மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

19-3-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்: பகுதி #1

விசுவாசம் என்றால் என்ன?

குருவின் மீது வைக்கும் விசுவாசமானது அனைத்திலும் எப்போதும் இருக்க வேண்டும். பின்பு நமக்கென ஒன்றும் இல்லை என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். உடல், பொருள், அனைத்தையும் குருவின் திருவடியில் வைத்து விட்டு நமக்கென ஒன்றும் இல்லை என்கிற எண்ணத்துடன் இருந்தால் சரணாகதி என்பது முழுமையாகும். இதுவே விசுவாசத்தின் எல்லை ஆகும். முதலில் குருவின் சுகசௌகர்யங்களையே முதலாகப் பார்க்க வேண்டும். இரண்டாவதே நம்முடையது என உணர்தல் வேண்டும். நம்முடையது அனைத்தும் இறைவனுடையது என்ற உண்மையான எண்ணத்துடன் இருந்தால் அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது இறைவன் முடிவு. வீணாக குருநாதரிடம் சென்று என்ன செய்தல் வேண்டும் என கேள்விகள் கேட்பது தவறாகும். ஏனெனில் குருநாதரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய விடையை நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் அது தவறாகும். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டு பின்பு அந்த முடிவான பதிலைக் குருநாதர் கூற வேண்டும் என்று இரண்டாவதாக குருநாதரிடம் அபிப்பிராயம் கேட்பது தவறாகும். இதனை தவிர்த்தல் வேண்டும். குருநாதரிடம் கேள்வி கேட்டு அவர் பதில் கூறி விட்டால் அவர் கூறிய பதிலை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு செயற்படுதல் வேண்டும். இல்லையென்றால் குருநாதருடன் உள்ள உறவு சீரில்லா உறவாகும். குருநாதர் எது செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் உண்டு காரணம் உண்டு சில கர்ம விதிகளை மாற்றிட சிலவற்றை செய்ய வைக்கின்றார் என்பதை மறக்காமல் செயல்பட வேண்டும்.

வீணாக எதுவும் நடப்பதில்லை என்பது உண்மை என்றால் குருநாதர் சொல்வது அனைத்தும் உண்மையே. இதனை மறக்காமல் மனதில் வைத்துச் செயல்படவேண்டும். வீணாக இதை செய்து கொடு அதை செய்து கொடு என்று கேட்பதும் தவறாகும். ஏனெனில் உமக்கு என்ன வேண்டும் என்பதை குருநாதர் நன்றாக அறிவார். சரியான நேரத்தில் அதை அவர் செய்து கொடுப்பார் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம். இந்நிலையில் இவையாவும் செய்திட முடியுமா என முழுமையாகச் சிந்தித்தபின் முடியும் என்றால் குருவை அணுகி ஏற்றுக் கொள்ளுங்கள். இது தான் உண்மையான நிலை. இவ்விதமே வாழ்வோம் என்று முடிவு எடுத்தால் அவர்களே உபதேசம் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இல்லையென்றால் வாழ்த்துக்கள் மட்டுமே பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வாழ்த்து பெறத் தகுதி பெற்றவர் என்று மட்டும் நினைத்தால் ஆனந்தமாக இருப்பீர்கள். ஏனெனில் எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் இதில் எந்தவித குறையும் இருக்காது ஆசிகள் அருவி போல் கொட்டும். ஆனால் முழுமையாக சரணடைந்துவிட்டால் சமயங்களில் வாய் பேசாது கோலும் பேசும் (சொல்வதை செய்யவில்லையென்றால் தண்டனைகள் கிடைக்கும்) இதையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். எனெனில் முதலில் பக்தனாக இருந்தாய் வாழ்த்துக்கள் கிடைத்தது இரண்டாவது நிலையில் சிஷ்யனாகச் செல்கின்றாய் சிஷ்யன் தவறு செய்தால் சிகிச்சை (தண்டனை) உண்டு. இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் எவ்விதம் உங்களால் செயல்பட முடியும் என்றெல்லாம் சிந்தித்துப் பின்பு குருநாதரை அணுகுங்கள் இல்லையென்றால் மிகவும் கடினம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.