பாடல் #957

பாடல் #957: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

விளக்கம்:

‘ஔ’ ‘சௌ’ என்ற எழுத்துக்கள் இறைவன் இருக்கின்ற மந்திரமாகும். இவை இரண்டையும் சேர்த்து உச்சரித்தால் ‘ஹௌ’ எழுத்தாகி அதன் உச்சரிப்பால் ‘ஹ’ என்றும் அதனோடு ‘ம்’ என்ற எழுத்தை சேர்த்து உச்சரித்தால் ‘ஹம்’ என்ற மந்திரமாக மாறிவிடும். அதன்படியே ‘செள’ எழுத்தோடு ‘ம்’ என்ற எழுத்தை சேர்த்து உச்சரித்தால் ‘செளம்’ என்ற மந்திரமாக மாறிவிடும். இந்த இரண்டு மந்திரங்களையும் சேர்த்தால் ‘அம்சம்’ எனும் மந்திரமாக இருக்கும். இந்த மந்திரத்தின் அருமையை யாரும் அறியவில்லை. இந்த மந்திரத்தின் அருமையை அறிந்தவர்கள் அந்த மந்திரத்தில் மூலப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தி இருப்பதை அறியலாம்.

பாடல் #958

பாடல் #958: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

விளக்கம்:

பாடல் #957 இல் உள்ள ‘ஹம்சம்’ மந்திரம் பாடல் #925 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவில் இருக்கிறது. இந்த மந்திரத்தை சாதகம் செய்து அதன் சக்தியை அறியாமல் இருக்கின்றார்கள். அதன் சக்தியை அறிந்தவர்களும் வெறுமனே காலையிலும் மாலையிலும் உரக்க செபித்துவிட்டு மந்திரத்தின் பரிபூரண நிலையை அறியாமலேயே சென்றுவிடுகிறார்கள்.

பாடல் #959

பாடல் #959: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசமு மாமே.

விளக்கம்:

பாடல் #957 இல் உள்ள ‘ஹம்சம்’ மந்திரத்தை மனதிற்குள் செபித்து அதன் அதிர்வலைகளை மானசீகமாக அனைத்து திசைகளும் பெறும்படி அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் அந்த மந்திரம் உயிருக்குள் மரத்தின் வேர் போல ஆதாரமாக நிற்கும். இந்த மந்திரத்தை நெஞ்சத் தாமரைக்குள் பதித்து மனதில் சலனங்கள் இன்றி தியானித்தால் உயிருக்குள் இருக்கும் மந்திரம் மதம் பிடித்த யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசம் போல மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி இறைவனை நோக்கி வழிநடத்திச் செல்லும்.

குறிப்பு: ‘ஹம்சம்’ மந்திரத்தை ஆத்மார்த்தமாக மனதிற்குள் பதித்து எந்தவித சலனமும் இன்றி தியானித்து அதன் அதிர்வலைகளை நான்கு திசைகளுக்கும் சென்று பரவும்படி செய்து வந்தால் அந்த மந்திரம் உயிருக்குள் வேர் போல ஊன்றி நின்று நம்மை இறைவனை நோக்கி செல்லும் பாதையை விட்டு விலகாமல் கட்டுப் படுத்தி வைக்கும்.

பாடல் #960

பாடல் #960: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட லாறு முறுமந் திரமே.

விளக்கம்:

உருவம் இல்லாததும் கண்ணுக்கு தெரியாததுமான பரகாயத்தில் (பரவெளி) எழுகின்ற ஓம் எனும் ஒலியிலிருந்து பெருகி வரும் சக்தியானது மின்னல் ஒளியைப் போல வெளிச்சமாக வெளிவரும். இந்த ஒலியும் ஒளியும் சேர்ந்த சக்தியானது மருவி ‘நமசிவய’ மந்திரத்தில் இருக்கும் ‘ய’ எழுத்துக்கும் ‘சி’ எழுத்துக்கும் நடுவில் இருக்கும் ‘வ’ எழுத்தாக மாறுகிறது. இப்படி இருக்கும் மூன்று எழுத்து ‘சிவய’ மந்திரத்தை செபித்து அதனோடு லயித்து இருந்தால் அது ஆறு எழுத்துக்கள் கொண்ட ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரமாக மாறி உயிருக்குள் ஆதாரமாக நிற்கும்.

குறிப்பு: தூய தமிழ் சொற்கள் நடைமுறைத் தமிழில் மருவி மாறுவதைப் போல ஒலியும் ஒளியும் சேர்ந்து மருவி மந்திரமாகிறது.

பாடல் #961

பாடல் #961: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

விளக்கம்:

பாடல் #960 இல் உள்ளபடி ஒலியும் ஒளியும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து சாதகரின் மனதிற்குள் ஒருநிலைப்பட்டால் மனம் இருக்கும் புருவ மத்திக்கு மேலிருக்கும் உச்சந்தலையில் அமிர்தம் ஊறும். அந்த அமிர்தம் ஊறும் இடத்திலிருந்து உருவாகும் மந்திரமானது சாதகருக்குள் வேள்வியாக இருக்கும்.

குறிப்பு:

இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள மந்திரம் ‘ஓம் நமசிவாய’ ஆகும். இதன் குறிப்பு பாடல் #962 இல் உள்ளது.

பாடல் #962

பாடல் #962: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

விளக்கம்:

பாடல் #961 இல் உள்ளபடி சாதகருக்குள் வேள்வியாக இருக்கும் ‘ஓம் நமசிவாய’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை செபிக்கும் முறை அறிந்தவர்கள் கூட அந்த ஆறு எழுத்துக்களும் ஒரு எழுத்திலேயே அடங்கியிருப்பதை அறிந்து அதை ஓதி உணராமல் இருக்கின்றார்கள். இந்த ஆறெழுத்துக்களும் அடங்கியிருக்கும் ‘ஓம்’ எனும் ஓரெழுத்தை மட்டும் வேறு எழுத்துக்கள் எதுவும் துணையின்றி ஓதி உணரக்கூடியவர்களுக்கு அந்த ஓரெழுத்தே உயிருக்குள் இருக்கும் இறைவனை உணர வைக்கும்.

குறிப்பு: ‘ஓம் நமசிவாய’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை பல கோடி முறை செபிக்கும் சாதகர்கள் அந்த ஆறெழுத்து மந்திரத்தை ஒரேழுத்து மந்திரமாக உணர்வார்கள்.

பாடல் #963

பாடல் #963: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

விளக்கம்:

பாடல் #962 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் ஓரெழுத்தாக ஓதி உணரக்கூடியவர்களுக்கு அதன் உயிர்க்கலைகளாக மொத்தம் 15 எழுத்துக்கள் இருப்பதை உணர முடியும். இந்த 15 எழுத்துக்கள் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்து மந்திரமும் அதன் ஆதார எழுத்துக்களாகிய அ, இ, உ, எ, ஒ (பாடல் #927) ஆகிய ஐந்து எழுத்துக்களும் அதன் பீஜங்களாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் (பாடல் #912) ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஆகும். இந்த 15 எழுத்துக்களே மாற்றி மாற்றி எழுதப்பட்டு திருவம்பலச் சக்கரத்தில் மொத்தம் 51 எழுத்துக்களாக இருக்கின்றது (பாடல் #924). இந்த 15 எழுத்துக்களில் அ, உ இரண்டும் ஆதி எழுத்துக்களாகும். மீதியுள்ள 13 எழுத்துக்களும் சோதி எழுத்துக்களாகும். இந்த சோதி எழுத்துக்களை பீஜங்களாக்கி அவற்றின் ஒலியை உடலுக்குள் பரவச் செய்து இதன் தத்துவத்தை உணரலாம்.

பாடல் #964

பாடல் #964: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலை பதினாறு கலையதாங்
கந்தர வாகரங் காலுடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள ஒளியைச் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒலியை எழுப்பினால் அதிலிருந்து வெளிப்படும் சக்தியானது 16 கலைகளாகப் பிரிந்து திருவம்பலச் சக்கரத்தின் தலை (மேல் பகுதி), உடல் (நடுப் பகுதி), கால் (கீழ்ப் பகுதி) என்று பல அங்கங்கங்களாக செயலாற்றுகின்றது. எப்போதும் முடிவில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி மயமே திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் 51 எழுத்துக்களாக இருக்கின்றது.

பாடல் #965

பாடல் #965: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத்து ஆமே.

விளக்கம்:

பாடல் #964 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவிலுள்ள கட்டத்தில் இருக்கும் ஐம்பது எழுத்துக்களுக்குள் அனைத்து வேதங்களும் ஆகமங்களும் அடங்கியுள்ளன. இதனை அறிந்து கொண்ட சாதகர்கள் ஐம்பது எழுத்துக்களும் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்குள் அடங்கிவிடுவதை உணரலாம்.

குறிப்பு: பாடல் #912 இல் உள்ளபடி உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்கள் திருவம்பலச் சக்கரத்திலுள்ள ஐம்பது எழுத்துக்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #966

பாடல் #966: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #965 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் உணர்ந்த ஐந்தெழுத்து ‘நமசிவாய’ எனும் மந்திரத்தின் மூலம் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான். இந்த பஞ்ச பூதங்களையும் ஆதார சக்தியாக வைத்து பல அண்ட சராசரங்களையும் இறைவன் படைத்தான். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் காக்கின்றான் இறைவன். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்துக் காத்த அனைத்துமே தாமே என்பதை காட்டி நின்றான்.