பாடல் #1101

பாடல் #1101: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.

விளக்கம்:

பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி அதன் பயனாக பேரறிவு ஞானத்தைக் கொடுத்து அந்த ஞானத்தின் பயனாக தெளிவான சிந்தனையைக் கொடுத்து அதன் பயனாக பேரின்பத்தை அடைய வைத்து அதன் பயனாக பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவை சேர வைத்து அதன் பயனாக எம்மையும் சோதி உருவம் பெற வைத்து எமது ஆன்மா முக்தியடையும்படி செய்து எம்மை முழுவதும் ஆட்கொண்டாள்.

பாடல் #1102

பாடல் #1102: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கொண்டனள் கோலங் கோடியவ னேகங்கள்
கண்டன ளெண்ணென் கலையின் கணமாலை
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

விளக்கம்:

பாடல் #1101 இல் உள்ளபடி எம்மை உய்யும் படி செய்து ஆட்கொண்ட சோதியான வயிரவி உயிர்களும் உய்வதற்காக அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்ப பல கோடித் தோற்றங்களுடன் உயிர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். உயிர்களின் அறியாமையை நீக்குவதற்கு அறுபத்து நான்கு கலைகளையும் அருளி அவற்றின் உச்சமாகவும் இருக்கின்றாள். உயிர்களின் வெளிப்புற இருளை நீக்குவுதற்கு ஆகாயத்தில் சூரியன், சந்திரன், மூலாதார அக்னி ஆகிய மூன்று விதமான ஒளிகளை அருளினாள். சாதகர்களின் தலை உச்சிக்கு மேல் வீற்றிருந்து உலகத்தை அவரோடு பிணைத்து நன்மை புரிபவளாக இருக்கின்றாள்.

கருத்து: வயிரவியானவள் உயிர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற உருவத்துடன் அவர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். சாதகர்களின் உள்ளே இருக்கும் அறியாமையாகிய இருளை அறுபத்து நான்கு கலைகளின் மூலம் நீக்கி வெளியே இருக்கும் இருளை சூரிய சந்திர அக்னி ஒளிகளின் மூலம் நீக்கி உலகத்தோடு அவரை பிணைத்து (ஒன்றோடு ஒன்று கலந்து) நன்மை புரிகின்றாள் வயிரவி.

பாடல் #1103

பாடல் #1103: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கு மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

விளக்கம்:

பாடல் #1102 இல் உள்ளபடி சாதகரை உலகத்தோடு பிணைத்து நன்மை புரிகின்ற வயிரவியானவள் உலகோர் செய்யும் அனைத்து விதமான தவத்தின் தலைவியாக இருக்கின்றாள். அந்த தவத்தின் பயனாக சாதகரின் மாயையை நீக்கி அருளுகின்ற மனோன்மணியாகவும் இருக்கின்றாள். அவளை அமைதியான மன நிலையில் வேறு எண்ணங்கள் இல்லாமல் புகழ்ந்து போற்றி வணங்குங்கள். அப்படி வணங்கினால் கொடுமையான இந்த உலக வாழ்க்கையை மறுபடியும் அனுபவிக்காத படி உங்களின் பிறவிகளை நீக்கி அருளுவாள்.

பாடல் #1104

பாடல் #1104: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி யிளம்பிறை யேந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதுஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1103 இல் உள்ளபடி சாதகர்களின் பிறவிகளை நீக்கி அருளுகின்ற வயிரவி தேவியானவளின் உருவத்தை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம். மூங்கில்களைப் போல் மெல்லிய அழகுடன் வலிமை பொருந்திய தோள்களை உடையவளும், நறுமணம் கமழுகின்ற மென்மையான மலர்களை சூடியிருப்பவளும், பேரழகு பொருந்திய கூந்தலை உடையவளும், இளம் பிறை நிலாவை தனது தலையில் ஆபரணமாக சூடியிருப்பவளும், தூய்மையான சடை முடியைக் கொண்டு இருப்பவளும், திரிசூலத்தை தனது கைகளின் ஏந்தியிருப்பவளும், பேரழகு பொருந்தியவளுமான வயிரவி தேவி எமது உள்ளத்தை அவளுக்கு விருப்பமான இடமாக ஏற்றுக் கொண்டு அதிலே இன்பத்துடன் வீற்றிருந்தாள்.

பாடல் #1105

பாடல் #1105: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இனியதென் மூலை யிருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிபடு வித்தநன் சார்பு படுத்து
நனிபடு வித்துள்ளம் நாடிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1104 இல் உள்ளபடி எமது உள்ளத்தையும் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்டு அதில் ஓர் இடத்தில் இளமையோடு எமது உள்ளத்தின் நாயகியாக தான் ஒருவளே வீற்றிருக்கும் வயிரவி தேவி பின்பு எமது உள்ளத்தின் தலைவியாகி இருக்கின்றாள். அதன் பிறகு உலகம் உடல் ஆசை பந்தம் பாசம் ஆகியவற்றின் மேலுள்ள பற்றிலிருந்து எமது உள்ளத்தை பிரித்து தனியாக்கி அதை நன்மையே உருவான இறைவனோடு சேர்ந்து இருக்க வைத்து எமது உள்ளம் முழுவதும் நன்மையே மிகுதியாக இருக்கும் படி செய்து இறைவன் வீற்றிருக்கும் எமது உள்ளத்தையே விரும்பி அங்கே வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1106

பாடல் #1106: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

நாடிகண் மூன்று ணடுவெழ ஞாளத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி யுறங்குகின் றேனே.

விளக்கம்:

பாடல் #1105 இல் உள்ளபடி எமது உள்ளத்தையே விரும்பி வீற்றிருக்கின்ற வயிரவியானவள் எமது உடலுக்குள் இருக்கும் இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று விதமான நாடிகளில் நடுவில் உயர்ந்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்தில் இருந்து தமது கால்களில் தண்டையை அணிந்து கொண்டு இருக்கும் இறைவனோடு சேர்ந்து நன்மைகளின் மொத்த உருவமாக இருக்கும் இறைவியும் தனது திருவடிகளில் தூய்மையான பொன்னாலான சிலம்புகளை அணிந்து கொண்டு ஆடிக்கொண்டே மேலேழுந்து வருகின்றாள். இவர்கள் இருவரின் ஆடலில் இருந்து வரும் ஓசை எமக்குள் முழுவதும் பரவி ஒலிக்க அதிலேயே லயித்து இருக்கின்றேன்.

பாடல் #1107

பாடல் #1107: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உறங்கு மளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கை கழுத்தாரப் புல்லி
உறங்கொளிர் தம்பலம் வாயி லுமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாவென் றுபாயந்தந் தாளே.

விளக்கம்:

பாடல் #1106 இல் உள்ளபடி தன்னை மறந்து ஆழ்நிலையில் லயித்து இருக்கும் போது வயிரவியானவள் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் மனோன்மணி எனும் அம்சமாக எமக்குள் வந்து மென்மையாக சத்தம் செய்யும் வளையல்கள் அணிந்த தமது திருக்கரங்களால் எமது கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு ஆழ்நிலையில் யாம் லயித்து இருக்கும் நிலையிலேயே எமது வாயில் தாம்பூலத்தை உமிழ்ந்து கொடுத்து விட்டு அனைத்தையும் மறந்த நிலையில் லயித்துக் கொண்டே இருக்காதே அடியவனே என்று கூறி எப்போதும் விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையையும் தந்து அருளினாள்.

கருத்து:

பாடல் #1106 இல் அனைத்தையும் மறந்த நிலையில் இறைவனும் இறைவியும் ஆடும் ஆட்டத்திலிருந்து வரும் ஓசையிலேயே லயித்து இருக்கும் எமக்கு இறைவனும் இறைவியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் அம்சமான மனோன்மணியானவள் எமது வாயில் அமிழ்தத்தை ஊட்டி அனைத்தையும் அறிந்த நிலையிலும் பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையை தந்தருளினாள்.

பாடல் #1108

பாடல் #1108: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உபாய மளிக்கு மொருத்தியென் னுள்ளத்
தபாய மறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளைக்குஞ் சுழியகத் துள்ளே
அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

விளக்கம்:

பாடல் #1107 இல் உள்ளபடி விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையை அருளிய இறைவி எமது உள்ளத்திற்குள் இருக்கும் பயம் பற்று ஆகிய அனைத்தையும் சுத்தமாக நீக்கி அருளி உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்டு எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் எமது மனதிற்குள் இருக்கும் ஆசையை அடக்கி வைத்து எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளினாள்.

பாடல் #1109

பாடல் #1109: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.

விளக்கம்:

பாடல் #1108 இல் உள்ளபடி எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளிய இறைவியானவள் செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற ஆரம்ப நிலையில் உணருகின்ற குழந்தை போன்ற பெண் தெய்வம் ஆவாள். அவள் சிறப்பான சொல்லை சொல்லும் மழலைப் பேச்சை உடையவள். மிகவும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவள். அவளைத் தஞ்சம் என்று எண்ணி அவளது மேன்மையான திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு பேரின்பத்தை வழங்கும் இனிமையான சொல்லை அளித்து அருளுவாள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

கருத்து:

செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்பவர்களுக்கு அவர்களை வழிநடத்துகின்ற இறைவியின் ஆரம்ப நிலையில் மென்மையான ஒலி கேட்கும். இந்த ஒலியானது தவம் செய்த சாதகர்களை அவள் அணியும் அழகிய ஆடை அணிகலன்களாக இருந்து காக்கின்றது. இந்த இறைவின் திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு உச்ச நிலையில் அவர்களுக்கு பேரின்பத்தை அருளும் அவளின் ஒலி கேட்கும். இதை அறிந்து உணர்ந்தவர்கள் அதை தகுதியானவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்.

பாடல் #1110

பாடல் #1110: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆருயி ராயு மருந்தவப் பெண்பிள்ளை
காரிய கோதையங் காரணி நாரணி
ஊரு முயிரு முலகு மொடுங்கிடுங்
கோரியென் னுள்ளம் குலாவிநின் றாளே.

விளக்கம்:

வயிரவி தேவியானவள் செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை ஆராய்ந்து செய்கின்ற யோகியர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் இளமையுடன் வெளிப்படுவாள். அவளே அனைத்தையும் செயல்படுத்தும் காரியமாகவும் அந்த செயல்களுக்கான காரணமாகிய இறைவனோடு சேர்ந்து இருந்து அனைத்து செயல்களுக்கும் சக்தியை கொடுப்பவளாகவும் இருக்கின்றாள். அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உலகங்களும் அதில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் அழிகின்ற காலத்தில் சென்று சேருகின்ற இடமாக அவளே இருக்கின்றாள். ஊழிக் காலத்தில் கோர உருவம் கொண்டு இருக்கும் அவளே எமது உள்ளத்திற்குள் சாந்த சொரூபியாய் மிகவும் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றாள்.

கருத்து:

அரிய தவங்களை செய்த யோகியர்களுக்கு கிடைக்கும் வயிரவி தேவியானவள் உலகத்தில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் காரண காரியமாக இறைவனுடன் சேர்ந்து இருக்கின்றாள். உலகங்களும் அதிலுள்ள உயிர்களும் ஊழிக்காலத்தின் சென்று சேரும் இடமாகவும் இருக்கின்றாள். இவளே எமது உள்ளத்தில் சாந்த சொரூபமாய் இருக்கின்றாள்.