பாடல் #670

பாடல் #670: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

விளக்கம்:

அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்பவர்களுக்கு எட்டு சித்திகள் கிடைப்பது மட்டுமன்றி ஆத்ம அறிவு முதல் அண்டசராசரங்கள் வரை அறிந்துகொள்ள முடியும். நமக்குள் இருக்கும் இறைவனது அருளால் அந்த இறைவனின் சக்தியானது நமக்குள்ளே எட்டுவித சித்திகளையும் உணர்த்திவிடும்.

கருத்து: அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்தால் இறைவனின் அருளால் எட்டுவித சித்திகளையும் பெற்று பேரறிவையும் அறியலாம்.

பாடல் #671

பாடல் #671: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இருக்கல்பர காட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.

விளக்கம்:

அட்டமா சித்திகளோடு அழகுமிகுந்த பரம்பொருளான இறைவனும் தனக்குள் வரப் பெற்றவரே சித்தர் ஆவார். இவர்கள் தாம் இருக்கும் இடத்திலிருந்தே பரலோகத்தோடு ஒன்றி தம் உள்ளத்துள் பரம்பொருளான இறைவனை தரிசிக்கக்கூடியவர்கள். இவ்வருள் பெற்றவர்கள் இருக்கும் இடம் தேடி அட்டமா சித்திகளைச் சார்ந்த பல சித்திகளும் தானே வந்து சேரும்.

கருத்து: அட்டமா சித்திகளோடு இறைவனையும் தமக்குள் பெற்றவரே சித்தர் ஆவார்.

பாடல் #672

பாடல் #672: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலே ஏற்றிச் செல்வதால் கிடைக்கும் சக்தியானது நமது சிற்றறிவை மாற்றி பேரறிவைக் கொடுக்கும். அதன்பின் அந்நாக்கில் அமுதம் ஊறியவுடன் தீமைகளை அகற்றி யோகத்திலிருக்க வல்லவர்களுக்கு அவர்கள் எந்த உலகத்திற்குச் சென்றாலும் அதைச் சார்ந்திருக்கக்கூடிய நல்ல உடம்பு கிடைக்கும். அவ்வாறு வெவ்வேறு உலகங்களுக்கு ஏற்ப உடலை மாற்ற முடிவதே அணிமா என்னும் சித்தியாகும்.

கருத்து: குண்டலினி சக்தியை சகஸ்ரதளத்திற்கு ஏற்றுபவர்களுக்கு எல்லா உலகத்தையும் சார்ந்திருக்கக்கூடிய உடல் என்னும் அணிமா சித்தி கிடைக்கும்.

பாடல் #673

பாடல் #673: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

விளக்கம்:

அணிமா சக்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு யோகப் பயிற்சிகளை விடாமல் செய்து வந்தால் அணிமா சித்தியானது நிரந்தரமாகக் கைவரப் பெறும். அவ்வாறு பெற்றபின் யோகப் பயிற்சி செய்தவரின் உடல் பஞ்சைவிட மெலியதாகி இருந்தாலும் வலிமையானதாகவும் எவராலும் வெல்ல முடியாததாகவும் இருக்கும்.

கருத்து: அணிமா சித்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு விடாமல் பயிற்சி செய்துவர நிரந்தரமாகி உடல் பஞ்சைவிட மெலியதாகி எவராலும் வெல்லமுடியாமல் இருக்கும்.

பாடல் #674

பாடல் #674: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.

விளக்கம்:

அணிமா என்கின்ற சக்தியானது கைவரப் பெற்ற பின்னும் விட்டுவிடாமல் யோகப் பயிற்சி செய்து முடிந்த ஐந்தாண்டு காலமும் தான் பயிற்சி செய்யும் யோகத்தின் வழியிலிருந்து மாறாது இருக்க இலகிமா என்கின்ற சித்தியும் கிடைக்கும்.

கருத்து: அணிமா என்னும் சித்தி கிடைத்தபின் ஐந்தாண்டுகள் இடைவிடாமல் யோகப் பயிற்சி செய்தால் இலகிமா என்னும் சித்தி கிடைக்கும்.

பாடல் #675

பாடல் #675: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

விளக்கம்:

இலகிமா என்னும் சித்தி கிடைத்து இறைவனை தரிசித்தபின் தாமே ஒளி உடம்பாய் மாறி ஒளி உடம்போடு இருக்கப் பால் போன்ற வெண்மையான ஒளியாகி எங்கும் பரந்து இருக்கும் பேரொளியாய் உண்மைப் பொருளாகவும் உள்ள இறைவனை தரிசிக்கலாம்.

கருத்து: இலகிமா சித்தியடைந்தபின் வெண்மையான ஒளி உடம்பாய் மாறி உண்மைப் பொருளான இறைவனை தரிசிக்கலாம்.

பாடல் #676

பாடல் #676: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

விளக்கம்:

அணிமாவும் இலகிமாவும் கிடைத்தபின் உண்டான உண்மை ஞானமாகிய பேரறிவை உணர்த்தும் அருள் சக்தியுடன் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மாயை விலகி மறைந்திருந்த மகிமா எனும் சித்தி நமக்குக் கிடைக்கும்.

கருத்து: உண்மை ஞானமாகிய பேரறிவும் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மகிமா எனும் சித்தி கிடைக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

25-4-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஞானிகள் எவ்வாறு இருப்பார்கள்?

பற்று இல்லாத நிலையுடன் பேரன்பு கூடியும் எதனிடமும் பற்று இல்லாத போதும் தன்னுடைய அன்பானது உலகிற்குக் கிடைக்கட்டும் என்கின்ற நிலையுடனும் விசேஷ ஆடைகள் இல்லாமல் விசேஷ அறிகுறிகள் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலையுடனும் இருப்பார்கள். ஆசைகள் வெறுப்புகள் விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி ஒழித்து விட்டு இறைவன் ஒருவனே தம்முடைய சொத்து இறைவன் மட்டுமே தம்முடைய ஆனந்தம் இறைவன் ஒருவனே தமக்கு அனைத்தும் என்கின்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையை நீங்கள் எப்படி அடைய முடியும் என்கின்ற கேள்விக்கு விடை எளிதானது. அவர்கள் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்நிலையில் சிறிது சிறிதாக நாம் விரும்பும் உணவிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நம்முடைய ஆசைகள் வெறுப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை நீக்கினால் அந்த உணவிற்கும், பழக்கவழக்கத்திற்கும் நாம் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வாறு விடுபட்டால் மற்ற அனைத்தும் எளிதாக விடுபட்டுச் சென்று விடும். மேலும் துறவு சென்றவன் சிவனே என அமர்வான். அவன் தன்னுடைய அடுத்தத் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஏனெனில் அனைத்தும் இறைவன் அளிப்பான் என்கின்ற பூரண நம்பிக்கை விசுவாசம் சரணாகதி ஆகிய அனைத்தும் அவனுக்கு உண்டு. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் முழுமையாகச் சரணடைந்து விட்டோம் என்றால் நமக்கு வேண்டியது அனைத்தும் நாம் இருக்கும் இடத்தைத் தேடி வரும் என்பது அதன் தத்துவம் ஆகின்றது. அவ்விதம் நாம் இருக்கும் இடம் தேடி வருமா? என்று சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஞானியின் நிலையை அடைவது கடினமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

29-3-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகப் பாதையில் இறைவன் திருவடி அடைய நம்முள் இருக்கும் இறைவனின் குரல் எவ்விதம் ஓர் வழிகாட்டியாக உள்ளது?

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சிந்தனை அதாவது நமது அறிவை உபயோகித்துச் சிந்தித்து அப்பாதையில் செல்ல ஓர் அளவிற்கே இயலும். நமது அறிவினைக் கொண்டு சிந்தித்துச் செல்வது நல்லது தான். ஆனால் அது ஓர் அளவிற்குத்தான் பயன்படும். அதற்கு மேலும் செல்ல வேண்டுமானால் நமக்குள் தோன்றக்கூடிய யுக்தி (Intuition) என்பது தான் கொண்டு போக முடியும். அதாவது யுத்தி என்பது என்னவென்றால் நமக்கு உள்ளே வாழும் தெய்வத்தின் வழிகாட்டுதலே ஆகும். அந்தத் தெய்வத்தின் குரலினைக் கேட்டு அவ்வழியாக இறைவனை அடைய முடியும். அந்தத் தெய்வம் நமக்குள் எப்படிக் குரல் கொடுக்கக்கூடும் என்றால் நாம் இறைவன் மீது வைக்கும் உண்மையான முழுமையான அன்பினாலே ஆகும். ஆகவே இறைவனை அடைய நம் அறிவாற்றலால் ஓரளவிற்கு முடியும் என்றால் நமக்குள் இருக்கும் இறைவனின் வழிகாட்டுதலால் முழுமையாக அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

01-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது துயரம் எது என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும். ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி. சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும். அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.