்ததும் இறைவனை சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரம்மனின் தொழிலை செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான். புதியதாக பிரம்மனின் தொழில் பெற்ற அடியவரும் இறைவனை நாடி வந்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று அதைத் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும் அவருக்கு படைக்கும் தொழிலைக் கொடுத்து அருளினான்.

குறிப்பு: பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்கள் அனைவருமே பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான். தற்போது இருக்கும் பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த அடியவர்களுக்கு அந்த தொழிலை செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்து அருளுகின்றார்.