பாடல் #1650

பாடல் #1650: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

புண்ணிய னெந்தை புனித னிணையடி
நண்ணி விளக்கென்ன ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவது
மண்ண லிறைவனருள் பெற்ற போதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணிய னெநதை புனித னிணையடி
நணணி விளககெனன ஞானம விளைநதது
மணணவ ராவதும வானவ ராவது
மணண லிறைவனருள பெறற பொதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என்ன ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.

பதப்பொருள்:

புண்ணியன் (புண்ணியமே வடிவாகிய) எந்தை (எமது தந்தையும்) புனிதன் (புனிதனுமாகிய இறைவனின்) இணை (இணையில்லாத) அடி (திருவடிகளை)
நண்ணி (தேடி அடைந்து) விளக்கு (உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே) என்ன (என்று கேட்டுக் கொள்ள) ஞானம் (அவரது திருவருளால் ஞானம்) விளைந்தது (எமக்குள் விளைந்தது)
மண்ணவர் (தெய்வங்களுக்கு சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள்) ஆவதும் (ஆவதும்) வானவர் (வானுலகத்திற்கு சென்று தேவர்கள்) ஆவதும் (ஆவதும்)
அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) இறைவன் (இறைவனின்) அருள் (திருவருளை) பெற்ற (பெற்ற) போதே (போதே கிடைக்கும்).

விளக்கம்:

புண்ணியமே வடிவாகிய எமது தந்தையும் புனிதனுமாகிய இறைவனின் இணையில்லாத திருவடிகளை தேடி அடைந்து உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே என்று கேட்டுக் கொள்ள அவரது திருவருளால் ஞானம் எமக்குள் விளைந்தது. அப்படி அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருளால் ஞானம் விளைந்த போதே தெய்வங்களுக்கு சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள் ஆவதும் வானுலகத்திற்கு சென்று தேவர்கள் ஆவதும் முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.