பாடல் #893

பாடல் #893: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

விளக்கம்:

இறைவனை பல வகையான யோகத்தாலும் ஞானத்தாலும் தமக்குள் உணர்ந்து அடைந்த இறைவனை உணர்ந்து கொள்ளும் முறைகளாக யோகியர்களாலும் ஞானியர்களாலும் சொல்லப்படுகிறது. அவை அம் சம் என்கிற இரண்டு பீஜங்களும் ஓங்காரம் (ஓம்) பஞ்சாட்சரம் (நமசிவாய) எனும் இரண்டு ஆதார மந்திரத் தத்துவங்கள் அடங்கி இருக்கும் இறைவனின் சங்காரத் தாண்டவத்தின் அருளல் தொழிலுமாகிய இவை அனைத்தும் உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களிலும் பரவி இருக்கும் முறைகளும் ஆகும்.

பாடல் #894

பாடல் #894: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத் தாகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

விளக்கம்:

ஓங்காரத்தின் அகார உகாரங்களே சதாசிவ தத்துவமாகவும், எக்காலத்திலும் மாறாத ஆகமங்களாகவும், வண்டுகள் மகிழ்ந்து தங்கும் புன்னை மரம் போல் அடியவர்கள் மகிழ்ந்து தங்கும் சிவ பரம்பொருளின் சரணாகதி திருவடிகளாகவும் தில்லையில் ஆடும் திருக்கூத்தாகவும் ஆகமங்கள் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளாகவும் உலகங்கள் அனைத்திற்கும் பொதுவான தென்னாட்டு சிற்றம்பலத்தின் மலமாசுக்களை நீக்கும் பொன் மன்றமாகவும் இருக்கின்றன.

பாடல் #895

பாடல் #895: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

அமலம் பதிபசு பாசம் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தம்
அமலம் சொல்ஆணவ மாயை காமியம்
அமலம் திருக்கூத்தா டுமிடந் தானே.

விளக்கம்:

பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தை உணர்வது அமலமாகும். ஆகமங்களை உணர்வதின் மூலம் மாயையை நீங்கி கிடைக்கும் பேரானந்தம் அமலமாகும். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்று மலங்களும் இல்லாதது அமலமாகும். இறைவன் திருக்கூத்தாடுகின்ற இடங்களெல்லாம் மல மாசுக்கள் இல்லாத தூய்மையான அமலமாகும்.

குறிப்பு: ஆணவம் மாயை கன்மம் ஆகிய மாசுக்கள் இல்லாத தூய்மை அமலம் எனப்படும்.

பாடல் #896

பாடல் #896: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மலையு மாய்நிற்குந்
தானே தனக்குத் தன்மயமு மாய்நிற்குந்
தானே தனக்குத் தலைவனு மாய்ஆமே.

விளக்கம்:

இறைவன் தனக்குத் தானே குருவாக நின்றும் அனைத்தையும் தாங்கி தன்னையும் தாங்கி நிற்கும் மலையாக நின்றும் அனைத்திலும் பரவி தனக்குள்ளும் பரவி நின்றும் தனக்கு தானே இறைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் தனக்குத் தானே என்னவாகவெல்லாம் இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #897

பாடல் #897: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனான இறைவன் அனைத்திற்கும் மேலான திருக்கூத்தின் தலைவனாகவும் அனைத்தையும் தாங்கி நிற்கும் சத்திய பாத்திரத்தின் தலைவனாகவும் பேரறிவான ஞானத்தின் தலைவனாகவும் இணையில்லாத திருவடிகளுக்கு தலைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் எதற்கெல்லாம் தலைவனாக இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #898

பாடல் #898: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

விளக்கம்:

ஈடுஇணையில்லாத இறைவனின் திருவடிகளின் உருவமே அகாரம் உகாரம் மகாரம் எனும் மூன்று எழுத்துக்கள் சேர்ந்த ஓங்காரமாகவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரமாகவும் இருக்கின்றது. அந்தத் திருவடிகளே உயிர்களின் உடலுக்குள் பத்துவித காற்றுக்களாகவும் மொத்தம் 51 இதழ்கள் கொண்ட ஆறு ஆதார சக்கரங்களின் 51 யோக நாடிகளாகவும் ஆதார ஏழாயிரத்திலிருந்து அதன் பரிணாமங்களில் மொத்தம் ஏழு கோடி வரையிலும் இருக்கும் மந்திரங்களாகவும் இருக்கின்றன.

குறிப்பு: இறைவனுடைய இணையில்லாத திருவடிகள் எதுவாகவெல்லாம் இருக்கின்றது என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

பாடல் #899

பாடல் #899: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாக இருக்கின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #898 ல் உள்ளபடி ஆதார மந்திரங்கள் ஏழாயிரமாக இருந்தாலும் அதன் பரிணாமங்கள் இருபதாயிரமாகவும் முப்பதாயிரமாகவும் பெருகி முடிவில் ஏழு கோடி வரையில் இருக்கின்றது. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் சொரூபமாகவே இருக்கின்றது. ஆதாரமான இந்த ஏழாயிரம் மந்திரங்களே ஏழு கோடி மட்டுமில்லாமல் இன்னும் பல பரிணாமங்களில் எண்ண முடியாத அளவு பெருகிக் கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அத்தனை மந்திரங்களும் அகார உகாரமாகிய சிவசக்தியிலேயே அடங்கி இருக்கின்றன.

பாடல் #900

பாடல் #900: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற மந்திரங்கள் ஏழாயிரமாகும். இந்த மந்திரங்களுக்குள் இல்லாத சக்திகளே இல்லை. இந்த மந்திரங்கள் அனைத்தும் இறைவனின் திரு உருவமாக இருக்கின்றது. உள்ளம் உருக சொன்னால் பலனளிக்கக் கூடியதாக இருக்கும் அனைத்து மந்திரங்களும் இறைவனின் திருஉருவமாகவே இருக்கின்றன.

பாடல் #578

பாடல் #578: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தப் பழகுதல்)

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

விளக்கம்:

வெளியே சென்று ஓடுகின்ற மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி விட்டால் இறைவனுடைய எட்டுவித குணங்களை நமக்குள்ளே உணரலாம். அவ்வாறு உள்ளே மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்து இருந்தால் ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைக் கற்றறிந்தவர்களால் தமக்குள் தேடப்பட்ட இறைவனை அப்பொழுதே நமக்குள் கண்டு உணரலாம்.

இறைவனின் எட்டுவித குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல், 2. தூய உடம்புடைமை, 3. அளவிலா ஆற்றல் உடைமை, 4. பாசங்களில் இருந்து நீங்கியிருப்பது, 5. பேரருள் உடைமை, 6. இயற்கை உணர்வு கொண்டிருத்தல், 7. முக்காலத்தையும் உணர்ந்திருத்தல், 8. அளவிலா ஆனந்தம் உடைமை)

பாடல் #564

பாடல் #564: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.

விளக்கம்:

உடலின் ஐம்புலன்களான 1. பார்த்தல், 2. கேட்டல், 3. முகர்தல், 4. சுவைத்தல், 5. தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் வைத்துள்ள உடம்பின் தலைவனாக இருக்கக்கூடிய ஆத்மாவானது இறைவனை அடைய மேல் நிலைக்கு செல்ல மனதுடன் மூச்சுக்காற்று ஒன்று உள்ளது, அந்த மூச்சுக்காற்று பயிற்சி செய்து உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு மனதை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவறை நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.