பாடல் #937

பாடல் #937: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்
தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்
தானே யளித்த மகாரத்தை ஓதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

விளக்கம்:

பாடல் #936 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தை தமக்குள் உணர்ந்தபின் அதிலிருந்து வெளிவரும் சக்தியை தமக்குள் உணர்ந்து கொண்டே இருந்தால் சக்கரத்திலிருந்து வரும் சக்திமயம் சாதகரின் உடலைச் சுற்றி உறைபோல் மூடிக்கொள்ளும். அதன் பிறகு ‘நமசிவாய’ மந்திரத்தின் இரண்டாவது எழுத்தாகிய ‘ம’ எழுத்தை செபித்தால் சாதகரின் சதையால் ஆன உடலும் மாணிக்கக் கல்லைப் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

பாடல் #938

பாடல் #938: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கல்லொளி யேஎன நின்ற வடதிசை
கல்லொளி யேஎன நின்றனன் இந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

விளக்கம்:

பாடல் #937 இல் உள்ளபடி சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளி கீழிருந்து மேல் நோக்கி எழும் சுடர் போல உணர்ந்தால் தமது உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இருப்பதை உணர்வார்கள். அதன்பிறகு நமசிவாய மந்திரத்தின் மூன்றாவது எழுத்தாகிய ‘சி’ எழுத்தை செபித்தால் சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளியாகத் தாமே இருப்பதை இறைவன் காட்டி நிற்பான்.

பாடல் #939

பாடல் #939: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்
தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்
தானே யெழுகுண மாவதும் ஓதிடில்
தானே யெழுந்த மறையவ னாமே.

விளக்கம்:

பாடல் #938 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒளியாக தன்னை காட்டி நின்ற இறைவன் குளிர்ந்த சுடர் ஒளியாக நிற்பதையும் அந்த இறைவனே வேதங்களின் பொருளாகவும் அதில் கூறியுள்ள பலவித குணங்களாகவும் தமக்குள் நிற்பதை உணர்ந்து பாடல் #936 #937 #938 இல் உள்ளபடி ’ந’ ’ம’ ’சி’ எழுத்தை செபித்துக்கொண்டே இருந்தால் தனக்குள் மட்டுமில்லாமல் தனக்கு வெளியில் இருக்கும் அனைத்திலும் மறைந்து நிற்பது இறைவனின் தன்மையே என்பதை சாதகர் அறிந்து கொள்வார்.

பாடல் #940

பாடல் #940: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாமவ ராமே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனின் தன்மையை தமக்குள் உணர்ந்து கொள்ள மனிதப் பிறவியை பெற்றுள்ளன. அதனை அறிந்து அனைத்து உயிர்களையும் இறைவனாகப் பார்த்து உணர்பவர்கள் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தில் மறைவாக இருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் வைத்து தியானிக்க அவர்களும் இறைவனாகும் பேறு பெற்று ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தை தாமாகவே உணர்வார்கள்.

பாடல் #941

பாடல் #941: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வியல்பு ஆமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் ஆடுகின்ற இறைவனுக்கு பாதமாக ‘ந’ எழுத்து திருவடியாய் நிற்கும். நாபியாக (தொப்புள்) ‘ம’ எழுத்து நிற்கும். ‘சி’ எழுத்து இருதோள்களாக நிற்கும். ‘வ’ எழுத்து வாயாக நிற்கும். இறைவன் தமக்குள் எழுத்து வடிவாக நிற்பதை கண்டு உணர்ந்த சாதகரின் உயிர் ஒளி மயமாகி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்து அதன் கடைசி எழுத்தாகிய ‘ய’ எழுத்தாக அவர்களின் ஆன்மா நிற்கும்.

பாடல் #942

பாடல் #942: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #941 இல் உள்ளபடி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்த சாதகர்கள் அதனுடன் ஓங்காரம் சேர்த்து ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தின் அனைத்து இயல்புகளையும் அடைவதற்கு அவர்களுக்குள் குருவாக இருக்கும் இறைவன் சிறப்பான வழிகாட்டுவார். அப்படி சிறப்பான நிலையை அடைந்த பிறகு சாதகர்கள் தங்களின் ஆன்மாவின் ஒளி வழியாக இறைவனின் பேரொளியைப் பார்த்து மனம் ஒன்றி இருந்தால் அவர்களுக்குள் ஆன்ம ஒளியாக இருக்கும் இறைவனே அண்ட சராசரங்கள் எங்கும் பேரொளி ஜோதியாக பரவி நிற்கின்றான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #943:

பாடல் #943: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

விளக்கம்:

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. எதையும் கொடுக்கும் வல்லமை பொருந்திய இந்த மந்திரத்தை முறைப்படி குரு உபதேசித்து பெற்று தம்மை பகைவர்கள் போல் சூழ்ந்திருக்கும் வினையால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் போகும்படி அந்த பிரணவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கருத்து: உயிர்களுக்குள் மூச்சுக்காற்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் குருநாதரின் உபதேசம் பெற்ற மந்திரத்தையும் சேர்த்து செபித்து கொண்டே இருந்தால் வினைகளால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் சென்றுவிடும்.

பாடல் #944

பாடல் #944: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்துஇருந் தாரே.

விளக்கம்:

பாடல் #943 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து தமக்குள் இருக்கும் இறைவனை குருவாக உணர்ந்து ‘ஓம்’ எனும் மந்திரத்தோடு ‘நம’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்து மூலாதாரத்தில் பிரணவ மந்திரத்தின் வடிவமாய் இருக்கும் இறைவனை எழுப்பி விட்டு அதனோடு பாடல் #910 இல் உள்ளபடி ‘அம்’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து செபித்து மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்கள் தமக்குள் இறைவன் ஓயாது நடனமாடும் திருச்சிற்றம்பலக் கூத்து கண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

கருத்து: ‘ஓம் நம அம்’ எனும் மந்திரத்தை குருவருளால் உச்சரித்துக் கொண்டே இருக்கும் சாதகர்கள் திருவம்பலக் கூத்தை தமக்குள் தரிசித்து பேரின்பத்தில் இருப்பார்கள்.

பாடல் #945

பாடல் #945: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் ‘நமசிவாய’ எனும் ஐந்து மந்திர எழுத்துக்கள் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல நமசிவாய, மசிவாயந, சிவாயநம, வாயநமசி, யநமசிவா எனும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதலாவது எழுத்தாகவும் அந்த மந்திரத்தின் மற்ற எழுத்துக்களோடும் கலந்து இருக்கின்றது. இந்த மந்திரங்கள் சேர்த்து ஐம்பத்தோரு எழுத்துக்கள் அமைத்து வரையப்படும் திருவம்பலச் சக்கரத்தில் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல இறைவனும் கலந்து நிற்பான்.

பாடல் #946

பாடல் #946: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமாய நவசிம பார்க்கின் மவயநசி
பரமாய சியநம வாம்பரத் தோதிற்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

விளக்கம்:

‘சிவயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘சிவ’ இறைவியையும் ‘நம’ இறைவனையும் ‘ய’ ஆன்மாவையும் குறிக்கும். இந்த ‘ய’ எழுத்தை முதலாகக் கொண்டு

ய ந வ சி ம
ம வ ய ந சி
சி ய ந ம வ
வ சி ம ய ந
சி வ ய ந ம

என்ற முறையில் வரைய வேண்டும். இதன் தொடர்ச்சி அடுத்த பாடலிலும் உள்ளது.