பாடல் #1111

பாடல் #1111: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநா ளனைத்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

விளக்கம்:

பாடல் #1110 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் மகிழ்ச்சியுடன் இருந்த இறைவியானவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நீண்ட காலம் இருந்து குமரியாகி அதன் பிறகு எமது உடல் முழுவதும் சென்று எமக்குள் செயல்படும் கலைகள் அனைத்தையும் எமது தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒன்று சேர்த்து அந்த கலைகள் அனைத்திற்கும் தலைவியாக வீற்றிருந்தாள்.

கருத்து:

உயிர்களின் உடலுக்குள் இருக்கும் கலைகள் என்பது உடலுக்குள் இருக்கும் அனைத்தின் இயக்கமாக இருக்கின்றது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இறைவனை அடைவதற்கு பயன்படும் வகையில் இயக்குகின்ற தலைவியாக இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1112

பாடல் #1112: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1111 இல் உள்ளபடி எமது உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கலைகளுக்கும் தலைவியாக இருக்கும் வயிரவி தேவியானவள் தனது ஞானக்கண்ணைக் கொண்டு எமது நெற்றிக்குள் ஞானக் கண்ணாக வீற்றிருக்கிறாள். அவள் எமக்குள் இயங்கிக் கொண்டே இருந்து எம்மை சாதகம் செய்ய வைத்து அதன் பயனாக எமது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கிருந்து அமிர்தத்தை வழங்கி அருளுகின்றாள். அதன் பயனாக ஒலி ஒளியின் தலைவியான அந்த தேவியே எமது ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் பார்க்க வைத்து அருளுகின்றாள். அதன் பிறகு எமது உடலுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியில் அசைந்து கொண்டே இருந்து ஒரு பூங்கொடி கொம்பை சுற்றிக்கொண்டே மேலெழுவது போல எமது சுழுமுனை நாடியைச் சுற்றிக்கொண்டே எமக்குள் வீற்றிருக்கின்றாள்.

கருத்து: சாதகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உடலுக்குள் இருந்து அனைத்து கலைகளையும் இயக்கி அவர்களது சாதகத்தை தொடர்ந்து செய்ய வைப்பது வயிரவி தேவியே என்பதை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #1113

பாடல் #1113: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

விளக்கம்:

பாடல் #1112 இல் உள்ளபடி எமக்குள் வீற்றிருந்த வயிரவி தேவியானவள் அழகிய ஆபரணங்களை சூடிய மங்கையாக எமது உள்ளம் முழுவதும் பரவி சகஸ்ரதளத்திலும் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமது தலைக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிந்தவள் அங்கிருந்து நான்கு விரற்கடை அளவு தூரத்தில் தலைக்கு மேலே உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூவிதழில் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமக்குள் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்த மூச்சுக்காற்றை சீராக்கி எமது முதுகுத் தண்டில் இருக்கும் சுழுமுனை நாடியோடு ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்து எம்மை அருமையான தவங்களை செய்ய வைத்து அருளினாள் ஆதிப் பரம்பொருளாகிய இறைவி.

பாடல் #1114

பாடல் #1114: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதி யகாரண காரணி
சோதி யசோதி சுகம்பர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதியென் னுள்ளத்து உடனியைந் தாளே.

விளக்கம்:

பாடல் #1113 இல் உள்ளபடி ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும், தனக்கு என்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும், ஒளியாகவும் இருளாகவும், பேரின்பத்தை வழங்கும் அழகான இறைவியாகவும், துவாதசாந்த வெளியிலே சமாதி நிலையில் இறைவனுடன் சேர்ந்து மங்கையாக வீற்றிருந்து என்றும் நன்மையையே உடையவளாகவும் இருக்கின்றாள் என்பதை யாம் எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றோம். அவளும் எமது உள்ளத்திற்குள் எம்மோடு சேர்ந்து இருந்து அனைத்தையும் எம்மை செய்வித்தாள்.

பாடல் #1115

பாடல் #1115: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1114 இல் உள்ளபடி எம்மோடு சேர்ந்திருந்து அனைத்தையும் செய்வித்த இறைவியானவள் மிகவும் அழகிய ஆபரணங்களை சூடிக்கொண்டிருக்கிறாள். அவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நின்று மகிழ்ச்சியோடு அங்கேயே வீற்றிருந்து எம்மை ‘நமசிவ’ எனும் மந்திரத்தை தியானிக்க வைத்து அதன் பயனால் பிரம்மனும் ஆராய்ந்து அறிய முடியாத இறைவனின் மாபெரும் திருவடிகளை உறுதியாக பற்றிக் கொள்ள வைத்து அவனைத் தவிர மற்ற அனைத்து பற்றுக்களையும் வேறு வீணான எண்ணங்களையும் பேச்சுக்களையும் எம்மிடமிருந்து நீக்கி அருளினாள்.

பாடல் #1116

பாடல் #1116: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முக்தி யருளு முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமு முன்னுள்ள தாமே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து அடைவதற்காக வழங்கப்பட்ட பிறவியை அவனைப் பற்றி எண்ணாமல் வீணாக பல பேச்சுகளை பேசிக் கழிக்கின்றனர் மூடத்தனமான உயிர்கள். இவர்கள் தம்மை நாடி சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முக்தியை அருளும் ஆதியான இறைவியை அறிந்து கொள்வதில்லை. அவளை அடைய முயன்று சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முன்பு அவள் முட்டையிட்டு அதைப் பார்வையிலேயே பார்த்து பொரிக்க வைக்கும் மீன்களைப் போல அடியவர்களை எப்போதும் கருணையோடு பார்த்துக் கொண்டே இருக்கும் ஞானக் கண்களோடும் அடியவர்களை தம்மிடம் வந்து சேரும்படி மீண்டும் மீண்டும் அழைக்கின்ற சிவந்த வாயோடும் அடியவர்களின் மேல் கருணையோடு பார்வையை வீசும் திருமுகத்தோடும் எதிர்வந்து அருள்புரிவாள்.

பாடல் #1117

பாடல் #1117: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உள்ளத் திதையத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடமுள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள வொளியின் கருத்தாகுங் கன்னியே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் பிறவி எடுக்க தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவாகும் போதே அதனுடன் இறைவனின் சுத்த மாயையானது ஒளி அம்சமாகவும் இறைவியின் மாயை இருள் அம்சமாகவும் வந்து விடுகின்றது. இறைவியானவள் பிறவி எடுத்து வரும் பிள்ளையின் சித்தம், மனம், புத்தி ஆகிய மூன்றிலும் இறைவனைத் தெரிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைத்து வைத்திருக்கின்றாள். ஆதலால் இறைவனைத் தெரிந்து கொண்டு அவனை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் முதலில் இறைவியை எண்ணத்தில் வைத்து சாதகம் செய்தால் அவள் கருணையோடு இருளான மாயையை நீக்கி ஒளியான இறைவனை காட்டி அருளுவாள்.

கருத்து: வயிரவியானவள் உயிர்களுக்குள் இருக்கும் இறைவனை மறைத்து வைத்திருக்கும் தன்மையையும் அவளை எண்ணத்தில் வைத்து வழிபடுவதின் மூலம் இறைவனை அவள் வெளிப்படுத்தும் தன்மையையும் இப்பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1118

பாடல் #1118: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கன்னியுங் கன்னி யழிந்திலன் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவனு மங்குள
என்னேயிம் மாயை யிருளது தானே.

விளக்கம்:

பாடல் #1117 இல் உள்ளபடி ஒளியாகிய இறைவனை இறைவியின் இருள் தன்மை மறைத்து வைத்திருக்கின்றது. என்றும் கன்னியாகவே இருக்கும் இறைவியானவள் என்றும் அழியாத இறைவனுடன் கொண்ட அன்பினால் அவனது ஆசைப்படியே தனது எண்ணத்தாலேயே ஐந்து தெய்வங்களான பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை உருவாக்கி அருளினாள். இறைவன் சொல்லியபடியே எழுதப்பட்ட தூய்மையான வேதங்கள் கூறுகின்ற ஒளி வடிவமான இறைவனும் இருள் தன்மை கொண்ட இறைவியோடு சேர்ந்து உயிர்களுக்குள் வீற்றிருக்கின்றான். ஆனாலும் அவனையே மறைக்கின்ற அளவிற்கு இறைவியின் இருள் தன்மை இருக்கின்றது. இந்த மாயையின் சக்திதான் எவ்வளவு பெரியது?

கருத்து: சுத்த மாயையின் ஒளி அம்சமான இறைவனும் மாயையின் இருள் அம்சமான இறைவியும் உயிர்களுடன் பிறவியிலேயே சேர்ந்து வந்துவிடுகின்றனர். ஆனாலும் இறைவியானவள் தனது இருள் தன்மையான மாயையால் உயிர்கள் தங்களின் கர்மங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரை இறைவனை மறைத்து அருளுகின்றாள். மேஜை மேல் வைக்கப்பட்ட விளக்கின் அடியிலேயே இருள் இருப்பதைப் போல உயிர்களின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் ஒளியாக இருக்கும் இறைவனை மறைக்கின்ற இருளாக இறைவி இருக்கின்றாள்.

குறிப்பு: ஐந்து தெய்வங்களையும் தனது எண்ணத்தாலே உருவாக்கியதால் வேறு எந்த மாற்றமும் அடையாமல் இறைவி என்றும் கன்னியாகவே இருக்கின்றாள்.

பாடல் #1119

பாடல் #1119: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருளது சத்தி வெளியதெம் மண்ணல்
பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்
தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.

விளக்கம்:

உயிர்களுக்குள் ஒளியை மறைக்கின்ற இருள் தன்மையாக ஆதி சக்தியான இறைவியும் இருளை அகற்றுகின்ற வெளிச்ச தன்மையாக எமது தலைவனாகிய இறைவனும் இருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்து உணர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இந்தப் பிறவியிலேயே பேரின்பத்தை பெறுகின்றார்கள். இந்த உண்மையை அறிந்து தெளிவு பெற்ற ஞானமே இறைவனை அடையும் வழியைக் காட்டும் என்று நம்பி முழுமையாகச் சரணடைந்தால் ஆதியாகிய இறைவன் அவர்களுக்குள் வெளிப்பட்டு அருள் புரிவான்.

பாடல் #1120

பாடல் #1120: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதியு மாய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதுமென் னுள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

விளக்கம்:

அனைத்திற்கும் முதலாகவும் அனைத்துமாகவும் உலக இயக்கத்திற்கு காரணமாகவும் அசையா சக்தியான சதாசிவமூர்த்தியுடன் சரிபாதியான அசையும் சக்தியாகவும் அனைத்திற்கும் மேலானவளாகவும் அனைத்திற்குள்ளும் உறைந்து இருப்பவளுமாகிய வயிரவி தேவி அனைத்தையும் பொன் வளையல் போல வளைத்து இருக்கின்றாள். அழகான மங்கையாகவும் அமைதியாகவும் இறைவனோடு சேர்ந்து உயிர்களின் மனதை இயக்குபவளாகவும் நன்மையின் வடிவமாகவும் இருக்கின்ற அவளை எப்போதும் போற்றி வணங்கும் எமது உள்ளத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு அருளினாள்.