பாடல் #311

பாடல் #311: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலவென்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்புஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தை அடைந்து இறைவனை உள்ளத்துள் உணரக்கூடிய உயிர்கள் எப்போதும் அவனை வணங்கிப் பின்பற்றி நல்வழியிலேயே வாழ்கின்றனர். உண்மை ஞானம் பெறாதவர்கள் உலக ஞானம் நிறைய இருப்பதாகச் சொல்லிகொண்டு இருப்பார்கள். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவனைப் பற்றிய உண்மை ஞானத்தை கற்று அறியாதவர்கள் தமக்குள்ளும் அவன் இரண்டறக் கலந்திருப்பதை அறிய மாட்டார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.