மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

25-4-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஞானிகள் எவ்வாறு இருப்பார்கள்?

பற்று இல்லாத நிலையுடன் பேரன்பு கூடியும் எதனிடமும் பற்று இல்லாத போதும் தன்னுடைய அன்பானது உலகிற்குக் கிடைக்கட்டும் என்கின்ற நிலையுடனும் விசேஷ ஆடைகள் இல்லாமல் விசேஷ அறிகுறிகள் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலையுடனும் இருப்பார்கள். ஆசைகள் வெறுப்புகள் விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி ஒழித்து விட்டு இறைவன் ஒருவனே தம்முடைய சொத்து இறைவன் மட்டுமே தம்முடைய ஆனந்தம் இறைவன் ஒருவனே தமக்கு அனைத்தும் என்கின்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையை நீங்கள் எப்படி அடைய முடியும் என்கின்ற கேள்விக்கு விடை எளிதானது. அவர்கள் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்நிலையில் சிறிது சிறிதாக நாம் விரும்பும் உணவிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நம்முடைய ஆசைகள் வெறுப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை நீக்கினால் அந்த உணவிற்கும், பழக்கவழக்கத்திற்கும் நாம் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வாறு விடுபட்டால் மற்ற அனைத்தும் எளிதாக விடுபட்டுச் சென்று விடும். மேலும் துறவு சென்றவன் சிவனே என அமர்வான். அவன் தன்னுடைய அடுத்தத் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஏனெனில் அனைத்தும் இறைவன் அளிப்பான் என்கின்ற பூரண நம்பிக்கை விசுவாசம் சரணாகதி ஆகிய அனைத்தும் அவனுக்கு உண்டு. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் முழுமையாகச் சரணடைந்து விட்டோம் என்றால் நமக்கு வேண்டியது அனைத்தும் நாம் இருக்கும் இடத்தைத் தேடி வரும் என்பது அதன் தத்துவம் ஆகின்றது. அவ்விதம் நாம் இருக்கும் இடம் தேடி வருமா? என்று சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஞானியின் நிலையை அடைவது கடினமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.