மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும். நான் என்கின்றது அகங்காரம் ஆகும். நான் என்பது சரியானது இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடைவதற்காகவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் கூறுகின்றனர். இவ்விதம் யாம் என்பதை வார்த்தைகளில் மட்டும் சேர்த்துக் கூறினால் போதாது. உண்மையாகவே இறைவன் நம்முடன் இருந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதைப் பரிபூரணமாக நம்புதல் வேண்டும். என் செயலால் இனி ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நடப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் காண இயலும். இக்காலத்தின் கலியுகத் தன்மையில் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காதது அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக்கொண்டு எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.