பாடல் #1121

பாடல் #1121: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஓதிய வண்ணங் கலையி னுயர்கலை
ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்
சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென் றோதின ளாவின் கிழத்தியே.

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு உலகத்தோர் கற்றுக்கொள்கின்ற அனைத்து கல்விகளுக்கும் மேலான கல்வியாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வேதங்களாக இறைவியே இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர். சாதி, மதம், இனம், குலம் என்கிற பலவிதமான பிரிவினைகளாக பிரிந்து இருக்கும் அனைத்திற்கும் தத்துவமாகவும் அவளே இருக்கின்றாள் என்பதையும் அவளே அனைத்திற்கும் முதல்வியானவள் என்பதையும் ஆன்மாக்களின் தலைவியாகிய இறைவியே எமக்கு ஓதி அருளினாள்.

பாடல் #1122

பாடல் #1122: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடுந்
தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

விளக்கம்:

ஆன்மாக்களின் தலைவியானவளும் எல்லாவித நன்மைகளையும் அருளுகின்ற திரு ஆவடு திருத்தலத்தில் (திருவாவடுதுறை) வீற்றிக்கின்றவளும் உயிர்களின் சொல்லிற்குத் தலைவியானவளும் அவளுடைய நன்மைகளைப் புகழ்ந்து போற்றி பாடி வணங்குகின்றவர்களுக்கு செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகிய முக்தியை அருளுகின்றவளும் சதாசிவமூர்த்தியின் சரிபாதியாக இருக்கும் துணைவியானவளும் அனைத்திலும் பரவி இருக்கின்ற அனைத்திற்கும் தலைவியானவளும் ஆகிய வயிரவி தேவியானவள் தம்மை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்டு அருளினாள்.

குறிப்பு: இத்தலத்தில் தான் திருமூலர் 3000 வருடங்கள் தவமிருந்து திருமந்திரம் பாடல்களை இயற்றினார்.

பாடல் #1123

பாடல் #1123: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைகொண்ட வேந்திழை யீசன்
கணவனைக் காண வனாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1122 இல் உள்ளபடி தன்னை முழுவதுமாக சரணடைகின்ற உயிர்களின் வினைகளை எல்லாம் தடுத்து ஆட்கொண்ட இறைவி அவர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக பரவி இருக்கின்றாள். அவளை முழுவதுமாக சரணடைந்தவர்கள் அனைவருக்கும் உண்மைப் பொருளாகவும் முக்தியை அருளுபவளாகவும் அவளே நிற்கின்றாள். எம்மையும் தடுத்து ஆட்கொண்டு தமது அடிமையாக ஆக்கிக் கொண்ட அந்த இறைவியோடு இறைவனையும் அவளது சரிபாதி துணைவனாகக் கொண்டு பார்த்தால் அவனைப் போலவே அவளுக்கும் தொடக்கம் என்று ஒன்று இல்லாதவளாக இருக்கின்றாள்.

பாடல் #1124

பாடல் #1124: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதி யகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

விளக்கம்:

ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும் தனக்கு என்று ஒரு ஆரம்பம் இல்லாமலும் அனைத்திற்கும் காரணமாகவும் தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும் இருக்கின்றாள். இவளே வேதங்களை ஓதி முறைப்படி யாகம் வளர்க்கின்ற வேதியர்களுக்காக அவர்கள் ஓதுகின்ற வேதங்களின் தன்மையாகவும் பொருளாகவும் வீற்றிருந்து அவர்கள் ஓதுகின்ற முறைகளையும் அவர்களின் எண்ணிய உருவத்தையும் ஆராய்ந்து அவர்கள் வேண்டிய உருவத்திலேயே யாகத்தில் வந்து வீற்றிருந்து அருளுகின்றாள். அவளே அசையா சக்தியான சதாசிவமூர்த்தியின் பன்னிரண்டு அம்சங்களோடு சரிபாதியாக சேர்ந்தே நிற்கின்ற ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

குறிப்பு: ஆதிப் பரம்பொருளாகிய இறைவி உயிர்கள் இறைவனை அடைய முயற்சிக்கும் அனைத்து வகைகளிலும் அவரவர்கள் வேண்டிய உருவத்திலேயே வந்து இறைவனுடன் சரிபாதியாக வீற்றிருந்து அருளுகின்றாள்.

பாடல் #1045

பாடல் #1045: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

விளக்கம்:

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.

குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.

திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:

மாமாயை – வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை – வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் – மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி – முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை – மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி – மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்

பாடல் #1046

பாடல் #1046: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி – பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி – வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை – செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி – நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி – அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

பாடல் #1047

பாடல் #1047: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

தானா யமைந்தவ முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

விளக்கம்:

திரிபுரை சக்தியானது மூன்று புரங்களில் இருக்கும் தேவர்களுக்கும் அவரவர்களின் தன்மைக்கேற்ற உருவங்களைக் கொண்ட தேவியர்களாக தாமாகவே அமைந்திருக்கும். திரிபுரையாக இருக்கும் இந்த சக்தியே பொன் நிறம் கொண்ட லட்சுமியாக இருந்து போகத்தையும், வெண்மை நிறம் கொண்ட சரஸ்வதியாக இருந்து ஞானத்தையும், செம்மையான கருமை நிறம் கொண்ட பார்வதியாக இருந்து மாயையை அழித்து முக்தியையும் அருளும் சக்தியாக இருக்கின்றார்கள்.

பாடல் #1048

பாடல் #1048: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1047 இல் உள்ளபடி அருளுகின்ற திரிபுரை சக்தியானது ஒலியாகவும் அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கின்றது. திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகின்றது. இந்த ஒலி ஒளியாக இருக்கும் திரிபுரையே அனைத்தையும் அருளுபவளாகவும் பேரழகு மிகுந்தவளாகவும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கின்றாள்.

கருத்து: பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இந்த மூன்று சக்தி வடிவங்களும் திரிபுரையாகும்.

பாடல் #1049

பாடல் #1049: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி யங்குச பாச மெழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

விளக்கம்:

அழகிய சிலம்பணிந்த திருவடிகளும், சிவந்த பட்டு அணிந்த உடலும், அழகிய கச்சையணிந்த மார்பும், அம்பைப் போன்ற மலர்க்கொத்து வில்லைப் போன்ற கரும்பு அங்குசம் பாசக் கயிறு ஆகியவற்றை அணிந்த நான்கு கரங்களும், அழகிய நீண்ட கருமையான கூந்தலும், பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும் கொண்ட உருவமாக திரிபுரை இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது உலகத்தை இயக்கும் முறைகளை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். சிலம்பிலிருந்து வரும் ஒலியும் பட்டு போல் சிகப்பாக ஜொலிக்கும் ஒளியும் உலக உருவாக்கத்தின் (படைத்தல்) காரணத்தை குறிக்கின்றது. மார்பு கச்சை உலக உயிர்களுக்கு பாதுகாப்பாக (காத்தல்) உணவு அளிப்பதை குறிக்கின்றது. நான்கு கரங்களில் உள்ளவற்றில் மலர்க்கொத்து அருளலையும், வில்லைப் போன்ற கரும்பு அழித்தலையும், பாசக் கயிறு மாயையால் மறைத்தலையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது. கருமையான கூந்தல் பரந்து விரிந்த அண்டங்களைக் குறிக்கின்றது. காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது.

பாடல் #1050

பாடல் #1050: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

விளக்கம்:

பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும், வில்லைப் போன்ற வளைந்த புருவங்களையும், அரக்கு நிறத்தில் இருக்கும் திருமேனியையும், சிவமணி மாலையை ஆரமாகவும், தலையில் ஒளிர் விடும் நிலாவை கிரீடமாகவும் கொண்டு சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்றவள் திரிபுரை சக்தியாகும்.

கருத்து:

திரிபுரை சக்தியானது சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். பாடல் #1049 இல் உள்ளபடி காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது. கொலை செய்யும் வில்லைப் போன்ற வளைந்த புருவங்கள் அழிப்பதைக் குறிக்கின்றது. கழுத்திலிருக்கும் சிவமணி மாலை உலகத்தைச் சுற்றி நிற்கும் நவகிரகங்களைக் குறிக்கின்றது. நிலவிலிருந்து வரும் குளிர்ந்த ஒளி போன்ற தலைமுடி உலகங்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து பாதுகாப்பதை குறிக்கின்றது. அரக்கு நிற திருமேனி எப்போதும் நில்லாமல் அசைந்து கொண்டே இருக்கின்ற சக்தியின் வேகத்தை குறிக்கின்றது.