பாடல் #303

பாடல் #303: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

பெருமான் இவனென்று பேசி யிருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

விளக்கம்:

தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம் ஒருவன் சிவன் என்பதை அறிந்து கொள்ள தனக்குள் பேசி கேள்வி கேட்டு கேள்வி ஞானத்தின் மூலம் பெரிய தவம் புரிந்த மானிடர்கள் தேவர்களாவதற்கு மகிழ்ந்து அருள் செய்கிறார் தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய ஆதியிலிருந்து இருக்கும் சிவபெருமான்.

குறிப்பு : அமைதியாக பேசாமல் அமர்ந்து இறைவன் யார் என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு இறைவன் அருளால் இறைவனை அடைவதும் பெரிய தவமே.

பாடல் #304

பாடல் #304: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்று
வாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.

விளக்கம்:

இறைவன் அருளால் வரும் இறப்பும் பிறப்பும் எப்படி வருகிறது என்று தனக்குள் பேசி கேள்வி கேட்டு பிதற்றி அந்த கேள்வி ஞானத்தால் பதில் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து இருந்தால் வாசனை மிக்க மலர்களில் கலந்திருக்கும் நறுமணம் போல பேரொளியாய் திகழும் இறைவனும் நம்மோடு கலந்து நிற்பான்.

பாடல் #305

பாடல் #305: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

விளக்கம்:

சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம். அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால் வானத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனான இறைவனும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாது எண்ணிலடங்காத காலம் அவர்களுடனே இருந்து பேரின்பத்தை அருளுவான்.

பாடல் #306

பாடல் #306: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல்)

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவரவர் அன்றே.

விளக்கம்:

சிறு பிள்ளைகள் மணலில் வீடு கட்டி களிமண் சோறு சமைத்து அதை உண்மையான சோறுபோல பாவித்து சாப்பிட்டு இன்பப்படுவது போல உண்மையில்லாத உலக ஆசைகளை அனுபவித்து இன்பம் அடைந்துவிட்டு இறையருள் கிடைத்துவிடும் என்று நினைப்பது பொய்யானதாகவே இருக்கும். இறைவன் இப்படிப்பட்டவர் அவரை இப்படி அணுகலாம் என்று குறிப்பால் உணர்த்திவிட முடியாத இறைவன் ஒருவர் இருக்கிறார் அவரை அறிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்விஞானம் கூட இல்லாமல் வாழ்க்கையை உலக இன்பங்களின் வழி நடப்பவர்கள் எப்போதுமே இறைவனையும் அறியமாட்டார்கள் தம்மையும் அறியமாட்டார்கள்.

பாடல் #307

பாடல் #307: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.

விளக்கம்:

உலக வாழ்கை வாழ்ந்து இறைவனை அடைய உற்ற துணையாக இருப்பது உயிரும் உடலும் ஆகும். அந்த உயிர் சிவசிந்தனை பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பது கல்வியும் கேள்வியும் ஆகும். அந்த கேள்வி ஞானத்தால் சிவனது திருவடியை சிந்தையில் வைத்திருப்பது இறைவனை அடைய தக்க துணையாகும். அத்தகைய மிகப்பெரிய துணையை கேட்டுப் பெற்றால் பிறவியில்லை.

பாடல் #308

பாடல் #308: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

விளக்கம்:

இறைவனை கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன். இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான். அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன். கல்லாலான பசு எப்படி பாலைத் தராதோ அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.

Image result for lingam


பாடல் #309

பாடல் #309: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசி
ஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

விளக்கம் :

இறைவனை உள்ளத்தில் வைத்து மனதோடு ஒன்றி தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்று உணர்ந்தவர்களும் தன் வாயிலிருந்து பேசும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையாக உணர்ந்தவர்களுக்கும் அசையும் பொருள் அசையாபொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும் அனைத்து உருவங்களிலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும் உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும் போது ஆதியான சிவபெருமானை விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.

பாடல் #290

பாடல் #290: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் வினைப்பயனால் பிறவி எடுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். உயிர்களின் மேல் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் எடுக்கும் உடலோடு உயிராக இறைவனும் கலந்திருப்பதை தெரிந்து கொண்டேன். தேவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகாதேவனான இறைவன் தன்மீது தூய்மையான அன்பு கொண்ட உயிர்களுக்கு தடையேதும் செய்யாமல் உடனே அவர்களின் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதையும் தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் படிப்பதின் மூலமாகவோ அல்லது கேட்பதின் மூலமோ கற்றுக்கொள்ள முடியாத பேரறிவு ஞானத்தை இறைவனது அருளால் கற்றுக்கொண்டேன்.

பாடல் #291

பாடல் #291: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

விளக்கம்:

கல்வி அறிவை குருவின் மூலம் கற்று அறிந்த உயிர்கள் தாம் கற்றுக்கொண்ட அறிவை ஆராய்ந்து பார்த்தால் தாம் கற்று அறிந்த கல்வியினால் கிடைத்த அறிவுக்குள் ஒரு பேரறிவு ஞானம் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள். உயிர்கள் தாம் கற்றுக் கொண்ட உலக கல்விக்குள் உண்மையான அறிவைக் கொடுக்கும் ஞானக் கண்ணை எண்ணித் தியானித்து பேரறிவு ஞானத்தை பெறவேண்டும். அப்படிப் பெற்ற பேரறிவு ஞானத்தை குருவாக இருந்து தன்னை நாடி வருபவர்ளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நயன தீட்சை மூலம் காண்பிக்கமுடியும்.

உள்விளக்கம்: நயன தீட்சை என்பது முட்டை போடும் மீன் வகைகள் முட்டை போட்டதும் தன் முட்டையை பார்த்துக்கொண்டே இருக்கும் சிறிது நேரத்தில் அனைத்து முட்டைகளும் குஞ்சு பொறித்துவிடும் இதுபோல குருவானவர் சீடனை பார்த்ததும் பேரறிவு ஞானமடைய வைக்கலாம்.

பாடல் #292

பாடல் #292: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே.

விளக்கம்:

நமது உடலில் உயிர் இருக்கும் காலத்திலேயே என்றும் நிலைத்திருக்கும் இறைவனின் பாதங்களை தம் உள்ளத்திற்குள் காணுகின்ற பேரறிவு ஞானத்தை கற்றுக்கொள்ளும் வழிகளைத் தேடி கற்றுக் கொண்டால் நாம் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகி அழிந்து போகும். அத்தகைய பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ள சத்தியம் வாக்கு தவறாமல் இறைவனை மட்டுமே எண்ணிப் போற்றித் தொழுது வாருங்கள். அப்படித் தொழுது வந்தால் இறைவன் மணிவிளக்காக நமது உள்ளத்துக்குள் எழுந்தருளி பேரறிவை தந்தருளுவான்.