பாடல் #1528

பாடல் #1528: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இரவும பகலு மிறநத விடததெ
குரவன செயகினற குழலியை யுனன
யரவஞ செயயாம லவளுடன செரப
பரிவொனறி லாளும பராபரை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்ன
அரவம் செய்யாமல் அவளுடன் சேர
பரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே.

பதப்பொருள்:

இரவும் (இரவு) பகலும் (பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும்) இறந்த (உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற) இடத்தே (சாதகரின் உள்ளத்தில்)
குரவன் (குரவம் எனும் மலரை) செய்கின்ற (பின்னியிருக்கின்ற) குழலியை (கூந்தலைக் கொண்ட இறைவியை) உன்ன (அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே)
அரவம் (எந்த விதமான ஆரவாரமும்) செய்யாமல் (செய்யாமல்) அவளுடன் (அவளோடு) சேர (சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால்)
பரிவு (தனது மாபெரும் கருணை எனும்) ஒன்றில் (அருளினால்) ஆளும் (சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்) பரா (பராவாகிய இறைவனும்) பரை (பரையாகிய இறைவியும்) தானே (சேர்ந்து இருக்கும் அருள் சக்தி).

விளக்கம்:

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.