மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #47

2-8-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தேவைக்கேற்ப பணம் வசிக்க வீடு அனைத்தும் இருந்தும் ஏன் அமைதி இல்லை?

அமைதி என்கிற வார்த்தையைத் தனியாக அ மை தீ என்று மூன்றாகப் பிரித்தால் தீயை அனைத்த பின்பே அமைதி கிட்டும் என்பதே விளக்கமாகின்றது. அனைவருக்கும் உள்ளே தீ எரிகின்றது. பலவற்றை சாதிக்க வேண்டும் என்கின்ற தீ. அவ்விதம் சாதிக்க முடியவில்லை என்றால் அமைதியில் குறை காண்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால் இருப்பதை வைத்து அமைதி காணுதல் வேண்டும் என்பதேயாகும். இல்லாதோர் பலர் இருக்க நமக்கு இந்த அளவிற்கு இறைவன் அளித்துள்ளானே என்கின்ற ஓர் அமைதியை அறிதல் வேண்டும். இவ்விதம் இல்லாமல் மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த இடத்தில் அமைதி ஓர் துளி அளவிற்கும் இருக்காது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நமது உடல் ஆரோக்கியத்தை நாம் சிந்தித்தல் வேண்டும். கைகள், கால்கள், கண்கள், உடம்பு ஆகிய அனைத்தும் நமக்கு நன்றாக உள்ளதே இது இல்லாதோர் எத்தனை பேர் உள்ளனர்? வசிக்க ஒரு வீடு நமக்கு உள்ளது. அப்படி வசிக்க ஒரு வீடு இல்லாமல் மழையிலும் வெயிலிலும் மரத்தடியிலும் வாழ்வோர் எத்தனை எத்தனை பேர் என சிந்தித்தல் வேண்டும். ஒரு வேளை உணவு உண்ண வழி இல்லாதோர் இருக்கின்றனர் என்பதை அறிதல் வேண்டும். இவ்விதம் பார்த்தால் நாம் பெரும் பாக்கியசாலியாக இருக்கின்றோம் என்பதை உறுதியாக உணரலாம். இந்த எண்ணத்தை மனதில் நன்கு வைத்தால் பின்பு அமைதியைக் காண்போம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.