பாடல் #1348

பாடல் #1348: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செரநதவ ரெனறுந திசையொளி யானவர
காயநதெழு மெலவினை காணகி லாதவர
பாயநதெழு முளளொளி பாரிற பரநதது
மாயநதது காரிருள மாறொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழும் மேல் வினை காண இலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.

பதப்பொருள்:

சேர்ந்தவர் (நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள்) என்றும் (எப்பொழுதும்) திசை (அனைத்து திசைகளுக்கும்) ஒளி (பரவும் ஒளியாகவே) ஆனவர் (இருப்பார்கள்)
காய்ந்து (இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து) எழும் (வருகின்ற) மேல் (உச்ச) வினை (வினைகள்) காண (இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல்) இலாதவர் (அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள்)
பாய்ந்து (அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக) எழும் (மேலெழுந்து வருகின்ற) உள் (ஞானமாகிய) ஒளி (ஒளியானது) பாரில் (உலகம் முழுவதும்) பரந்தது (பரந்து விரியும்)
மாய்ந்தது (அதன் பிறகு அழிந்து போகின்ற) கார் (மாயையாகிய) இருள் (இருளை) மாறு (மாற்றி) ஒளி (ஞானமாகிய ஒளியை) தானே (தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1347 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள் எப்பொழுதும் அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்லுகின்ற ஒளியாகவே இருப்பார்கள். இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து வருகின்ற உச்ச வினைகள் இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல் அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக மேலெழுந்து வருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும். அதன் பிறகு தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு அவர்களுடைய மாயையாகிய இருளை அழித்து ஞானமாகிய ஒளியை கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்.

பாடல் #1349

பாடல் #1349: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியது ஹெள முதலஹரீ மதுவீறாங
களியது சககரங கணடறி வாரககுத
தெளிவது ஞானமுஞ சிநதையுந தெறப
பளியது பஞசாக கரமது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளி அது ஹௌ முதல் ஹ்ரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவு அது ஞானமும் சிந்தையும் தேறப்
பளி அது பஞ்ச அக்கரம் அது ஆமே.

பதப்பொருள்:

ஒளி (பேரொளி அம்சமாகவே) அது (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஹௌ (ஹௌம் எனும் பீஜம்) முதல் (முதலில் இருந்து) ஹ்ரீம் (ஹ்ரீம் எனும்) அது (பீஜத்தை) ஈறு (கடைசியாக வைத்து) ஆம் (முறைப்படி அமைத்து தியானித்தால்)
களி (உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற) அது (அதுவே) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும் இருப்பதை) கண்டு (தமக்குள் கண்டு) அறிவார்க்குத் (அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு)
தெளிவு (உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும்) அது (அதுவே இருந்து) ஞானமும் (உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும்) சிந்தையும் (எண்ணங்கள்) தேறப் (தேர்ச்சி பெறும் ஞானத்தை)
பளி (கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும்) அது (அதுவே இருந்து) பஞ்ச (இறைவனின் எழுத்து வடிவான ஐந்து) அக்கரம் (அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும்) அது (அதுவே) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1348 இல் உள்ளபடி தகுதியானவர்களுக்கு மாயை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்கு உள்ளே இருக்கின்ற ஒளியான நவாக்கிரி சக்கரத்தில் ‘ஹௌம்’ எனும் பீஜம் முதலில் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தை கடைசியாக வைத்து முறைப்படி அமைத்து தியானித்தால் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்றதாக அதுவே இருக்கும். இந்த நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் கண்டு அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும் அதுவே இருந்து உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவு பெறும் அறிவைக் கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும் அதுவே இருக்கும். அது மட்டுமின்றி இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும் அதுவே இருக்கின்றது.

பாடல் #1350

பாடல் #1350: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே சதாசிவ நாயகி யானவ
ளாமே யதோமுகத் துள்ளறி வானவ
ளாமே சுவையொளி யூரோசை கொண்டவ
ளாமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ சதாசிவ நாயகி யானவ
ளாமெ யதொமுகத துளளறி வானவ
ளாமெ சுவையொளி யூரொசை கொணடவ
ளாமெ யனைததுயிர தனனுளு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே சதாசிவ நாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கொண்டவள்
ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே.

பதப்பொருள்:

ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சதாசிவ (அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின்) நாயகி (சரி பாதியான இறைவியாகவும்) ஆனவள் (இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அதோ (இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ) முகத்து (முகத்தில்) உள் (அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற) அறிவு (அறிவாகவும்) ஆனவள் (அவளே இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சுவை (புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு) ஒளி (பார்க்கின்ற உணர்வு) ஊறு (தொடுகின்ற உணர்வு) ஓசை (கேட்கின்ற உணர்வு) கொண்டவள் (ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள்ளே கொண்டவள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அனைத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து) உயிர் (உயிர்களையும்) தன் (தமக்கு) உளும் (உள்ளேயே தாங்கிக் கொண்டவள்) ஆமே (ஆகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின் சரி பாதியான இறைவியாக இருக்கின்றாள். அவளே இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ முகத்தில் அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற அறிவாகவும் இருக்கின்றாள். அவளே புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு, பார்க்கின்ற உணர்வு, தொடுகின்ற உணர்வு, கேட்கின்ற உணர்வு ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள் கொண்டிருக்கின்றாள். அவளே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கிக் கொண்டு இருக்கின்றாள்.

பாடல் #1351

பாடல் #1351: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்
மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனனுளு மாகித தரணி முளுதுஙகொண
டெனனுளு மாகி யிடமபெற நினறவள
மனனுளு நீரனல காலுளும வானுளுங
கணணுளு மெயயுளுங காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.

பதப்பொருள்:

தன் (இறைவியானவள் தனக்கு) உளும் (உள்ளேயும்) ஆகித் (அனைத்தும் ஆகி) தரணி (அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள்) முழுதும் (அனைத்தையும்) கொண்டு (தனக்குள் கொண்டு)
என் (எமக்கு) உளும் (உள்ளேயும்) ஆகி (அனைத்தும் ஆகி) இடம் (எமக்குள் முழுவதும்) பெற (நிறைந்து) நின்றவள் (நிற்கின்றாள்)
மண் (அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின்) உளும் (உள்ளேயும்) நீர் (நீரின் உள்ளேயும்) அனல் (நெருப்பின் உள்ளேயும்) கால் (காற்றின்) உளும் (உள்ளேயும்) வான் (ஆகாயத்தின்) உளும் (உள்ளேயும்)
கண் (எமது கண்ணின்) உளும் (உள்ளேயும்) மெய் (எமது உடலுக்கு) உளும் (உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை) காணலும் (தரிசிக்க) ஆமே (முடியுமே).

விளக்கம்:

பாடல் #1350 இல் உள்ளபடி அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவியானவள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கின்றாள். அவளே எமக்கு உள்ளேயும் அனைத்தும் ஆகி எமக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள். அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின் உள்ளேயும் நீரின் உள்ளேயும் நெருப்பின் உள்ளேயும் காற்றின் உள்ளேயும் ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கின்றாள். அவளே எமது கண்ணின் உள்ளேயும் எமது உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும்.

பாடல் #1352

பாடல் #1352: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணலு மாகுங கலநதுயிர செயவன
காணலு மாகுங கருதது ளிருநதிடிற
காணலு மாகுங கலநது வழிசெயயக
காணலு மாகுங கருததுற நிலலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய்யக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.

பதப்பொருள்:

காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (இறைவி ஒன்றாகக் கலந்து) உயிர் (உயிர்களோடு நின்று) செய்வன (செய்கின்ற அனைத்து செயல்களையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (உயிர்களின் எண்ணங்களுக்கு) உள் (உள்ளே) இருந்திடில் (இறைவி இருக்கின்ற தன்மையையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று) வழி (அவற்றுக்கு ஏற்ற நல் வழியில்) செய்யக் (செல்ல வைப்பதையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (ஆகவே உங்களது எண்ணங்களில்) உற (எப்போதும் இறைவியை வைத்து) நில்லே (தியானித்து இருங்கள்).

விளக்கம்:

பாடல் #1351 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் இறைவியானவள் உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று செய்கின்ற அனைத்து செயல்களையும் தரிசிக்க முடியும். அது மட்டுமின்றி உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கின்ற தன்மையையும் தரிசிக்க முடியும். அது போலவே உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று அவற்றுக்கு ஏற்ற நல் வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். ஆகவே உங்களது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருங்கள்.

பாடல் #1353

பாடல் #1353: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிட மேழு புவனமு மொன்றாகக்
கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிட மெழு புவனமு மொனறாகக
கணடிடு முளளங கலநதெஙகுந தானாகக
கொணடிடும வையங குணமபல தனனையும
விணடிடும வலவினை மெயபபொரு ளாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டு இடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டு இடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டு இடும் வல் வினை மெய்ப் பொருள் ஆகுமே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சாதகம்) இடும் (செய்கின்ற இடத்திலிருந்தே) ஏழு (ஏழு விதமான) புவனமும் (உலகங்களையும்) ஒன்றாகக் (ஒரு உலகம் போலவே ஒன்றாகக்)
கண்டு (தமக்குள் பார்ப்பதை) இடும் (செய்கின்ற சாதகரின்) உள்ளம் (உள்ளம்) கலந்து (அனைத்தோடும் கலந்து) எங்கும் (அனைத்தும்) தான் (தாமாகவே) ஆக (ஆகி இருப்பதை)
கொண்டு (ஒன்றாகப் பார்க்கின்றதை) இடும் (செய்கின்ற சாதகர்) வையம் (உலகத்தில் இருக்கின்ற) குணம் (தன்மைகள்) பல (பலவாறாக இருக்கின்ற) தன்னையும் (குணங்களையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள்)
விண்டு (உயிர்களிடமிருந்து பிரிப்பதை) இடும் (செய்கின்ற) வல் (கொடிய) வினை (வினைகளை எல்லாம் பிரித்து விடுகின்ற) மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மைப்) பொருள் (பொருளாகவே) ஆகுமே (சாதகரும் ஆகிவிடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1352 இல் உள்ளபடி தமது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருக்கின்ற சாதகர்கள் தாம் சாதகம் செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு விதமான உலகங்களையும் ஒரு உலகம் போலவே ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள். அப்படி அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள் அனைத்தோடும் கலந்து அனைத்தும் தாமாகவே ஆகி விடுவது மட்டுமின்றி உலகத்தில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள். அதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #1354

பாடல் #1354: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெய்ப்பொருள் வௌமுதல் ஹௌவது வீறாகக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேவரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெயபபொருள வெளமுதல ஹெளவது வீறாகக
கைபபொரு ளாகக கலநதெழு சககரந
தறபொரு ளாகச சமைநதமு தெவரி
நறபொரு ளாக நடுவிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெய்ப் பொருள் ஒளம் முதல் ஹௌம் அது ஈறு ஆக
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நற் பொருள் ஆக நடுவு இருந்தாளே.

பதப்பொருள்:

மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தின் உண்மைப்) பொருள் (பொருளாகவே அமைந்தது) ஒளம் (‘ஔம்’ எனும் பீஜம்) முதல் (முதலில் ஆரம்பித்து) ஹௌம் (‘ஹௌம்’ எனும்) அது (பீஜம்) ஈறு (கடைசியாக) ஆக (வைத்து முறைப்படி அமைந்து இருக்கும்)
கைப் (அதுவே சாதகரோடு எப்போதும்) பொருள் (சேர்ந்தே இருக்கின்ற பொருள்) ஆகக் (ஆகவும்) கலந்து (அவருடன் கலந்து இருக்கும்) எழு (அவருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற) சக்கரம் (இந்த அமைப்பிலிருக்கும் நவாக்கிரி சக்கரமானது)
தற் (உலகத்தில் தானாகவே நிற்கின்ற) பொருள் (பொருளாக) ஆகச் (ஆகி) சமைந்த (அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற) அமுதேஸ்வரி (அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே)
நற் (நன்மைகள் அனைத்தும் தருகின்ற) பொருள் (பொருளாகவே) ஆக (இருக்கின்ற அந்த சக்கரத்தின்) நடுவு (நடுவிலும்) இருந்தாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1353 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே ஆகிவிட்ட சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமானது ‘ஔம்’ எனும் பீஜம் முதலில் ஆரம்பித்து ‘ஹௌம்’ எனும் பீஜம் கடைசியாக வைத்து முறைப்படி அமைந்து இருக்கும். சாதகருடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற இந்த சக்கரத்தின் பொருளானது அவருடன் கலந்து இருந்து அவருக்குள்ளிருந்து எழுந்து வரும். அப்படி சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற இந்த சக்கரமானது உலகத்தில் தானாகவே நிற்கின்ற பொருளாக ஆகி அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே நன்மைகள் அனைத்தும் தருகின்ற இந்த சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1355

பாடல் #1355: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரி
காலது கொண்டு கருத்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லைக் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாளதி னுளளெ சமைநதமு தெசசுரி
காலது கொணடு கருததுற வீசிடில
நாளது நாளும புதுமைகள கணடபின
கெளது காயமுங கெடிலலைக காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் அதின் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கருத்து உற வீசிடில்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே.

பதப்பொருள்:

தாள் (இறைவியின் திருவடிகளாக இருக்கின்ற) அதின் (நவாக்கிரி சக்கரத்தின்) உள்ளே (உள்ளே) சமைந்த (சக்தியூட்டமாக மாறி) அமுதேஸ்வரி (இருக்கின்ற அமிழ்தத்திற்கு தலைவியான இறைவியின் அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜங்களை)
கால் (மூச்சுக்) அது (காற்றின்) கொண்டு (மூலம்) கருத்து (அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும்) உற (சேர்ந்து) வீசிடில் (அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது)
நாள் (தினம்) அது (அந்த அதிர்வலைகளால்) நாளும் (தினந்தோறும்) புதுமைகள் (பல விதமான புதுமையான நன்மைகள்) கண்ட (தம்மைச் சுற்றி நடப்பதைக் கண்டு) பின் (அதன் பிறகு)
கேள் (அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு) அது (அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின்) காயமும் (உடலுக்கும் எந்தவிதமான) கேடு (கெடுதல்களும்) இல்லை (இல்லாமல் நன்றாக இருப்பதை) காணுமே (சாதகர்களால் காண முடியும்).

விளக்கம்:

பாடல் #1354 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறி இருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்கும் தலைவியாக அந்த இறைவியே இருக்கிறாள். அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜ மந்திர எழுத்துக்களை மூச்சுக் காற்றின் மூலம் அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும் சேர்ந்து அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது அந்த அதிர்வலைகளால் தினந்தோறும் பல விதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதை சாதகர்கள் காணுவார்கள். அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கும் எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும்.

பாடல் #1356

பாடல் #1356: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கேடில்லைக் காணுங் கிளரொளி கண்டபி
னாடில்லைக் காணும் நாமுத லற்றபின்
மாடில்லைக் காணும் வரும்வழி கண்டபின்
காடில்லைக் காணுங் கருத்துற் றிடத்துக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடிலலைக காணுங கிளரொளி கணடபி
னாடிலலைக காணும நாமுத லறறபின
மாடில்லைக காணும வருமவழி கணடபின
காடிலலைக காணுங கருததுற றிடததுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும் வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்து உற்ற இடத்துக்கே.

பதப்பொருள்:

கேடு (சாதகர் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய இடங்களில் எந்தவிதமான கெடுதல்களும்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) கிளர் (தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற) ஒளி (பேரொளியை) கண்ட (தரிசித்த) பின் (பிறகு)
நாடு (சாதகர்கள் தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) நாள் (நாள் திதி) முதல் (முதலாகிய) அற்ற (காலக் குறிப்புகள் அனைத்தும் இல்லாமல் போகும்) பின் (அதன் பிறகு)
மாடு (உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் சாதகருக்கு) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) வரும் (இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு) வழி (இறைவனை அடையும் வழிகளை) கண்ட (தமக்குள் கண்டு கொண்ட) பின் (பிறகு தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள்)
காடு (இறைவனை அடைய தடையாக இருக்கின்ற கொடிய வினைகள் சூழ்ந்து இருக்கின்ற காடுகளும்) இல்லை (தம்மை நாடி வருகின்ற உயிர்களுக்கு இல்லாமல் போவதை) காணும் (காண்பார்கள்) கருத்து (சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை) உற்ற (அனுப்பிய) இடத்துக்கே (இடத்தில் எல்லாம்).

விளக்கம்:

பாடல் #1355 இல் உள்ளபடி சாதகர்கள் அனுப்பிய மந்திர அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கு எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும். சாதகர்கள் தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற பேரொளியை தரிசித்த பிறகு தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில் இல்லாமல் போவதைக் காண்பார்கள். அதன் பிறகு வருடம் மாதம் நாள் மணி நிமிஷம் வினாடி நொடி ஆகிய காலத்தைக் குறிக்கின்ற அனைத்தும் இல்லாமல் போகும். சாதகர்களும் தமது உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லாமல் இருப்பதைக் காண்பார்கள். அதன் பிறகு இறைவனை அடைய வேண்டும் என்று சாதகரை நாடி வருகின்ற உயிர்களுக்கு இறைவனை அடையும் வழிகள் எது எது என்று தமக்குள் கண்டு அறிந்து கொண்டு அவற்றை தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள். சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களைச் சுற்றி காடு போல சூழ்ந்து இருக்கின்ற கொடிய வினைகள் இல்லாமல் போவதையும் காண்பார்கள்.

பாடல் #1357

பாடல் #1357: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உற்றிட மெல்லா முலப்பிலி பாழாகக்
கற்றிட மெல்லாங் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லைத் தானில்லைச்
சற்றிட மில்லைச் சலிப்பற நின்றிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறறிட மெலலா முலபபிலி பாழாகக
கறறிட மெலலாங கடுவெளி யானது
மறறிட மிலலை வழியிலலைத தானிலலைச
சறறிட மிலலைச சலிபபற நினறிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற இடம் எல்லாம் உலப்பு இலி பாழ் ஆகக்
கற்ற இடம் எல்லாம் கடு வெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்ற இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.

பதப்பொருள்:

உற்ற (சாதகரிடமிருந்து வெளிவந்த மந்திர அதிர்வலைகள் சென்ற) இடம் (இடங்களில்) எல்லாம் (எல்லாவற்றிலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற) உலப்பு (அழிவு என்பதே) இலி (இல்லாத இறை சக்தியினால்) பாழ் (கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து) ஆகக் (போய் விடும்)
கற்ற (சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும்) இடம் (ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு) எல்லாம் (அனைத்தும் அழிந்து போய்) கடு (அந்த இடம் வெற்று) வெளி (இடமாக) ஆனது (ஆகி விடும்)
மற்ற (அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற) இடம் (இடம் என்று) இல்லை (எதுவும் இல்லாமல் போய் விடும்) வழி (அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று) இல்லை (எதுவும் இல்லாமலும்) தான் (தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும்) இல்லை (இல்லாமல் இருப்பார்)
சற்ற (அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற) இடம் (இடங்கள் எதுவும்) இல்லை (இல்லாமல் போய் விடும்) சலிப்பு (ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ) அற (அடைந்து விடாமல்) நின்றிடே (தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1356 இல் உள்ளபடி சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற அழிவில்லாத இறை சக்தியினால் கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து போய் விடும். சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும் ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு அனைத்தும் அழிந்து போய் அந்த இடம் வெற்று இடமாக ஆகி விடும். அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற இடம் என்று எதுவும் இல்லாமல் போய் விடும். அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று எதுவும் இல்லாமலும் தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும் இல்லாமல் இருப்பார். அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற இடங்கள் எதுவும் இல்லாமல் போய் விடும். ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ அடைந்து விடாமல் தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பு:

சமாதி நிலையில் இருக்கின்ற சாதகர்கள் நிலையை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.