பாடல் #470

பாடல் #470: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

விளக்கம்:

ஆன்மா தனது வினையின் பயனால் பிறவி எடுக்க உடலை படைத்து உடலுக்குள் ஆன்மாவை வைத்து தேவையான காலத்திற்கு வாழும்படி உயிரையும் வைத்து தேவைக்கேற்ப திறந்து மூடிக்கொள்ளுகின்ற ஒன்பது துவாரங்களைக் கொண்ட உறுதியான உடலையும் வைத்து அந்த உயிர் பிறவியில்லா நிலையை அடைய அந்த உடலின் தலையின் உச்சியின் இறுதியில் சகஸ்ரரதளத்தில் ஆயிரம் இதழ் தாமரையின் மேல் நெருப்பு வடிவமாகத் தங்கியும் இருப்பதைக் கண்டு அவனோடு பேரின்பத்தில் கலந்து திளைத்து நின்றேன்.

உட்கருத்து: ஆன்மா தான் கொண்ட ஆசையினாலும் வினையினாலும் பிறவி எடுக்கின்றது. அந்தப் பிறவிச் சுழலிலிருந்து தப்பிக்க உடலில் ஆறு ஆதார சக்தி மயங்களிலும் உச்சியில் ஏழாவது இடமாக சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேலே நெருப்பு வடிவமாக இருக்கும் இறைவனை உயிர்கள் உணர்ந்தால் பிறவி இல்லாத பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.

பாடல் #471

பாடல் #471: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுகின் றான்ஆகத்து நேர்பட்ட வாறே.

விளக்கம்:

பாடல் #470 பாடலின் படி ஈசனுடன் பேரின்பத்தில் கலந்து திளைத்து இருந்த போது ஈசன் அருளியவற்றை கேட்டு வியந்து நின்றேன். அது என்னவென்றால் எங்கும் கலந்திருக்கும் ஒரு மாசும் இல்லாத மாபெரும் சுடராக இருக்கும் இறைவனே வினைகளின் பொருட்டு உயிர்களைப் பிறக்க வைக்க முழுமுதல் காரணமாக இருக்கின்றான் என்பதையும் உயிர்கள் அவர்களின் வினைகளை அனுபவிக்க வேண்டிய மாயையாகவும் அவனே இருக்கின்றான் என்பதையும் சுக்கிலத்தை சுரோனிதத்தையும் சேர்த்து கர்ப்பப் பைக்குள் கொண்டு சென்று கருவாக்கி அதை குழந்தையின் உருவமாக அதை நீட்டிக் காப்பாற்றி அது பிறந்தபின் அதனுடன் உள் ஒளியாகக் கலந்து மாயையால் மறைந்து நின்று அந்த குழந்தை வாழும் காலம் வரை அதை உள்ளிருந்தே வழி நடத்துகின்றான் என்பதையும் கேட்டு உணர்ந்தேன்.

பாடல் #472

பாடல் #472: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

விளக்கம்:

பூவிதழ் போன்ற யோனியில் நுழைந்த மொட்டு போன்ற இலிங்கத்தின் நுனியிலிருந்து வெளிவந்த சுக்கிலம் சென்று கர்ப்பப் பையின் வாசலில் இருக்கும் கருமுட்டையுடன் கலந்தபின் கருமுட்டை கர்ப்பப் பைக்குள் சென்று விரியும். அப்போது விரிந்த முட்டையிலிருந்து வெளிவந்த நீர்க் குழம்பில் ஒளி வடிவான இறைவனின் அம்சமும் ஜென்ம சுமைகளைச் சுமந்த ஆன்மாவும் சேர்ந்து கலந்து பிறவி எடுக்கும். ஆண் பெண்ணின் உயிர் அணுக்கள் சேர்ந்து ஆண் பெண்ணின் சாயலிலேயே உலகத்தில் பிறக்கும் உடம்பாக மாறிவிடும். அந்த உடம்பு முழுவதும் இறைவனின் அம்சம் பரவி எட்டுவிதமான காரணிகள் பற்றிக்கொள்ளும்.

உடலின் எட்டுவித காரணிகள்:

  1. உடல். 2. வாய். 3. கண். 4. மூக்கு. 5. காது. 6. மனம். 7. புத்தி.
  2. 8. அகங்காரம்.

பாடல் #473

பாடல் #473: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

விளக்கம்:

பாடல் #472 ல் உள்ளபடி குழந்தையின் உடலெங்கும் பரவி ஒட்டிக்கொள்ளும் அந்த எட்டுவித சூட்சும காரணிகளாக இருப்பவை ஐந்து ஞானேந்திரியங்களும் மூன்று அந்தக் கரணங்களும் ஆகும். இவற்றோடு குழந்தையை ஒட்டியே பிறப்பது வினைப் பயனால் பெற்ற பந்தம் பாசம் எனும் உணர்வுகள். இப்படி எல்லாம் கலந்து உருவாகிய பை போன்ற உடலை வினையின் படி கட்டி வைத்து உருவாக்குவதும் பிறவி முடிவில் அவிழ்த்து அழிப்பதும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானே.

பாடல் #474

பாடல் #474: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைத்த பரப்பினை
மண்முத லாகவே வகுத்துவைத் தானே.

விளக்கம்:

ஆன்மா பிறவி எடுப்பதற்காக நெற்றிக் கண்ணையுடைய சிவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தும் (நமசிவாய) பிரணவமும் (ஓம்) கலந்து வினைப்படி பந்த பாச மாயையை வைத்து ஆன்மாவை சேர்த்து உடம்பாக செய்த இறைவனே அந்த ஆன்மா தனது பந்த பாச மாயையை நீக்கி இறைவனிடம் வந்து சேருவதற்கான வழிமுறைகளை வேதங்களாக கொடுத்து அருளினான். அந்த வேதங்களின் பொருளை புரிந்து உணர்ந்து கொள்ள கருவினுள் முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் காண்க) வகை பிரித்து வைத்து அருளினான்.

உட்கருத்து: ஆன்மாவிற்கு ஆசையை தீர்த்துக்கொள்ள பிறவி கொடுத்து அதற்கேற்ற வினையையும் மாயையையும் கொடுத்த இறைவனே அதிலிருந்து விடுபட்டு பிறவிச் சுழலில் இருந்து தப்பிக்க வழிமுறையான வேதங்களையும் கொடுத்து அதன் பொருளைப் புரிந்து கொள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் குழந்தைக்கு கொடுத்து அருளுகின்றான்.

பாடல் #475

பாடல் #475: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

விளக்கம்:

அருளைத் தருகின்ற சக்தியில்லாமல் சிவம் இல்லை. அசையா சக்தியாகிய சிவம் இல்லாமல் அருளுகின்ற சக்தியும் இல்லை. உயிர்களுக்கு உடலைத் தருகின்ற போதே சிவத்தையும் சக்தியையும் இரண்டு வளர்ப்புத் தாய்களாக கூடவே வந்து விடுகின்றான் இறைவன். சிவமும் அன்பும் வேறு வேறு இல்லை வளர்ப்புத் தாய்களாக வந்த சிவமும் சக்தியும் அன்போடு கருவை வளர்த்து பாதுகாத்து அதைப் பிறக்க வைக்கின்றார்கள்.

பாடல் #476

பாடல் #476: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்வகை எங்கும்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.

விளக்கம்:

வினைப் பயனால் எடுக்கும் பிறவி எத்தகையது என்பதை முடிவு செய்து அதன்படி உயிர்களை படைக்கின்றது ஒலி வடிவமான சக்தி. வினைகளைக் கழிக்கும் உயிர்களுக்கு மாயையாகிய இருளை அகற்றி அருளுகின்றது ஒளி வடிவான சிவம். இவர்கள் இருவரும் இணைந்தே உயிர்களை ஓர் அறிவு ஜீவியிலிருந்து ஆறு அறிவு மனிதன் வரை வகை வகையாகப் பிரித்து அவர்களின் வினைகளுக்கு ஏற்ற வகையில் படைத்து அருளுகின்றார்கள். படைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த உயிர்களுக்குள்ளேயும் உயிரோடு உணர்வாகக் கலந்து நிற்பதே சிவ சக்தியின் கருணையாகும்.

பாடல் #477

பாடல் #477: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.

விளக்கம்:

இறைவனது கருணையினால் தாயின் வயிற்றில் வளர்கின்ற ஜோதி வடிவமான ஆன்மாவை ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் பார்ப்பது மாயையாகும். அப்படியெல்லாம் உருவைக் கொடுப்பது அந்தக் குழந்தையின் தாய் தந்தையரின் வழிமுறைகளால் தானே தவிர ஆன்மாவிற்கு என்று ஒரு உருவமும் கிடையாது. தந்தை தாயின் வழியாகவே அவர்களின் சாயலில் கருவைப் பதித்து அதை ஆண் பெண் அலி என்ற உருவமாகச் செய்வது இறைவனின் வல்லமையே ஆகும்.

பாடல் #478

பாடல் #478: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும். அப்படி இல்லாமல் ஆணின் சுக்கிலத்தை விட பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும். அப்படியும் இல்லாமல் ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாக இருக்கும். இதில் ஆணின் சுக்கிலத்தில் உயிரணுவின் சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் பிறக்கின்ற குழந்தை உலகத்தையே ஆளுகின்ற அரசன் போல சீரும் சிறப்பும் மிகுந்ததாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் சுக்கிலம் பாய்ந்தும் ஒரு பயனும் இல்லாமல் கரு உருவாகாமல் போய்விடும்.

பாடல் #479

பாடல் #479: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை
பாய்ந்திடும் யோகியர்க்குப் பாய்ச்சலும் ஆமே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து சுக்கிலம் வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு ஐந்து வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை நூறு ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை எண்பது ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். எந்த அளவு மூச்சுக்காற்று வெளிவருகின்றது என்பதை பிரித்துப் பார்த்து அறிந்து கொண்டு தமக்கு வேண்டிய அளவிற்கு வெளிவரும் படி செய்வது யோக சாதனைகளைப் புரிந்து சாதனைகள் கைவரப்பெற்ற யோகியர்களுக்கே முடியும் என்பதால் அவர்களுக்கு ஆயுள் அளவு கிடையாது.

குறிப்பு :மூச்சுக்காற்றைத் தம் வசம் பழக்கி அளவு அறிந்து இழுத்து அளவு அறிந்து வெளிவிடும் ஆற்றலைப் பெற்றவர்கள் யோகியர்கள். அவர்களால் தாம் வெளிவிடும் மூச்சுக்காற்றின் நேர அளவைக் கூட்டி தங்களது ஆயுளை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும்.