அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #9

11-12-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நெறியில் எவ்விதம் வாழ வேண்டும் என்று ஓர் மகானிடம் கேட்ட கேள்விக்கு எச்சை இலையை போல் இருத்தல் வேண்டும் என்று கூறினார் அதன் அர்த்தம் என்ன?

சாதாரண நிலையில் அவரவர் சற்கர்மங்கள் (தினந்தோறும் செய்யும் செயல்கள்) செய்யும் காலங்களில் தீமை தரும் செயல்கள் எதுவென்றும் நலம் தரும்செயல்கள் எதுவென்றும் நன்கென உணர்ந்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் இரண்டும் அதிகரிக்க முடிவினை (பிறவி இல்லாமை) காணாது என்கின்ற ஓர் விதியும் உண்டு. இது குடும்பஸ்தர் தொழில் செய்கின்றவர் அனைவருக்கும் பொருத்தமாகும். ஆகவே சிந்தித்து செயல்படுதல் வேண்டும். நலம் தரும் செயல்களில் ஈடுபடவேண்டும். ஆன்மீக பாதையில் முழுமையாக செல்வோர்க்கு அனைத்தும் இறைவன் வழி என விட்டுவிடுதல் வேண்டும். இதற்காகவே எச்சை இலையை கூறி விட்டார். எச்சை இலையானது காற்று அடித்தால் குப்பையில் செல்லும் வீதியில் செல்லும் ஏன் வீட்டுக்குள்ளும் பறந்து வரும் இந்நிலை போல் இருத்தல் வேண்டும். எங்கு இறைவன் உம்மை தள்ளுகிறானோ அந்நிலையை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்பது மட்டும் இல்லாது அதுவும் இறைவனின் கருணை என எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக நிலையில் சூழ்நிலைகளோ இடங்களோ முக்கியத்துவம் அல்ல. பற்று அறுக்கப்படுகின்றது என்றால் எத்தலமும் (இடம்) இறைவன் தலமே. இந்நிலையும் இறைவன் அளித்ததே என ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இருப்பினும் கலியுகத்தில் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் நாடுவோர் அனைத்தும் வேண்டும். பின்பு இறைவனும் வேண்டும் என எண்ணுகின்றனர். அனைத்தும் என்பது இறைவன் அளித்ததே என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #8

14-11-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்விதம் வழிபாடு நடத்துவது எவ்விதம் வழிபடுவது என்ன படைப்பது?

முதன்மையில் வழிபடும் முன்னதாக பூரண சரணாகதி அடையவேண்டும். பூரண சரணாகதி இல்லையேல் முழுமையாக பூஜையிலோ ஜெபத்திலோ ஈடுபட இயலாது. இத்தகைய நிலையில் வழிபடும் காலத்தில் முதலில் முழுமையாக சரணாகதி அடையுங்கள். பின்பு ஜெபிக்க, மனதில் எவ்வித சச்சரவுகளும் உண்டாகாது தடைகளும் நேரிடாது. நாம் என்ன உணவு உண்கின்றோமோ அதை தைரியமாக படைத்திடலாம். தகாதது (ஆகாதது) படைத்தால் என்ன ஆகும் என்று சிலர் அஞ்சுவது (பயப்படுவது) உண்டு. இதை மாற்றும் திறமை தெய்வங்களுக்கு உண்டு. நாம் உண்ண அல்லது குடிக்க பயப்படுவதை இறைவனுக்குப் படைத்தல் ஆகாது. புஷ்பங்கள் (பூக்கள்) இயன்ற அளவில் நல் கந்தத்துடன் (வாசனையுடன்) இருத்தல் வேண்டும். அவ்விதம் கிடைக்காவிடில் பன்னீர் மற்றும் சந்தனத்தை அதில் கலந்து புஷ்பத்தை உபயோகிப்பது நலமாகும். இவ்விதம் இருந்தபோதிலும் ஏதும் படைக்காதபோதும் சிறிது நீரையாவது நித்யம் (எப்போதும்) வைத்தல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

18-10-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நிலையில் புத்தர் என்கின்றவரை பின்பற்றுவோர்கள் அம்மதத்திற்கு புத்திசம் என்றும் முகம்மதை பின்பற்றுவோர்கள் முகம்மதியர் என்றும் கிறிஸ்துவை பின்பற்றுவோர்கள் கிறிஸ்துவர் என்றும் அவரவர் மதத்திற்குப் பெயர் சூட்டினார்கள். இவ்விதம் இருக்க பாரதத்தில் இந்து மதம் என்று கூறுகின்றார்கள் இது எப்படி வந்தது?

பொதுவாகப் பலர் தன் மதத் தலைவர்களின் பெயர்களைப் பொருத்தி அம்மதத்திற்குப் பெயரும் அளித்து அதனைப் பின்பற்றுகின்றார்கள். ஆயினும் இதிலிருந்து இந்து மதம் மாறானது. முன்காலத்தில் பின்பற்றும் வழிகள் இருந்தது. இவைகளுக்குப் பெயர்கள் யாரும் சூட்டவில்லை. பிற்காலத்தில் இவை சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்டுள்ளன. மதத்தில் நடக்கும் வழிகள் பல வழிகள் பல தத்துவங்கள் உள்ளது. இவை அனைத்திற்கும் இப்பெயரைச் சூட்டினார்கள். தனிப்பெயர் இதற்கு இல்லை. சனாதன தர்மம் என்று கூறிக்கொண்டால் இதற்குப் பொருள் நல் நெறியில் நடத்தும் வழி என்பதேயாகும். அதாவது மற்றவர்கள் தன் மதத் தலைவர்களின் பெயரைச் சூட்டிப் பின்பற்றினார்கள். இங்கு நம் நாட்டில் இந்து எனக் கூறிக்கொண்டால் அவர்களில் பல ரிஷிகள் ஞானிகள் வரிசையாகத் தோன்றி இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் பெயரில் இம்மதம் செயல்படவில்லை. தத்துவங்களின் அடிப்படையில் இந்து மதம் நடக்கின்றது இங்குத் தனி நபருக்கு இடமில்லை ஏனெனில் தர்மங்கள் பொதுவானது. இந்து மதம் எனக் கூறிக்கொண்டால் இங்கே ஆன்மீகத் தத்துவங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்தத்துவங்களை எடுத்துரைப்பவர்களுக்கு அல்ல. ஏனெனில் எடுத்துரைப்போர் மாள்வார்கள் (இறந்து போவார்கள்) அவர்கள் கூறியது தொடர்ந்து நிற்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6

24-8-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மார்க்கங்கள் பல உண்டு இதில் இரண்டு மார்க்கங்களை சேர்த்து செய்தால் ஆகாதா?

ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம் என்பதெல்லாம் உண்டு. இவையாவும் கலந்தும் சாதனைகள் செய்ய முடியும். இருப்பினும் பக்தி மார்க்கத்துடன் யோக மார்க்கத்தை எப்படி இணைப்பது என்பதெல்லாம் ஓர் பெரும் சர்ச்சை ஆகிறது. பொதுவாக ஓர் மனிதனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு என்னவென ஆராய்தல் வேண்டும். ஒருவன் ஜீவனுடன் (உயிருடன்) இருக்க பிரதானமாக நாம் காண்பது சுவாசமே. சுவாசம் நிற்க மாண்டு (இறந்து) விட்டான் என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இச்சுவாசமே இவ்வுடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இணைப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இது இப்படியிருக்க சுவாசத்தை கவனித்தல் வேண்டும். பொதுவாக சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிடும் காலத்தில் அதை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும். இதை விட நிதானமாக வெளிவிடுதல் வேண்டும். சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓர் மந்திரம் சொல்ல காற்றுடன் மந்திரமும் உள் செல்ல பெரும் நன்மைகள் உண்டாகும். இவ்விதமே காற்று வெளி செல்லும் காலத்தில் அம்மந்திரத்தின் மறுபகுதி சொல்ல நன்மை தரும். ஏனெனில் உள் சென்ற காற்று மந்திரத்துடன் வெளிவந்து வியாபிக்கும் (பரவும்). உள்சென்ற காற்று தனக்கு மட்டும் உபயோகமாகியும் வெளி செல்வது மற்றவர்களுக்கும் பயன் கொடுக்கும் என்கின்ற தத்துவம் இதில் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் சுவாசம் உள்ளிழுக்கும் காலத்தில் ஓங்காரத்தை (ஓம்) மனதிற்குள் உச்சரித்தும் வெளிவிடும் காலத்தில் தன் இஷ்ட தெய்வத்தை கூறுவதும் பெரும் நன்மை அளிக்கும். இதன் வழியாக யோக நிலைகளும் பக்தி மார்க்கமும் ஒன்று கூடும். இதனை கடைபிடித்து வர இச்சுவாசமானது பின்பு அனுநிலையில் நரம்பு நாடிகளில் ஊடுருவ இது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. படிப்படியாக சுவாசம் வாய் மூக்கு வழியாக மட்டும் அல்லாது சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியாகவும் பிராணன் (காற்று) உள் சென்று வெளியாகும். இதன் வழியாக கோஷங்கள் உணர்ந்து அதன் பிறகு ஆன்மாவை உணர இயலும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #5

28-7-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நன்கென கற்றோர் அறிவுள்ளோர் பாண்டித்யம் உள்ளோர் மகாபாதகங்கள் செய்வது ஏன்?

கல்லாதோர் செய்ய அஞ்சும் (பயப்படும்) பாதகங்கள் இவர்கள் செய்கின்றனர். அப்போது கல்வி எதற்கு என்று ஓர் வினா இங்கு கேட்கப்படுகிறது. கல்வி என்பது இருவகையாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒன்று அறிவும் ஒழுக்கமும் நலமும் தரும் கல்வி. மற்றொன்று வெறும் தகவல்களை தரும் கல்வியாகும். இத்தகைய தகவல்கள் நன்கென படித்தும் புள்ளி விவரங்களை உணர்ந்தும் சமயங்களில் இதனை கூறியும் எழுதியும் காட்டுவது வெறும் பாண்டித்யம் ஆகும். இத்துடன் ஒழுக்கமும் அறிவும் குறிப்பாக நல்அறிவு சேராது இருந்தால் அது கல்வியே இல்லை. கல்லாதோர் பலர் பெருமளவில் ஒழுக்கமும் அறிவாற்றலும் படைத்து நேர்வழியில் செல்கின்றனர். பாண்டித்யம் மேல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் பலர் தீய வழிகளிலும் மனம் வக்ர நிலை கொண்டு செயல்படுகின்றனர். இதிலும் நல்லோர் உள்ளனர். கற்றோர்களில் சிலர் தீயவர்களும் உண்டு. கல்லாதோர்களில் பல மகான்களும் உண்டு.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #4

30-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நல்லதோர் விக்னம் தீர்ப்போனை (வினாயகர்) வினாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிம்பம் உண்டாக்கி, இதனை பூஜை செய்தபின் சில நாட்கள் கழித்து நீரில் எறிவதும், தசரா காலங்களில் துர்க்கையை மண்ணில் உருவாக்கி, பூஜை செய்த பின் நீரில் எறிந்து சமயங்களில் மனிதர்கள் கண்ணீரை விடுகின்றனரே இதன் பொருள் என்ன?

வீட்டில் ஓர் குழந்தை பிறக்க அக்குழந்தை வடிவம் எடுத்ததால் ஆத்மா உண்டு என்று உணர்கிறோம், இது வளர்ந்து படித்து திருமணம் குழந்தைகள் உண்டாகிய பின் இறக்க இதனை சடங்குகளுடன் அக்னியிலோ, இல்லை பூமிக்கோ செலுத்துகிறோம், கண்ணீர் தழும்ப திருப்புகின்றோம், இதனை உணர்ந்தால் வினாவுக்கு விடை எளிதாக உணர முடியும், வணங்குவது மூர்த்தியை அல்ல, அதைக்குறிக்கும் சக்தியை, இதை உணர்த்திடும் வழியாக மூன்று நாள் நன்றாக அதனை பூசித்த பின் சில நாட்கள் கழித்து நீரில் கலந்து விடுகின்றோம், பஞ்ச பூதங்களில் ஒன்றானது அப்பூதமோடு கலந்து விடுகிறது, மண் மண்ணாகி விடுகிறது, இருப்பினும் அச்சக்தி பொதுவாக அங்கு நிரம்பி நிற்கின்றது என அறிந்து கொள்ள வேண்டும், மனிதன் தற்காலிக நிலையை உணர்த்திடவே இச்சடங்குகளை செய்து வருகின்றோம், பஞ்ச பூதங்களில் உருவானது அப்பூதங்களில் கலந்து விடும் என்றும் அதனை ஆட்டுவிக்கின்ற சக்தியானது என்றும் இருக்கும் என்பதை உணர்த்திடவே இத்தகைய ஓர் சிறு நாடகம் நடத்தப்படுகின்றது.

பாடல் #736

பாடல் #736: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.

கருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.

பாடல் #737

பாடல் #737: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.

விளக்கம்:

சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.

பாடல் #738

பாடல் #738: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளருகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #734 இல் உள்ளபடி நெற்றி நடுவில் கண்ட நீல நிற ஜோதியும் நான்கு கலைகளைக் கொண்டு ஏழு ஆதாரச் சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும் உடலை முழுவதும் மூடியிருக்கும் தோலும் தமக்குள் உணர்ந்த உண்மை ஞானமாகிய மெய்யுணர்வானது உடலுக்கு சிறந்த மருந்தாகி மான் குட்டி கீரையைத் தின்று வளர்வது முதிர்ச்சி அடைவது போல மெய்யுணர்வைத் தின்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகிறது.

கருத்து: அகயோகத்தை முறையாக செய்தால் மெய்யுணர்வை பெற்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடையும்.

திருமூலர் வழிபாட்டு பாடல்

சர்வமங்கள குருதேவா
சிவப்பிரியா மகாதேவா
ஞானரூபா அருள்தேவா
சத்குருவே நமோநமஹ

கைலாச வாசமது கண்டனயே
சிவலோக அருள்யாவும் பெற்றனயே
நட்பினை நாடி வந்தனயே
தில்லையில் தாண்டவம் கண்டனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

கோக்களின் துயரம் தீர்த்தனயே
சுந்தரன் உடல்தனை இழந்தனயே
இடையன் உடல்தனை ஆட்கொண்டனயே
திருமூலர் என நாமம் பெற்றனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

திருவாவடுதுறை தலமது அடைந்தனயே
கோமுக்தீஸ்வரர் ஆலயம் கண்டனயே
இங்கும் தவக்கோலம் பூண்டனயே
ஆண்டுகள் மூவாயிரம் அமர்ந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

ஆண்டுக்கோர் முறை விழித்தனயே
பாடல் ஒன்றினை அளித்தனயே
இவ்விதம் மந்திர மாலையும் படைத்தனயே
திருமந்திரம் மூவாயிரம் தந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

பின் உடல்தனை விட்டும் பிரிந்தனயே
தில்லைநாதனுடன் காலந்தனயே
நந்தியில் தஞ்சம் கொண்டனயே
இன்றும் இங்கும் அருள்புரிந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா.

குருநாதர் கே.வி. நாராயணன்
ஆதி அருணாச்சலசித்தர்